search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மகளிருக்கான சேவை மையம்
    X
    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மகளிருக்கான சேவை மையம்

    தாய்மார்கள் பாலூட்டுவதற்கு தனி அறை: சென்டிரலில் மகளிருக்கான சேவை மையம்

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மகளிருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
    சென்னை:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மகளிருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பெண் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

    தென் மண்டல ரெயில்வேக்கான புதிய கால அட்டவணையை கடந்த 30-ந்தேதி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறும்போது, ‘சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மகளிருக்கான சேவை மையம் திறக்கப்பட உள்ளது’ என்றார். அதன்படி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதிக்கு அருகில் நேற்று முன்தினம் ‘மகளிர் சேவை மையம்’ திறந்து வைக்கப்பட்டது.

    இதில் பெண் பயணிகளுக்கு என்று பிரத்தியேகமான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் ரெயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் கூட்டத்தின் மத்தியில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டுவார்கள்.

    அந்த தயக்கத்தை போக்கும் வகையில் இந்த சேவை மையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    அதுமட்டுமில்லாமல் பெண் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கியதும் பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்புவதற்கு ஆட்டோ மற்றும் கால்டாக்சி வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.

    இந்த திட்டத்துக்கு பெண் பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதுகுறித்து பெண் பயணிகள் கூறும்போது, ‘இன்றைய உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வெளியில் சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்புவதற்குள் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். சென்டிரல் ரெயில் நிலையத்தில் மகளிர் பயணிகளுக்கு என்று சேவை மையம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். நிச்சயமாக இது வரவேற்கத்தக்கது’ என்றார்.

    மகளிருக்கான சேவை மையத்தில் கிடைக்கும் சேவைகள் என்னென்ன? என்ற விவரம் வருமாறு:-

    * பிரீ-பெய்டு ஆட்டோ மற்றும் கால் டாக்சி மூலம் பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவது.

    * தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறை.

    * வயது முதிர்ந்த பெண் பயணிகள் ரெயிலில் ஏற செல்வதற்கு சக்கர நாற்காலிகள்.

    * பெண் பயணிகளுக்கு ரெயில் பயணத்தின் போது ஏற்படும் எந்தவிதமான புகார் களையும் தெரிவிக்க வசதி.

    * ரெயில் சேவை குறித்த அனைத்து விதமான தகவல்களை பெறும் வசதி.

    இந்த சேவை மையத்தை ரெயில்வேயின் வணிக பிரிவு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை(ஆர்.பி.எப்.) இணைந்து செயல்படுத்துகிறது. இதுகுறித்து வணிக பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெண் பயணிகளுக்கு என்று பிரத்தியேகமான சேவை மையமாக இது திகழ்கிறது. 24 மணி நேரமும் இந்த சேவை மையம் செயல்படும். 2 வணிக பிரிவு ஊழியர்கள் மற்றும் ஒரு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் என ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் சேவை மையத்தில் பணியாட்கள் மாறி மாறி பணிபுரிவார்கள்.

    பிரீ-பெய்டு ஆட்டோ மற்றும் கால்டாக்சி தேவைப்படும் பெண்கள் இங்கு வந்து தொடர்பு கொண்டால், நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவோம். அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்குள் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் அவர்களுடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவோம். அவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்பியதும் பயணத்தின் அனுபவம் குறித்து கேட்டு பதிவு செய்வோம். இந்த சேவை மையத்தை 044-25346169 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×