search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 3 பவுன் நகை-பைக் திருட்டு
    X

    திருவண்ணாமலை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 3 பவுன் நகை-பைக் திருட்டு

    கல்லூரி பேராசிரியர் வீட்டில் 3 பவுன் நகை- பைக்கை மர்ம கும்பல் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 49). அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றார்.

    ஜெய்சங்கரின் மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாதி மங்கலத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலையில், ஜெய்சங்கரின் வீட்டு கதவு திறந்திருந்தது. பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் போன் மூலம் ஜெய்சங்கருக்கு தகவல் கொடுத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அவர் விரைந்து வந்தார். வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பைக் திருடு போனதை கண்டு ஜெய்சங்கர் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஜெய்சங்கர், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×