search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    185 தொகுதிகளில் போட்டி- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு

    அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதால் இன்று 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    இந்த நிலையில் தே.மு.தி.க. நேற்று அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம் அடைந்தது.
     
    இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தலைமை கழகத்திற்கு இரவு 8 மணிக்கு வந்தனர்.

    அப்போது மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளும் அங்கு திரண்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் கிஷன்ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, துணைத் தலைவர் அண்ணாமலை, கேசவ நாயகம் ஆகியோரும் வந்திருந்தனர்.

    பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் பாரதிய ஜனதா போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து இறுதி செய்யப்பட்டது.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பாரதிய ஜனதா தலைவர் முருகன் கூறுகையில், நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்று கூறினார்.

    அதன்பிறகு இரவு 12.15 மணிக்கு ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க நிர்வாகிகள் அ.தி.மு.க தலைமைக்கழகம் வந்தனர். நள்ளிரவு 2 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 23 தொகுதிகளில் கேட்ட தொகுதிகள் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்ததால் பா.ம.க.வினர் மிகவும் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    அதன்பிறகு அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பட்டியலை இறுதி செய்யும் போது பக்கத்து அறையில் அமர்ந்து இருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரையும் அழைத்து வேட்பாளர் பற்றிய விவரம் கேட்டறிந்தனர். பாரதிய ஜனதா - பா.ம.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த இடங்கள் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியை ஓரளவு முடித்தனர்.

    இன்னும் த.மா.கா., புதிய நீதி கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டி உள்ளதால் அந்த கட்சிகள் போட்டியிட உள்ள இடங்களை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.

    சுமார் 185 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று தெரிகிறது. அதிகாலை 4.20 மணி வரை விடிய விடிய தலைமைக் கழகத்தில் இதற்கான ஆலோசனை நடைபெற்றது.

    அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று காலையில், மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

    அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதால் இன்று 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×