search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதயத்தில் என்றும் கலைஞர்
    X
    இதயத்தில் என்றும் கலைஞர்

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்- இதயத்தில் என்றும் கலைஞர்-42

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    தி.மு.க.வில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகுவேன் என்பது நானே எதிர்பாராதது. ஆனால் சூழ்நிலை என்னை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டுவந்து விலகும் அளவு விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.
    மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த போதும், அரசியல் என்றால் பிரச்சினைகள் எழத்தான் செய்யும் என்பதை என் அனுபவத்தில் அறிந்து கொண்டேன்.

    மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கட்சியின் முக்கிய முடிவு எடுக்கும் பொதுக்குழு உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சி களிலும் அழைக்கப்பட்டேன். மாநில பேச்சாளர் என்ற கவுரவத்தோடு இருந்தேன்.

    ஆனாலும் நான் எதிர்பாராமல் சில முனை களில் இருந்து எதிர்ப்புகளும் திரை மறைவில் விழுந்தன. எந்த நிலையிலும் நான் நானாகவே இருந்தேன்.அதுவும் எனக்கு சில நேரங்களில் எதிர்பாராத நெருக்கடிகளை உருவாக்க தவறவில்லை.

    என்னுடைய குணம் எந்த பிரச்சினையிலும் நான் என்ன நினைக்கிறேனோ, எது எனக்கு சரி என்று படுகிறதோ அதை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லிவிடுவேன். அப்படித்தான் ஒருகட் டத்தில் சில கருத்துக்கள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் சொந்த கட்சி தொண்டர்களே எனக்கு  எதிராக களம் இறங்கினார்கள்.

    திருச்சிக்கு சென்ற என் மீது செருப்புகள் வீசப்பட்டன.எனது வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தார்கள். கார் கண்ணாடி உடைக் கப்பட்டது. வீட்டுக்குள் தனிமையில் இருந்த எனது இரண்டு பிள்ளைகளும் பயந்து நடுங்கிவிட்டார்கள்.

    அரசியலில் ஈடுபட்ட தால் தானே இவ்வளவு நெருக்கடி என்று மனதளவில் ஒரு கேள்வி எழுந்தாலும், அரசியல் நான் விரும்பி ஏற்றுக்கொண்டது. எனவே எதையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று உள் மனம் சொன்னது.

    இந்த நிலையில் தான் சூழ்நிலை காலப்போக்கில் மோசமாகிக்கொண்டு இருந்தது. தொடர்ந்து கட்சியில் நீடிக்க முடியுமா? என்ற அளவுக்கு நிலைமை மோசமானது. பல நேரங்களில் கலைஞர் பிரச்சினைகளை சமாளித்து என்னையும், நெருக்கடிகளில் இருந்து விலக்கி வந்தார்.

    இனிமேலும் கட்சியில் நீடிக்க முடியாது என்ற நிலையில் தான் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ேதன்.
    மனதுக்குள் எடுத்து விட்ட முடிவை கலைஞரிடம் சொல்ல முடியாமல் அவரை சந்தித்து பேசி விட்டு விடைபெற்று வீட்டுக்கு வந்த பிறகு தான்  ராஜினாமா கடிதத்தை எழுதினேன்.

    அந்த கடிதத்தோடு காலையில் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் என் கடிதத்தை வாங்க மறுத்துவிட்டனர். நேராக கோபாலபுரத்துக்கு சென்றேன். அப்போதும் கடிதத்தை வாங்க சிலர் மறுத்தனர். கலைஞரை பார்த்துவிட்டு வாருங்கள் என்றார்கள்.

