search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    கேரளாவுக்கு இன்று மாலை வருகை- நாகர்கோவிலில் நாளை அமித்ஷா பிரசாரம்

    கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா வருகிறார்.
    நாகர்கோவில்:

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷா, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். அங்கு மாநில தலைவர் சுரேந்திரன் நடத்தும் பேரணியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    திருவனந்தபுரத்தில் இன்று தங்கும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதபடை மைதானத்திற்கு வருகிறார்.

    அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய பெருமாள் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள நீலவேணி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு காலை 10.45 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    பகல் 11.15 மணிக்கு தொடங்கும் பிரசாரம் 12.15 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலை வரை நடக்கிறது. தொடர்ந்து 12.30 மணி முதல் 2 மணி வரை நாகர்கோவில் வடசேரியில் உள்ள உடுப்பி ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவர் மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அமித்ஷா இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருப்பவர் என்பதால் அவரது வருகையையொட்டி போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமித்ஷா நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×