search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    தனித்து போட்டியிட்டு 234 தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய நாம் தமிழர் கட்சி

    நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே தான் களம் கண்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து களத்தில் போட்டியிட்டு வருகிறது.
    சென்னை:

    234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தோல்வியை தழுவியது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 48 ஆயிரத்து 597 வாக்குகளை பெற்றார்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அ.ம.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்பட கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. பெரும்பான்மையான கட்சிகள் கூட கூட்டணி வைத்து தான் இந்த தேர்தலை சந்தித்தன. ஆனால் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல இந்த முறையும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

    நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே தான் களம் கண்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து களத்தில் போட்டியிட்டு வருகிறது. அந்தவகையில் 2016-ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 1.10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

    அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதியிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை களம் இறக்கியது. இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக சுமார் 17 லட்சம் வாக்குகளை பெற்றாலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

    இவ்வாறாக தனித்தே போட்டியிட்டு மற்ற கட்சிகளை திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி களம் கண்டது. அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட முத்திரையை பதிக்க முடியவில்லை. அனைத்திலும் தோல்வியை தழுவியது. இருப்பினும், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு அடுத்த இடத்தில் (3-வது இடம்) இடம்பிடித்து இருந்ததை பார்க்க முடிந்தது. இளம் தலைமுறை வாக்காளர்களில் பெரும்பாலானோரின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு பதிவாகி இருப்பது ஒரு தகவலாக கூறப்படுகிறது.

    இதில் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 48 ஆயிரத்து 597 வாக்குகளை அவர் பெற்றார்.
    Next Story
    ×