    ஆனால் அவரை சந்திப்பதை தவிர்த்தேன். ஏனெனில் அவரை பார்த்துவிட்டால் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் அமைப்பாளர்களிடம் கடிதத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகினார் என்பது பரபரப்பு செய்தியாக வெளியே வந்தது. இப்படி ஒரு முடிவை எந்த அளவுக்கு கனத்த இதயத்தோடு நான் எடுத்தேனோ, அதே போல் கலைஞரும் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார் என்பது எனக்கு தெரியும்.
    குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலக என்ன காரணம் என்று யூகங்களின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள்  உலாவியது. ஆனால் உண்மையில் நான் விலகுவதற்கு என்ன காரணம் என்பது இரண்டு பேருக்குதான் தெரியும். ஒன்று கலைஞர் இன்னொன்று நான்.
    இன்றுவரை அந்த கேள்விக்கு என்ன பதில் என்று கேட்காதவர்கள் இல்லை. இன்றும் அதற்கு நான் சொல்லும்  பதில், அது ரகசியம். எனக்கும் கலைஞருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். இப்போது கலைஞர் இல்லை. நான் மட்டும் இருக்கிறேன். என்னோடு அந்த ரகசியம் புதைந்து போகட்டும்.

    தி.மு.க.வில் இருந்து நான் விலகியதும் குஷ்பு எந்த கட்சிக்கு செல்வார் என்பது பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அப்போது பா.ஜனதாவில் சேருவேன் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 
    அதற்கு காரணம் பா.ஜனதாவை சேர்ந்த மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதிஇரானி ஆகியோரை நான் பாராட்டியதுதான். ஆனால் உண்மையில் நான் எந்த கட்சியில் இருந்தாலும், எந்த கட்சியில் இருப்பவர்களும் நல்ல காரியங்கள் செய்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்களை பாராட்டுவேன். அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிப்பேன். இது என்னுடைய குணம். குணத்தை எப்படி மாற்ற முடியும்.

    அரசியலில் குதித்தாகிவிட்டது. இனி அதன் ஆழத்தை கண்டே ஆக வேண்டும் என்ற ஆசையால் தி.மு.க.வில் இருந்து விலகினாலும், அரசியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை.
    அடுத்ததாக தேசிய கட்சியான காங்கிரசில் இணைந்து மீண்டும் எனது அரசியல் பயணத்தை தொடங்கினேன். ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வின் நிழலில் தான் காங்கிரஸ் இருந்தது. எனவே தி.மு.க.வில் இருந்து விலகினாலும், அந்த சூரியனின் பார்வையில் இருந்து விலகமுடியாது என்ற நிலைமை.

    ஆனாலும் கலைஞரை பார்ப்பதை ஒரு வருடத்துக்கும் மேலாக தவிர்த்துவிட்டேன். அதற்கு காரணம் அவர் மீது கொண்ட வெறுப்பு அல்ல. அவர் மீது இருந்த அளவுக்கு அதிகமான பாசம். அவரை நேரில் சந்தித்துவிட்டால் எதுவும் பேசமுடியாத நிலை ஆகிவிடும் என்பதால் தான் அப்படி ஒரு முடிவோடு இருந்தேன்.

    ஒருகட்டத்தில் எனது முடிவும் தகர்ந்துபோனது. சினிமா துறை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலைஞர் மேடையில் அமர்ந்து இருந்தார். எதிரே பார்வையாளர் வரிசையில் நானும் அமர்ந் திருக்க வேண்டிய கட்டாயம்.

    மேடையில் வீற்றிருந்த கலைஞர் என்னைப்பார்த்ததும் என் மனதில் அப்படி ஒரு தவிப்பு. கலைஞரின் கண்களை பார்த்த போது கோபித்து சென்ற மகளை பார்த்து பேசத்துடிக்கும் ஒரு தந்தையின் தவிப்பு தெரிந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் என்னை பார்த்துவிட்டுச்செல் என்று கலைஞரிடம் இருந்து உத்தரவு வந்தது.

    என்னால் அதை தவிர்க்கமுடியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞரை சந்திக்க சென்றேன். கையெடுத்து கும்பிட்டு வணங்கியதும் என் கண்கள் கலங்கியதும் அவருக்கு புரிந்தது. ‘என்னமா... இந்த அப்பாவை ஒரு வருடமாக பார்க்கவேண்டும் என்ற எண்ணமே உனக்கு வரவில்லையா’ என்றதும், எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை.

