search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.என்-32 ரக ராணுவ விமானம் மாயமான விவகாரம்: சாகர் நிதி கப்பல் மூலம் வங்கக்கடலில் தேடுதல் வேட்டை
    X

    ஏ.என்-32 ரக ராணுவ விமானம் மாயமான விவகாரம்: சாகர் நிதி கப்பல் மூலம் வங்கக்கடலில் தேடுதல் வேட்டை

    ஏ.என்.-32 ரக ராணுவ விமானம் மாயமான விவகாரத்தில், வங்கக்கடலில் Ôசாகர் நிதிÕ கப்பல் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
    சென்னை:

    ஏ.என்.-32 ரக ராணுவ விமானம் மாயமான விவகாரத்தில், வங்கக்கடலில் 'சாகர் நிதி' கப்பல் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 22-ந் தேதி காலை அந்தமான் போர்ட்பிளேர் நோக்கி புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக விமானம் மாயமானது. இந்த விமானத்தில் பயணித்த விமானிகள், சிப்பந்திகள், வீரர்கள் உள்பட 29 பேரின் கதி என்ன? என்பது இன்றுவரை தெரியாமல் உள்ளது.

    எனவே மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் டோர்னியர் விமானங்களும், சரக்கு விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. வங்காள விரிகுடா கடல் முழுவதும் தேடுதல்-மீட்பு பணியில் முழுவீச்சில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் இடம் வங்கக்கடலின் மையப்பகுதி ஆகும். இந்த பகுதியில் கடலின் ஆழம் 4.1 கி.மீ. ஆகும். எனவே தேடுதல் வேட்டையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான 'சாகர் நிதி' கப்பலை தேடுதல் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 4-ந் தேதி தேடுதல் வேட்டை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களாலும், தட்பவெப்ப சூழ்நிலையாலும் 'சாகர் நிதி' கப்பல் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை. இந்தநிலையில் சாதகமான அம்சங்கள் நிலவியதால் மொரிஷியஸ் தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்த 'சாகர் நிதி' கப்பல் நேற்று முன்தினம் முதல் வங்கக்கடல் மையப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.  

    'சாகர் நிதி' கப்பல் பல விஷேச தன்மைகளை கொண்டது. நீரில் பல்வேறு கோணங்களில் கதிர்வீச்சுகளை உமிழும் தன்மை கொண்டது. இந்த கப்பலில் (ஓ.ஆர்.வி.) ஓசன் ரிசர்ச் வெகிகில், ஆளில்லா நீர்மூழ்கி படகு, சோனா கதிர் எந்திரம் உள்ளிட்ட சிறப்பு தன்மைகள் இருக்கிறது.

    ஓ.ஆர்.வி. என்பது ஒரு பலூன் போன்ற அமைப்பு. இது சுமார் 2 கி.மீ. வரை கடலுக்குள் சென்று, திரும்ப பழைய இடத்துக்கே வரும். இடையில் தொடக்கூடிய பொருட்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும். கதிர் வீச்சுகள் உமிழப்படும்போது மோதக்கூடிய பொருட்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

    4.1 கி.மீ ஆழமுள்ள வங்கக்கடல் பகுதியில் 'சாகர் நிதி' கப்பலுடன் இணைந்து, இந்திய புவிசார் ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான 'சமுத்ரா ரத்னாகர்' கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளன. சவாலான இந்த தேடுதல் வேட்டையில் நிச்சயம் நம்பிக்கையுடன் பணி நடந்து வருகிறது.

    ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடலில் பல கி.மீ. ஆழத்துக்கு சென்று சோதனை நடத்தும் வகையில் நவீன கப்பல்கள் உள்ளன. எனவே இந்த நாடுகளின் உதவியை கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும் சில நாட்களில் மாயமான விமானத்தை கண்டுபிடித்துவிடுவோம் என்று கடலோர காவல்படையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×