search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம மோகனராவின் பாஸ்போர்ட்டை முடக்க திட்டம்: வருமானவரித்துறை
    X

    ராம மோகனராவின் பாஸ்போர்ட்டை முடக்க திட்டம்: வருமானவரித்துறை

    வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வருமானவரித்துறை திட்டமிட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வரிஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் ஒழிப்பு குறித்து வருமானவரித்துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கத்தில், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் மற்றும் வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகங்களில் இரவு, பகலாக அதிகாரிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த அலுவலகங்களில், கடந்த சில நாட்களாகவே வெளிமாநில அதிகாரிகள் வருவதும், கூட்டங்களில் பங்கேற்பதும், பிறகு திரும்பி செல்வதுமாக இருக்கிறது.

    வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த அலுவலகத்தின் வெளியே எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக் வீட்டில் பறி முதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, வருமான வரித்துறை விவேக் உள்ளிட்டோருக்கு ‘சம்மன்’ அனுப்பியிருந்தது. ஆனால் தன்னு டைய மனைவியின் உடல்நிலையை காரணம் கூறி விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டு இருந்தார்.

    இந்த கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் குழுவினர், விவேக்கிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று காத்து இருந்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவர் ஆஜராகவில்லை.

    தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் ராம மோகன ராவ் அவருடைய மகன் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சேகர் ரெட்டி மற்றும் விவேக் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது மற்றும் பல்வேறு முறைகேடுகள் குறித்த வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்துவதற்காக வருமானவரித்துறை 140 இந்திய வருவாய் பணிகள் (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரிகளை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் களம் இறக்கி உள்ளது. எந்த நேரத்திலும் சோதனை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு அந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சோதனை நடத்துவதற்காக ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வாகனங்களில் அதிகாரிகள் வந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் 2 கார்கள், ராம மோகன ராவ் மகன் விவேக் ஆகியோரின் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 0005 என்ற எண்ணை ராசி எண்ணாக கருதி பெற்றுள்ளனர். இந்த கார்கள் சென்னை மற்றும் கரூர் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

    வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “ராம மோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோருடைய வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் மருத்துவ காரணங்களை கூறுவதால் இருவரையும் முறையாக விசாரிக்க முடியவில்லை. எனவே விவேக்கிற்கு மீண்டும் நினைவூட்டும் கடிதம் அனுப்பி உள்ளோம். நாளை (இன்று) விசாரணைக்கு வருவார் என்று நம்புகிறோம்.

    ராமமோகன ராவும், அவரது மகன் விவேக்கும் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக இருவருடைய பாஸ்போர்ட்டுகளையும் முடக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர். 
    Next Story
    ×