    அப்படியெல்லாம் எதுவும் இல்லை அப்பா, என்று சமாளித் தேன். அவர் ‘இனிமேலாவது வந்து பார்த்துவிட்டு போ’ என்று சொல்லிச்சென்றார். காலம் உருண்டது. கலைஞர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஆளானார். அவரை காலதேவன் அழைப்பதற்கு ஒருவாரத்துக்கு முன்பு கூட அவரை பார்க்க சென்றேன். அப்போது  அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் இது.

    நாங்கள் எப்போதும் சந்தித்து மகிழ்ந்த கலைஞராக அப்போது அவர் இல்லை. சிகிச்சைக்காக அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களும், அவர் இருந்த கோலமும் எங்கள் மனதை உடையவைத்தது. அந்த நிலையிலும் அருகில் சென்று அப்பா என்னை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டேன். 

    அவர் வாயில் இருந்து கு... என்று கூப்பிடும் குரல் வந்தது. ஆனால் சத்தம் கேட்கவில்லை. அதை கேட்டதும், என் மனமும் உடைந்து போனது. எத்தனை கம்பீரமாக பேசுவார். எவ்வளவு உற்சாகமாக உரையாடுவார். அந்த நாவா இப்படி அடங்கிப்போயிருக்கிறது என்று நினைத்து இதயம் விம்மியது. சிறிதுநேரம் அருகில் இருந்து பார்த்துவிட்டு வீடு திரும்பினேன்.

    மறு நாளே காவேரி  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவரது உடல் நிலை மோசமடைந்ததும் தி.மு.க.வில் இருக்கும் எனது நண்பர்கள் போன் செய்து ‘தலைவர் நம்மை விட்டு  போய் விடுவார் போல் உள்ளது.  பார்ப்பதாக இருந்தால் ஆஸ்பத்திரி வாருங்கள் என்றார்கள். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து வந்தேன்.

     என்னை பெற்ற தந்தைக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காத நான் என்னை வளர்த்த அன்பு தந்தைக்காக அவர் பிரிந்தார் என்ற  தகவலை கேட்டதும் கதறி அழுதேன். சாப்பிட முடியவில்லை. எங்கள் வீடே நிசப்தத்தில் மூழ்கியது. கடைசியாக அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தேன். இனிமேல் கலைஞர் என்ற கம்பீரத்தை எங்கும் பார்க்கமுடியாது என்பதை நினைத்தபோது இதயம் அழுதது. ஆனால் இதயம் இருக்கும் வரை கலைஞரின் நினைவுகள் நிலைத்து இருக்கும். காலம் கடந்தது. 

    திருமண நாளில் ரூ.101 பரிசு

    எனக்கு என் தந்தையின் பாசம் கிடைக்க வில்லை. அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர் தலைவர்தான்.
    ஒவ்வொரு திருமண நாளின் போதும் நானும் எனது கணவரும் தலை வரை சந்தித்து வாழ்த்து பெறுவோம். அப்போது அவரிடம் ரூ.101 வாங்குவேன். தந்தை மகளை வாழ்த்தி பரிசு கொடுப்பது போல் சந்தோஷமாக இருக்கும்.
    அதே போல் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தலைவர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து  சொல்வார்.

    அந்த நினைவுகள் இன்றும் நெஞ்சில் வந்து வாட்டத்தான் செய்கிறது.
    குஷ்புவை பற்றி கருணாநிதி

    பெண்களின் முன்னேற்றத் துக்கும் முற்போக்கு கருத்துகளுக்காகவும் வாதாடக்கூடிய ஆற்றல் படைத்தவர் குஷ்பு.

    அதன் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் நம்பி சென்ற  காங்கிரசும் கைவிட்டது. ஏன்? எப்படி? அடுத்தவாரம் சொல்கிறேன்.

    ttk200@gmail.com
    Next Story
    ×