search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீனஸ், எரி நட்சத்திரங்களை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோளை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் பேட்டி
    X

    வீனஸ், எரி நட்சத்திரங்களை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோளை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் பேட்டி

    வீனஸ், எரி நட்சத்திரங்களை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்.
    சென்னை:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி- எப் 05 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன்பின்னர் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 3-வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

    அதில், ‘ஜி-சாட்-11’ போன்ற தகவல் தொடர்புக்கான செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வர்த்தகரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டும் அதிக எடையை தாங்கி செல்வதால் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ‘இன்சாட்-3 டி.ஆர்’ செயற்கைகோள் மூலம் சூரிய கதிர்களை படம் எடுப்பதற்கு உதவுகிறது. குறிப்பாக விண்வெளியில் இரவு நேரங்களில் ஒரு கி.மீ. முதல் 10 கி.மீ. வரை படங்களை தெளிவாக எடுப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவிக்கரமாக இருக்கும்.

    அதேபோன்று கடல் மேல் உள்ள காற்றின் தன்மையை துல்லியமாக கண்டறிவதன் மூலம் சூறாவளி காலங்களில் புயல் கரையை கடக்கும் பகுதியை துல்லியமாக நாம் கண்டுபிடிக்க முடியும்.

    ‘பி.எஸ்.எல்.வி. ஜி-35’ ராக்கெட் மூலம் 8 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. குறிப்பாக காலநிலையை பற்றி அறிவதற்காக கேட்-சாட் செயற்கைகோளும், 2 மாணவர்களுக்கான செயற்கைகோள், 5 வர்த்தக ரீதியிலான செயற்கைகோளும் அனுப்பப்படுகிறது. இந்த 8 செயற்கைகோளும் வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    கிரையோஜெனிக் என்ஜின் தோல்வி காரணமாக படிபடியாக நாங்கள் முன்னேறி தற்போது கிரையோஜெனிக் என்ஜினை திறமையாக விண்ணில் அனுப்பி பெரிய பாடம் கற்றுள்ளோம்.

    மார்க்-3 ராக்கெட் மூலம் இரண்டு மடங்கு சக்தி கொண்ட கிரையோஜெனிக் என்ஜினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று எடை குறைவான வர்த்தகரீதியான செயற்கைகோளை புவிவட்ட பாதையில் நிலைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து ஜி ஐ-சாட் செயற்கைகோள் பூமி ஆய்வுக்காகவும், சந்திராயன்-2, ஆதித்யா மற்றும் மார்க்-2 விஷன் மற்றும் இஸ்ரோ-நாசா இணைந்து ஒரு செயற்கைகோளையும் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

    அதுபோன்று மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கு முறையாக அரசு அனுமதிக்கும் அளிக்கும்பட்சத்தில் அதற்கான பணியில் ஈடுபடுவோம். அதுவரையில் ஆய்வு பணிகள் நடந்து வரும். தொடர்ந்து வீனஸ்(வியாழன் கோள்), எரி நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தனியாக ஒரு செயற்கைகோளையும் விண்ணில் அனுப்ப ஆய்வு செய்து வருகிறோம்.

    ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். என்ற செயற்கைகோள் விண்ணில் அனுப்பப்பட்டு அதன் மூலம் ஆட்டோ ரிக்‌ஷாவில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு வணிக நிறுவனங்கள் வருமானம் பார்த்து வருகின்றன. இதுதவிர போக்குவரத்து, ரெயில்வே துறை இந்த செயற்கைகோள் மூலம் தகவல் பெறுகின்றன. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைகோள் ரிசீவர் சந்தைகளில் கிடைக்கிறது. மேலும் இதற்கான புதிய முதலீட்டாளர்களை கண்டுபிடிப்பதுடன், அனைத்து பகுதிகளில் இந்த ரிசீவர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×