search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
    X

    கொடைக்கானல் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

    கொடைக்கானல் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தனர். விவசாயி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொடைக்கானல்:

    நாமக்கல் மாவட்டம் வடவத்தூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் சுப்பிரமணி (வயது36) விவசாயி. இவரது மனைவி கவுசல்யா(34). இவர்களது மகள்கள் ஜனனி (14) 9-ம் வகுப்பு படித்து வந்தார். இனியா (11) 6-ம் வகுப்பு படித்து வந்தார். சுப்ரமணி நேற்று முன்தினம் மனைவி மகள்களுடன் கொடைக்கானல் வந்தார்.

    கோக்கர்வாக்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். 2 தினங்களாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் சுப்பிரமணி அறையில் இருந்து அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்தார். சத்தம் கேட்டு லாட்ஜில் தங்கியிருந்தவர்கள் எழுந்து வந்தனர். குடும்பத்தோடு தற்கொலை செய்ய வி‌ஷம் குடித்துவிட்டதாக கூறினார்.

    லாட்ஜ் ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது கவுசல்யா, ஜனனி, இனியா ஆகிய 3 பேரும் இறந்து கிடந்தனர்.

    கவுசல்யா உடல் தூக்கில் தொங்கியவாறு கிடந்தது. உடனடியாக கொடைக்கானல் போலீசுக்கு தகவல் தெரிவித்னர்.

    இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருக்கும் சுப்ரமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் டி.எஸ்.பி சந்திரன் நடத்திய விசாரணையில் 3 வருடங்களுக்கு முன் ரூ.6 லட்சம் கடன் வாங்கி சொந்த இடத்தில் வீடு கட்டினேன். தற்போது உறவினர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என பிரச்சினை செய்கிறார்கள்.

    இதனால் மனமுடைந்த நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தோம்.

    கொடைக்கானல் வந்த நாங்கள் அனைவரும் சேர்ந்து வி‌ஷம் குடித்தோம். பின்னர் என் மனைவி தூக்கில் தொங்கினார். சிறிது நேரத்தில் உயிர்பயத்தில் கத்தினேன். அதற்குள் மனைவி, மகள்கள் 3 பேரும் இறந்து விட்டனர் என்றார்.

    சுப்பிரமணி அளித்த இந்த தகவல்கள் உண்மையா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணி தற்போது மயக்க நிலையில் உள்ளதால் அவரிடமிருந்து வேறு எந்த தகவலும் பெற முடியவில்லை.

    Next Story
    ×