search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிரிதிவி முத்திரை
    X
    பிரிதிவி முத்திரை

    ஆரோக்கியம் நம் கையில்: தலைசுற்றலை நிறுத்தும் முத்ரா- 135

    தலைசுற்றல், மயக்கம் வருவது தடுக்கப்படுகின்றது. மண்ணீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.


    இன்று நிறைய நபர்களுக்கு அடிக்கடி மயக்கம் வருதல், தலைசுற்றல், நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் தள்ளாடி விழுவதுபோல் ஏற்படுகின்றது. இதனால் தனியாக வெளியில் எங்கும் செல்வதில்லை. ஒருவருடைய துணையுடன்தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக மாத்திரை எடுத்தாலும் அதன் பக்க விளைவாக உடல் சூடு, வயிற்றுப்புண், வாய்ப்புண், மலச்சிக்கல் ஏற்படுகின்றது. பொதுவாக எழுபது வயதிற்குமேல் உள்ளவர்களுக்குத்தான் இந்த பிரச்சினை வரும். ஆனால் இப்பொழுது இருபது வயது முதல் நிறைய நபர்களுக்கு வருகின்றது.

    இதற்கு காரணம் பல உள்ளன. சிறு நீர் கழிக்கும் பொழுது நிறைய நபர்களுக்கு சிறுநீருடன் புரதச் சத்து வெளியேறும். மலம் கழிக்கும் பொழுதும் உடலில் உள்ள உயிர் சக்தி வெளியேறும். இதனால் உடலில் உயிர் ஆற்றல் குறைகின்றது. அதனால் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பிராண ஆற்றல் சரியாக செல்லாமல் உடல் சோர்வு, மயக்கம் ஏற்படுகின்றது.

    இரத்த அழுத்தம் குறைந்தாலோ, கூடினாலோ தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். கவலை, டென்ஷனினால் ரத்த அழுத்தம் உயரும், அல்லது குறையும். அந்த நேரத்தில் அது தொடர்ந்து கூடியிருந்தாலும் தலைசுற்றல் மயக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

    இதய வால்வுகள் இயங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலும், இதயத்துடிப்பு அதிகமாகி, இதய பாரம் ஏற்பட்டாலும் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். பித்தம் உடலில் இருக்கும் விகிதத்தில் மாறுபாடு ஏற்பட்டாலும் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும்.

    சிலருக்கு மன அழுத்தம், கவலை மிக அதிகமாக இருக்கும். அதனால் மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் குறைவாக செல்லும். இதனால் உடலியக்கம் பாதிக்கப்படும். தலை சுற்றல் வரும்.

    உடலுக்குரிய சரியான ஓய்வு கொடுக்காததால் சரியான தூக்கமின்மையால் உடல், மனச்சோர்வு ஏற்படும். தலைசுற்றல் வரும். தூக்கமின்மை காரணமாக நிறைய நபர்களுக்கு தலைசுற்றல் உடல் நடுக்கம் ஏற்படும்.

    அதிகமாக சுகர் இருந்தாலும் சுகர் மிகக் குறைந்தாலும் நடுக்கம், மயக்கம் ஏற்படும். உடலில் கட்டிகள் மூளைப்பகுதியில் இருந்தாலும் ரத்த ஓட்டம் அதன் காரணமாக சரியாக இருக்காது. கழிவுகள் தேக்கத்தினால் தலைசுற்றல் ஏற்படும். இப்பொழுது தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் வராமல் வாழ்வதற்குரிய முத்திரைகளைக் காண்போம்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் மோதிரவிரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    இதனால் மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். தலைசுற்றல், மயக்கம் வருவது தடுக்கப்படுகின்றது. மண்ணீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    சூன்ய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். பெண்கள் மாத விடாய் காலத்தில் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். இதயம், இதய வால்வுகள் நல்ல சக்தி ஓட்டம் பெற்று இயங்கும். இதயத்துடிப்பு சீராகும். அதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். தலை சுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் வராமல் வாழலாம்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் சுண்டு விரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரல் நுனியை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    சிறுநீரகம் நன்றாக இயங்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். பய உணர்வு இருக்காது. சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் பிராண சக்தி எல்லா இடங்களிலும் நன்றாக பரவும். அதனால் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை செய்கின்றது.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.

    மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக தினமும் மூன்று வேளை பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ராஜ உறுப்புக்கள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். அதனால் உடல், மன சோர்வு நீங்கி, மயக்கம், தலைசுற்றல் வராமல் வளமாக வாழலாம்.

    பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசி பழம், அத்தி பழம், மாதுளம்பழம், கருப்பு திராட்சை இதை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

    புதினா கீரை, கொத்தமல்லி, அரைக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, அரைக்கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இளநீர், தேங்காய், வாழைப்பழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    கருப்பு உளுந்து கஞ்சி, உளுந்து தோசை, கருப்பு உளுந்து களி, வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

    முளைகட்டிய பயிறு அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் குறைத்து பழச்சாறு, பழம் சாலட், வெஜிடபுள் சாலட் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

    வாரம் ஒரு முறை அருகம்புல், துளசி, வில்வம் ஒரு கைப்பிடி எடுத்து கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றியவுடன் வடிகட்டி அரை டம்ளர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை குடிக்கவும்.

    வேப்ப இலை கொழுந்து மாதம் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு பறித்து தண்ணீரில் கழுவி காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடவும்.

    நீண்ட காலம் இருமல் இருந்து கொண்டேயிருக்கின்றது. இதனால் விலா எலும்புகள் பக்கம் வலி ஏற்படுகின்றது. இதற்கு யோகா முத்திரை பயிற்சி மூலம் தீர்வு உண்டா ?

    நிறைய நபர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. நமது உடலில் வாத, பித்தம், சிலேத்துமத்தில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக சிலேத்துமம் (நீர்) அதிகமானால் அதிக சளி இருந்து கொண்டேயிருக்கும். மார்பு சளி என்று எப்பொழுதும் மார்பில் சளி இருக்கும். அதனால் இருமல், வறட்டு இருமல் இருக்கும். இதற்கு கீழ் குறிப்பிட்ட முத்திரைகளை தினமும் பயிற்சி செய்யுங்கள். நலன் பலன் கிடைக்கும்.

    எல்லா கை விரல்களையும் கோர்த்துக் கொள்ளுங்கள். இடது கை கட்டை விரலை நேராக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள்.

    லிங்க முத்திரை

    சுண்டு விரல், மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தில் வையுங்கள். நடு விரலும் கட்டை விரல் நுனியையும் தொடவும். ஆள்காட்டி விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யுங்கள். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனியுங்கள் பத்து வினாடிகள். பின் இரு கை நடு விரல்களை மடக்கி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரலை சேர்த்து இதயம் பார்க்க வைக்கவும். மற்ற விரல்களை நேராக படத்தில் உள்ளதுபோல் நீட்டி வைக்கவும் இரண்டு நிமிடங்கள், காலை, மதியம் , மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    ஆஸ்துமா முத்திரை

    மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக முதலில் லிங்க முத்திரை, பின் பிராங்கியல் முத்திரை, பின் ஆஸ்துமா முத்திரை இரண்டு நிமிடங்கள் ஒவ்வொரு முத்திரையும் பயிலுங்கள்.

    நாடி சுத்தி

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் இருக்கட்டும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும். பத்து முறை செய்யவும்.

    பின் இதனையே மாற்றி செய்ய வேண்டும். இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மூச்சை இழுத்து வலது நாசியை கட்டைவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். மீண்டும் வலதில் இழுத்து இடதில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440
    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×