search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது

    ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் சேலத்தில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் பல மடங்கு குறைந்து தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    பண்டைய காலம் முதல் இன்று வரை உலகம் முழுவதும் மக்களின் முக்கிய பொழுது போக்காக திகழ்வது சினிமாக்கள் தான்.

    புதிய சினிமாக்கள் வெளியாகும் போதும், பிரபல நடடிகர்கள் நடித்த படம் வெளியாகும் போதும் தியேட்டர்களில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்க முடியும்.

    பிரபல நடிகர்கள் நடிக்கும் சினிமாக்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் நீண்ட வரிசையில் ரசிகர்கள் முதல் நாளே காத்து நின்று டிக்கெட் எடுப்பதையும் பார்க்க முடிந்தது.

    இதனால் குடும்பத்துடன் செல்பவர்கள் டிக்கெட் கிடைக்காமல் சோகத்துடன் திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட்களை எடுத்து குறிப்பிட்ட நாட்களில் சிலர் சினிமா பார்த்து வந்தனர்.

    சேலம் மாநகரில் 3 ரோட்டில் ஏ.ஆர்.ஆர். மல்டி பிளக்ஸ் தியேட்டர், குகையில் ராஜசபரி, கே.எஸ் தியேட்டர், பழைய பஸ்நிலையம் அருகில் கைலாஷ்,பிரகாஷ், சங்கீத், கீதாலாயா, சங்கம், ராஜேஷ்வரி, 5 ரோடு கவுரி, கோரி மேடு பச்சையம்மன்,

    அம்மாபேட்டை சரஸ்வதி, எருமாபாளையம் ரோட்டில் தேவி, கொண்டலாம்பட்டி பைபாசில் திவ்யா, செவ்வாய்ப்பேட்டையில் ஜெயராம் தியேட்டர் உள்பட 20-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தற்போது இயங்கி வருகிறது. 4 காட்சிகள் திரையிடப்படும் இங்கு சினிமா பார்க்க எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

    இந்த தியேட்டர்களில் சின்னத் தம்பி, கரகாட்டக்கரன் உள்பட பல சினிமாக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ரசிகர்களின் அமோக ஆதரவோடு ஓடியதையும் ஒரு காலத்தில் பார்க்க முடிந்தது.

    இந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் சேலத்தில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் பல மடங்கு குறைந்து தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பல தியேட்டர்களில் 4-ல் ஒரு பங்குக்கும் கீழே கூட்டம் குறைந்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மின்சாரம் உள்பட செலவுக்கே வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    சில்லரை தட்டுப் பாட்டால் கேண்டீன்களும் வெறிச் சோடியே காணப்படுகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். இதே நிலைதான் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர் களிலும் நீடிக்கிறது.

    ஆத்தூரில் என்.எஸ்., கேசவன், பத்மாலயா, பிரியாலயா, விஸ்வநாத் ஆகிய 5 தியேட்டர்கள் உள்ளன. ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு தான் சினிமா பார்க்க வருவார்கள். கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்கள் மற்றும் நாட்டாமை, கரகாட்டக்காரன் உள்பட பிரபல நடிகர்களின் படங்கள் 1 ஆண்டுக்கும் மேலே ஓடி சரித்திரம் படைத்த கதைகளும் உண்டு.

    வாரம் முழுவதும் உழைத்து விட்டு சனி, ஞாயிற்று கிழமைகளில் படம் பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்து விடுவார்கள். அந்த நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்களும், பொதுமக்களும் பெரிதும் அவதிபட்ட காலமும் உண்டு.

    தற்போது ரூ.500, ரூ.1000 பிரச்சனையால் யாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை.அப்படியே வந்தாலும் புதிய 2000 ஆயிரம் ரூபாயை கொண்டு வருவதால் சில்லரை கொடுக்க முடியாமல் நிர்வாகத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மின்கட்டணம் கட்ட கூட வருமானம் இல்லாததால் ஆத்தூர் தியேட்டர்களில் பல நாட்கள் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

    இது தொடர்பாக தியேட்டர் மேலாளர் ரவி கூறும்போது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் தியேட்டருக்கு கூட்டம் வரும். ஆனால் தற்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரச்சனையால் கூட்டம் வருவதில்லை. 5 தியேட்டர்களிலும் தலா 10, 12 பேர் என மொத்தம் 50 பேர் தான் படம் பார்க்கின்றனர்.

    இதனால் மின் கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 4 நாட்கள் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

    Next Story
    ×