என் மலர்
செய்திகள்

மதுபோதையில் தகராறு கணவரை கொன்று நாடகமாடிய தாய் - மகன் கைது
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் முட்டக் கரையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 55). இவரது மனைவி சுனிதா, இந்த தம்பதியின் மகன் நந்தகுமார்.
சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி சுனிதாவிடம் தகராறு செய்து வந்தார். இதை தட்டிக்கேட்டபோது சுனிதாவுக்கு அடி, உதை விழுந்தது.
தந்தை குடித்துவிட்டு வந்து தாயை கொடுமைப்படுத்துவதை மகன் நந்தகுமார் கண்டித்தார். ஆனாலும் சதீஷ்குமார் தனது பழக்கத்தை கைவிட வில்லை.
இந்த நிலையில் சதீஷ்குமார் வீட்டில் இறந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சதீஷ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சுனிதாவும் நந்தகுமாரும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.
மேலும் சதீஷ்குமாரின் இறுதிச்சடங்கையும் வேகமாக நடத்த ஏற்பாடு செய்தனர்.
இது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சதீஷ்குமாரை அவரது மனைவியும் மகனும் சேர்ந்தே கொன்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. குடித்துவிட்டு வந்து அவர் தகராறு செய்ததால் அவரை தீர்த்துக்கட்டியதும் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.