search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் கார் டிரைவர் கொலையில் 3 பேர் கைது
    X

    திருவாரூர் கார் டிரைவர் கொலையில் 3 பேர் கைது

    திருவாரூர் கார் டிரைவர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது 34)வாடகை கார் டிரைவர். அய்யனார் கடந்த 15-ந் தேதி கொடைக்கானல் மலைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கொடைக்கானல் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் திருவாரூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவாரூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வம் (26), கண்மணி (26), மத்தீஸ் (52) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அய்யனாரை அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்கள் 3 பேரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 3 பேரும் கொடைக்கானல் செல்ல வேண்டும் என்று கூறி அய்யனாரை கடந்த 15-ந் தேதி அழைத்து சென்றோம். கொடைக்கானலில் வைத்து அய்யனாரை கொலை செய்தோம். பின்னர் இதுபற்றி யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக அவரது உடலை மலைபகுதியில் வீசி விட்டு காரை கடத்தி சென்றோம். பின்னர் காரை கோபிசெட்டிபாளையத்தில் மறைத்து வைத்திருந்தோம். இதற்கிடையில் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவாரூர் போலீசார் நன்னிலம் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×