search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்சூர் அலிகானுடன் செல்பி எடுத்த பெண்கள்.
    X
    மன்சூர் அலிகானுடன் செல்பி எடுத்த பெண்கள்.

    நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பு- சிறுவர்களுடன் கபடி விளையாடிய மன்சூர் அலிகான்

    பூங்காவில் மன்சூர் அலிகான் மேற்கொண்ட திடீர் நடைபயிற்சி பயணம் மற்றும் அவரது இயல்பான செயல்கள் அனைத்தும் மக்களை மிகவும் கவர்ந்தது.
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

    இன்று காலை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட காந்திபார்க் பூங்காவில் ஏராளமான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நடிகர் மன்சூர் அலிகான் திடீரென பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள நடந்து வந்தார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்த மக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவரின் அருகில் சென்று நலம் விசாரித்ததோடு அவருடன் செல்பி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பதிலுக்கு மக்களிடமும் மன்சூர் அலிகான் நலம் விசாரித்தார். மேலும் நான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட மன்சூர் அலிகான், பூப்பந்து விளையாடியவர்களை பார்த்ததும் அங்கு சென்று தானும் உங்களுடன் விளையாட வரலாமா என கேட்டார்.

    அவர்கள் தாராளமாக வந்து விளையாடுங்கள் சார் என்றனர். சிறிது நேரம் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக விளையாடினார். பின்னர் அவர்கள் அவருடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் அந்த பூங்காவில் உள்ள மண் மைதானத்திற்கு சென்று மன்சூர் அலிகான் சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

    உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அங்கு சிறுவர்கள் இணைந்து கபடி விளையாடுவதை பார்த்ததும் அவருக்கு கபடி விளையாட வேண்டும் என்ற ஆசை வந்தது. உடனடியாக அவர்களின் அருகில் சென்று நானும் கபடி விளையாட வருகிறேன்.

    என்னையும் உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர் சிறுவர்களுடன் இணைந்து சிறிது நேரம் கபடி விளையாடினார். மேலும் எப்படி கபடி விளையாட வேண்டும் எனவும் அவர்களுக்கு சொல்லி கொடுத்து அவர்களை மகிழ்வித்தார். இவரது இந்த செயலை அங்கு நடைபயிற்சி சென்ற அனைவரும் பார்த்து ஆச்சரியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    உடற்பயிற்சி முடிந்து வெளியில் வந்ததும் ஒரு கடையில் சூப் குடித்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் நான் உங்கள் தீவிர ரசிகன். நீங்கள் குடிக்கும் சூப்புக்கு நான் தான் காசு கொடுப்பேன் என அடம்பிடித்தார். ஆனால் மன்சூர் அலிகான் நான் குடித்ததற்கு நீங்கள் ஏன் கொடுக்க வேண்டும். நான் தான் கொடுக்க வேண்டும் என கூறி தடுத்து விட்டு சூப்புக்கான காசை கொடுத்தார்.

    பூங்காவில் மன்சூர் அலிகான் மேற்கொண்ட திடீர் நடைபயிற்சி பயணம் மற்றும் அவரது இயல்பான செயல்கள் அனைத்தும் மக்களை மிகவும் கவர்ந்தது.
    Next Story
    ×