search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சு அருணாசலம், நடிகை ஜோதி லட்சுமி மறைவு - தமிழ் திரைப்பட துறையினருக்கு பேரிழப்பு: ஜெயலலிதா இரங்கல்
    X

    பஞ்சு அருணாசலம், நடிகை ஜோதி லட்சுமி மறைவு - தமிழ் திரைப்பட துறையினருக்கு பேரிழப்பு: ஜெயலலிதா இரங்கல்

    பஞ்சு அருணாசலம், நடிகை ஜோதி லட்சுமி மறைவு தமிழ் திரைப்பட துறையினருக்கு பேரிழப்பாகும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பஞ்சு அருணாசலம், நடிகை ஜோதி லட்சுமி மறைவு தமிழ் திரைப்பட துறையினருக்கு பேரிழப்பாகும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பிரபல திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான ஜோதிலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    ஜோதிலட்சுமி 1963-ம் ஆண்டில் வெளி வந்த 'பெரிய இடத்துப் பெண்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நான் நடித்த 'அடிமைப்பெண்', 'நீரும் நெருப்பும்', 'தேடிவந்த மாப்பிள்ளை', 'கலாட்டா கல்யாணம்' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இவர் கடினமான உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.

    ஜோதிலட்சுமியின் மறைவு திரைப்படத் துறையினருக்குப் பேரிழப்பாகும். ஜோதிலட்சுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  

    பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான பஞ்சு அருணாசலம் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்ததும் நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    பஞ்சு அருணாசலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த 'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் 'என்னை மறந்ததேன்....', 'பொன்னெழில் பூத்தது....' ஆகிய பாடல்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சிறந்த திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

    நான் நடித்த 'அவன் தான் மனிதன்' திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான பஞ்சு அருணாசலம் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும்.  
    பஞ்சு அருணாசலத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
    Next Story
    ×