search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X
    அமைச்சர் கடம்பூர் ராஜூ

    தேர்தல் தோல்வி பயத்தால் என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

    எனது டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டவில்லை என்றால் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்பட்டி தொகுதியில் நேற்றிரவு அ.தி.மு.க., அ.ம.மு.க. இரு தரப்பிலும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ய வேண்டிய சூழல் வந்த போது போலீசார் கேட்டு கொண்டதால் நான் என்னுடைய பிரசாரத்தை ரத்து செய்து விட்டு என்னுடன் வந்த வாகனங்களையும் வர வேண்டாம் என கூறிவிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் தனியாக காரில் சென்றேன்.

    ஆனால் அ.ம.மு.க.வினர் தனது காரை வழிமறித்தனர். அதையெல்லாம் கடந்து நான் வந்தேன். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை அ.ம.மு.க.வினர் என் கார் மீது வீசி எறிந்தனர்.

    இதனால் வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. என்னுடைய கார் டிரைவர் மற்றும் எனக்கு தீப்பொறிகள் மேலே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த நேரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொறுமையை கடைப்பிடித்து வந்தோம்.

    எனது டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டவில்லை என்றால் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இதை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் பணிக்கு வரும் போதே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். நாளை தொகுதிக்கு வரும் போது என்ன நிலை இருக்கும் என்பதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள்.

    என்னுடைய தேர்தல் பணியை தடுப்பதற்காக என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. தோல்வியின் பயத்தால் இப்படிபட்ட செயல்களில் அ.ம.மு.க.வினர் இறங்கி உள்ளனர்.

    எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். பதவி வரும் போது பணிவு வரவேண்டும், துணிவு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். அதன் படி பணிவோடு மக்கள் பணியாற்றுகிறேன்.

    களத்தில் துணிவோடு பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×