search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் தங்கியுள்ள 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்
    X

    தமிழகத்தில் தங்கியுள்ள 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்

    சென்னை, மதுரை, திருச்சி முகாம்களில் இருந்து 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.

    சென்னை:

    இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கையில் தற்போது இயல்புநிலை திரும்புவதை தொடர்ந்து இலங்கை அகதிகள் தாயகம் திரும்புகிறார்கள்.

    தற்போது இந்தியாவில் உள்ள 109 முகாம்களில் 64,000 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மத்தியஅரசும், தமிழகஅரசும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி என பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் இன்று 75 தமிழ் அகதிகள் இலங்கை திரும்புகிறார்கள். மதுரையில் இருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் விமானம் மூலம் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.

    திருச்சியில் இருந்து 31 பேரும் சென்னையில் இருந்து 15 பேரும் விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திரிகோணமலை, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

    இவர்களுக்கு ஐ.நா. சபையின் அகதிகள் பிரிவு தூதரகம் இலவச விமான டிக்கெட்டுடன் ஒவ்வொருவருக்கும் மீள் குடியமர்வு செலவு ரூ.5014 போக்குவரத்து செலவு ரூ.1270, ஒவ்வொரு குடும்பத்துக்கும் உணவு மானியமாக தலா ரூ.1270 வீதம் வழங்கப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 870 குடும்பங்களைச் சேர்ந்த 1,770 அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர். இலங்கை திரும்ப விரும்புவோர் முறைப்படி இலங்கை துணை தூதரகத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். பாஸ்போர்ட்டுகளை தவறவிட்டு இருந்தால் புதிய பாஸ் போர்ட்டுகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    பூந்தமல்லி முகாமில் தங்கியுள்ள எஸ். அன்பரசன் கூறுகையில், நான் 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தேன். எனது உறவினர்கள் மன்னாரில் உள்ளனர். தற்போது இங்கு அமைதி திரும்பியதால் சொந்தஊர் திரும்புகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் புதிய அனுபவமாக இருக்கிறது என்றார்.

    Next Story
    ×