search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: கைதான வாலிபருக்கு நிபந்தனை அடிப்படையில் இடைக்கால ஜாமீன்
    X

    குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: கைதான வாலிபருக்கு நிபந்தனை அடிப்படையில் இடைக்கால ஜாமீன்

    குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவருக்கு செமஸ்டர் தேர்வு எழுதும் விதமாக இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி அதிகாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில் ஆட்டோக்கள் அனைத்தும் சேதமடைந்தது மட்டுமல்லாமல், அந்த ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இதில், ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.

    இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சொகுசு காரை ஓட்டி வந்த விகாஷ் ஆனந்த் (வயது 22), அவருடன் காரில் வந்த சரண்குமார் (36) ஆகியோர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், விகாஷ் ஆனந்த் தனக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டம் படித்து வருவதாகவும், தனக்கு வருகிற 7-ந்தேதி (இன்று) முதல் வருகிற 18-ந்தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதனால், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, ‘விகாஷ் ஆனந்த் சட்டப்படிப்புக்கான செமஸ்டர் தேர்வை எழுதும் விதமாக வருகிற 7-ந்தேதி (இன்று) முதல் 20-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன். சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய பின்னர், 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அதே கோர்ட்டில் சரணடைய வேண்டும். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×