search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    3-வது நாளாக இன்றும் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் உடன், தி.மு.க. வேட்பாளர்கள் 120 பேர் சந்திப்பு

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. 173 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

    கடந்த 6-ந்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின்
    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ந்தேதி வரையிலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திர மையங்களை கவனமாக பாதுகாக்கவேண்டும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் மு.க. ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சந்தித்தனர்.

    அப்போது அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் உடன் இருந்தனர். தேர்தலில் தாங்கள் மேற்கொண்ட பணிகள் என்ன?, தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?, தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேர்தலில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக கண்காணிப்பு பணிகள் செய்யப்படுகிறதா? என்பது குறித்து மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர்.

    மு.க.ஸ்டாலினை 2-வது நாளாக நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் 120-க்கும் மேற்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள், தங்கள் மாவட்ட செயலாளர்களுடன் சந்தித்தனர். அப்போது, தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    இன்று (சனிக்கிழமை) தொடர்ச்சியாக 3-வது நாளாக மு.க.ஸ்டாலினை, தி.மு.க. வேட்பாளர்கள் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்திக்க உள்ளனர்.
    Next Story
    ×