search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

    தேர்தல் வியூகம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

    இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல உள்ளனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து விரைவில் முடிக்க உள்ளது.

    இதற்காக தே.மு.தி.க.வுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையை ஓரிரு நாளில் முடிக்க அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதேபோல் சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி ஓரளவு முடிந்துவிட்டது.

    இதற்காக தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி மன்ற குழுவுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள்.

    தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் பொன்னையன் சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தார். அதையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் முழுமையாக படித்து பார்த்து ஒப்புதல் வழங்கினார்கள்.

    தற்போது தேர்தல் அறிக்கை அச்சிடப்பட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளதால், அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் சென்று பிரசாரம் செய்து வந்தார்.

    சென்னை ராயப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மேடை ஏறி பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

    இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல உள்ளனர்.

    இந்த பிரசார வியூகம் குறித்து தலைமை கழகத்தில் இன்று இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்வது, கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இன்று விரிவாக விவாதித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    முக்குலத்தோர் ஓட்டுகளை கவரும் வகையிலும், அவரது பிரசார பயணம் இருக்கும் என தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இருவரது தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளதால் அந்த பட்டியல் தலைமை கழகத்தில் இருந்து விரைவில் வெளியாகும் என நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×