search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே கணவரை தாக்கி மனைவியிடம் 12 பவுன் கொள்ளை
    X

    சாத்தான்குளம் அருகே கணவரை தாக்கி மனைவியிடம் 12 பவுன் கொள்ளை

    சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து கணவரை தாக்கி, பஞ்சாயத்து தலைவியிடம் 12 பவுன் நகைகளை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சாத்தான்குளம் :


    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 45). இவர் பக்கத்து ஊரான பேய்க்குளத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி விஜயலட்சுமி (42). இவர் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவில் ஸ்ரீதர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அதிகாலை 3 மணியளவில் 3 பேர், இரும்பு கம்பியால் ஸ்ரீதர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை நைசாக உடைத்து திறந்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் இரும்பு கம்பியால், ஸ்ரீதரின் தலையில் பலமாக தாக்கினர். பின்னர் இரும்பு கம்பியால் அவரது கழுத்தை நெரித்தனர். இதனால் ஸ்ரீதர் மயங்கி விழுந்தார்.

    மற்றொரு நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்தார். பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனே விஜயலட்சுமி ‘திருடன் திருடன்‘ என்று கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    படுகாயம் அடைந்த ஸ்ரீதர் உடனடியாக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ், சாத்தான்குளம் துணை சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஸ்ரீதரின் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பஞ்சாயத்து தலைவியை தாக்கி நகைபறித்த 3 மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×