search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்: ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்- 42

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    ராஜபாளையம் ‘ராம்கோ’ நிறுவனத்தின் சேர்மன் ராமசுப்ரமண்யராஜா மகா பெரியவாளுக்கு என்ன காணிக்கை கொண்டு சென்றிருந்தார் தெரியுமா?
    காஷ்மீர் ஆப்பிள்கள்!
    ‘காஷ்மீர் ஆப்பிள்கள்’ வாங்கிக் கொண்டு போய் காணிக்கை கொடுப்பதில் என்ன பிரமிப்பு? இதற்கு ஏன் வாய் பிளக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?
    இந்த காஷ்மீர் ஆப்பிள்களை சென்னையிலோ, ராஜபாளையத்திலோ, மதுரையிலோ ராமசுப்ரமண்யராஜா வாங்கவில்லை.
    மகா பெரியவாளுக்கு இத்தகைய உயர் பழங்களை உள்ளார்ந்த அன்புடன் அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானித்தவர், நேரே காஷ்மீருக்கே சென்றார். அங்கே ஒரு தோட்டத்தில் இருந்து இவற்றை வாங்கினார். முறையாக அவற்றை ‘பேக்’ செய்யச் சொன்னார். பின், அந்த ஆப்பிள் பார்சலுடன் காஷ்மீரில் இருந்து நேராக பெரியவா தரிசனத்துக்கு வந்து விட்டார்.
    ‘அவருக்குப் பண வசதி இருக்கிறது... இதிலென்ன ஆச்சரியம்’ என்று தோன்றலாம்.
    இது பணம் சம்பந்தப்பட்டதில்லை. மனம் சம்பந்தப்பட்டது.
    மகானுக்கு இத்தகைய உயர் பழங்களை - அவை விளைகிற இடத்துக்கே நேரில் சென்று வாங்கி வர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் விளைவாகவே காஷ்மீருக்குப் பயணப்பட்டு அங்கிருந்து பழங்களை வாங்கி வந்தார்!
    மாம்பழங்கள் எங்கும் விளைந்தாலும், சேலத்தில் இருந்து ஒருவர் வாங்கி நமக்கு அனுப்பி வைத்தால் எத்தனை சந்தோஷம் ஏற்படுகிறது... அதுபோலத்தான் காஷ்மீர் ஆப்பிள்களும்!
    இந்த நிகழ்வை நமக்குச் சொன்னவர் அப்போது உடன் இருந்த அருண்குமார்.
    தியாகராஜன், ராஜலட்சுமி, அருண்குமார் - இவர்கள் மகா பெரியவா முகாம் இருந்த இடத்தை அடைந்தபோது வயதான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அப்போது பெரியவா தரையில் சயனித்திருந்தபடியே பேசிக் கொண்டிருந்தார். பாற்கடலில் சயனித்திருக்கிற பரந்தாமன், இங்கு கட்டாந்தரையில் சயனித்திருக்கிறாரோ?!
    அப்போது அங்கு கூடி இருந்த உள்ளூர் அன்பர்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு செய்தி, அனைவரையும் வியப்படைய வைத்தது.
    அந்த ஊரில் சுமார் 25 வருடங்களாகவே மழையே இல்லையாம். ஒரு வருடம், இரண்டு வருடம் மழை இல்லை என்றாலே, தண்ணீருக்குப் படாத பாடு பட்டு விடுகிறோம்.
    இந்த நிலையில் இருபத்தைந்து வருடங்களாக மழையே இல்லை என்றால், அந்த ஊர் எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள். வானம் பார்த்த பூமியாகவே இருக்கும். பயிர் பச்சைகளின் விளைச்சலுக்கும், கால்நடைகளின் நீர்த் தேவைக்கும், கிராமவாசிகளின் அன்றாடத் தேவைக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்..!
    அத்தியாவசியத் தேவைகளுக்காக எத்தனையோ கி.மீ. தொலைவு பயணித்து அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டுமாம். இந்த நிலையில்தான் பெரியவா இந்தக் கிராமத்தில் முகாமிட வந்தார்.
    மகா பெரியவா அந்தக் கிராமத்தில் கால் பதித்த அன்றைய தினம் இரவு மழை கொட்டித் தீர்த்ததாம். சாதாரணமான மழை அல்ல. பேய் மழை!
    ஊர்மக்களுக்கு சந்தோஷமான சந்தோஷம். ‘மகானின் திருவடி எங்கள் ஊரில் பட்ட வேளை... ஊரே செழிப்பாகி விட்டது. குளங்களும் கிணறுகளும் நிரம்பி விட்டன’ என்று பெரியவா திருச்சந்நிதிக்கே வந்து நமஸ்கரித்துச் சென்றார்கள்.
    இந்த மழை குறித்து மகா பெரியவா என்ன சொன்னார் தெரியுமா?
    ‘‘திடீர்னு ராத்திரி வேளைல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்றது. நானோ தடி பிரம்மச்சாரி. பரவாயில்லை. ஆனா, எங்கூட நாலைஞ்சு பேரை (சிப்பந்திகள்) கூட்டிண்டு வந்திருக்கேனே... இந்தப் பெரும் மழைலேர்ந்து அவாளை எல்லாம் காப்பாத்தணுமே... அதனால அவாளை எல்லாம் இந்தக் கொட்டகைக்குப் பாதுகாப்பா கூட்டிண்டு வந்துட்டேன். நல்லவேளை... பெரும் மழையா இருந்தாலும், இவாளுக்கெல்லாம் ஒண்ணும் ஆகலை.’’
    என்னே ஒரு அடக்கமான ஸ்டேட்மெண்ட் பாருங்கள்... இவரோ, ஜகத்குரு. உலகின் பல பகுதிகளில் இருந்தும் தங்களைக் காக்க வேண்டியும், நல்வழிப்படுத்த வேண்டியும் ஆயிரக்கணக்கானவர்கள் மகான் இருக்கிற இடத்தைத் தேடி வருகிறார்கள். அருள் புரிந்து அனுப்புகிறார். ஆனால், இருபத்துநாலு மணி நேரமும் இவருடன் இருக்கும் நாலைந்து சிப்பந்திகளைக் காப்பாற்றுவது பற்றித் திகைத்துப் போய்ச் சொல்கிறார்!
    அதுதான் பெரியவா.
    பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஸ்ரீகண்டன் அப்போது பெரியவாளிடம் வந்தார். சற்றே குனிந்து ஏதோ சொன்னார்.
    உடனே சட்டென்று எழுந்தார் பெரியவா. தண்டத்தை இடுக்கிக் கொண்டார். தன் எதிரே வந்து நிற்பவரைப் பார்த்தார்.
    அவர் மகா பண்டிதர். ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் குரு. தலைமை நீதிபதி சட்டம் படித்து தன்னிடம் வரும் வழக்குகளுக்குத் தீர்ப்பு சொல்லி வருகிறார். பாருங்கள், அவருக்கே ஒரு குரு! அதுதான் ஆன்மிகம்.
    அரசியல், தொழில், அரசுப் பணி என்று எத்தனை பெரிய இடத்தில் பிரபலமாக இருந்தாலும், இவர்களைப் பார்க்க வருகிறவர்கள் ‘சலாம்’ போட்டு மரியாதை செய்தாலும், அவர்களுக்கும் குரு என்கிற ஒருவர் இருப்பார்.
    அந்த குருவுக்கு இந்தப் பிரபலங்கள் ‘சலாம்’ போட வேண்டும். குருநாதர் உபதேசங்களைக் கேட்க வேண்டும்.
    அதுபோல்தான் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் குரு! மெத்தப் படித்த பண்டிதர். சாஸ்திர நூல்களைக் கரைத்துக் குடித்தவர். அந்த குருவின் தேஜஸைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்.
    பெரியவாளின் தரிசனத்துக்குப் பிரபலம் ஒருவர் வருவதைப் பார்த்தவுடன், அதுவரை உடன் இருந்த முதியவர் மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு நமஸ்கரித்து விட்டு அங்கிருந்து அகன்றார்.
    பெரியவாளை நெருங்கினார் மகா பண்டிதர்.
    மகானைப் பார்த்ததும், இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிட்டார். அவரது கண்கள் இரண்டும் தானாகவே நீரைச் சொரிந்தன. அதன் பின் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
    எழுந்து நின்றார்.
    அவரது கண்களில் இனம் புரியாத ஒரு ஏக்கம். ஏதோ ஒரு விஷயத்தைப் பெரியவாளிடம் சொல்ல வேண்டும் என்கிற வேகம் அவரது உதடுகளில் தென்பட்டது. எப்படிச் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினார்.
    ஒரு கட்டத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சொல்லியே விட்டார்.
    என்ன சொன்னார்?
    ‘‘பெரியவா... இந்த உலகம் ரொம்ப கெட்டுப் போச்சு. கண்ணுக்கு நேரே பாக்கற காரியங்கள் எல்லாம் ரொம்ப மோசமா இருக்கு. அதனால... அதனால....’’ - துக்கம் தொண்டையை அடைக்க... அடுத்துப் பேச்சு வராமல் தவித்தார் மகா பண்டிதர். பெரியவா ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தார்.
    ஒரு சில விநாடிகளுக்குப் பின் மகா பண்டிதரே தொடர்ந்தார்: ‘‘அதனால... பிராணத் தியாகம் பண்ணிண்டுடலாம்னு தோன்றது பெரியவா.’’
    - சொல்லி முடித்தவர் குலுங்கிக் குலுங்கி அழுதார்.
    பிராணத் தியாகம் என்றால் என்ன? இவர் ஏன் அதை செய்து கொள்ள வேண்டும்?
    ஏதோ ஒரு காரணத்தின்பொருட்டுத் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதுதான் பிராணத் தியாகம்.
    பிராணத் தியாகம் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒரு கதையைச் சொன்னால், ‘ஓ... இதுவா...’ என்று ஆச்சரியப்படுவீர்கள்.
    மன்னன் சிபிச் சக்ரவர்த்தியை அனைவரும் அறிவோம். தன்னைத் துரத்திக் கொண்டு வந்த பருந்துக்கு பயந்து ஒரு புறா சிபிச் சக்ரவர்த்தியின் அரண்மனைக்குள் ஐக்கியமானது. விவரம் புரியாமல் அந்தப் புறாவை சுதந்திரமாகப் பறக்க விட்டு விடலாம் என்று தன் கையில் ஏந்திக் கொண்டு அரண்மனையின் வெளியே வந்தான் சக்ரவர்த்தி. வெளியே ஆகாயத்தில் ஒரு பருந்து வட்டமிடுவதைப் பார்த்ததும், ‘ஆகா... எதிரிக்குப் பயந்துதான் இது நம்மிடம் சரண் புகுந்திருக்கிறதோ’ என்று தெளிந்தான்.
    ஒரு சக்ரவர்த்தி என்ற முறையில் புறாவைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயம் இரை தேடி அலையும் பருந்துக்கும் ஆகாரம் கொடுக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான்.
    புறாவைக் காப்பாற்ற தன் உயிரையும் கொடுக்கலாம் என்று முன்வந்தான். புறாவின் எடைக்கு எடை தன் உடலில் இருந்து தசைகளை வெட்டி ஒரு தராசுத் தட்டில் வைத்து, பருந்தின் பசியைத் தீர்க்க முற்பட்டான். கடைசியில்தான் தெரிந்தது. பருந்தாக வந்ததே தர்மதேவன். சிபிச் சக்ரவர்த்தியின் நற்குணங்களை இந்த நானிலம் அறிய வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு திருவிளையாடலை தர்மதேவனே திட்டமிட்டு நடத்தினான் என்று.
    நல்ல எண்ணத்தோடு பிராணத் தியாகம் செய்ய முற்பட்டதால், சிபிச் சக்ரவர்த்தியும் காப்பாற் றப்பட்டு ஆசிர்வதிக்கப் பட்டான்.
    வாருங்கள், மகா பண்டிதரிடம். பிராணத் தியாகம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தால் அதை செய்து விட வேண்டியதுதானே? எதற்குப் பெரியவாளிடம் வர வேண்டும் என்று தோன்று–கிறதல்லவா?
    காரணம் இல்லாமல் இருக்குமா? ஜகத்குரு என்றால் சாதாரணமா?
    (தொடரும்)
    swami1964@gmail.com
    Next Story
    ×