search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டர் சவுந்தரராஜன்
    X
    டாக்டர் சவுந்தரராஜன்

    அறிவோம் சிறுநீரகம்: உறுப்புதானம் செய்வதும், பெறுவதும்-டாக்டர் சவுந்தரராஜன்- 16

    தமிழ்நாட்டை பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வதில் மற்ற மாநிலங்களை விட இங்கு விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது.


    உடல் உறுப்புதானம் மனித இனத்துக்கு கிடைத்த வரம் என்பது உண்மை. உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். இரண்டு சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடியும் அதனால் எந்த பாதிப்பும் வராது என்பதை மருத்துவத்துறை உறுதிப்படுத்தியதும் சிறுநீரக விற்பனையும் ஒரு தொழிலாகவே மாறியதும் உண்டு. அதிலும் குறிப்பாக இந்த தொழில் தமிழகத்தில் கொடிகட்டி பறந்தது எனலாம். அந்த அளவுக்கு சிறுநீரகம் கொடுப்பதும், பொருத்துவதும் தமிழகத்தில் ஜரூராக நடந்தது. அதற்கு காரணம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கென மிகச்சிறந்த நிபுணர்கள் அதிகம் பேர் இருந்தார்கள்.

    வடமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் சிறுநீரகம் பாதித்தவர்கள் பலர் தமிழ்நாட்டுக்கு படையெடுத்தார்கள். சிறுநீரக விற்பனை பணம் கொழிக்கும் தொழிலாக உருவெடுத்தது.

    கிட்னி திருட்டு., கிட்னி புரோக்கர்... என்பதெல்லாம் அப்போதைய பரபரப்பான செய்திகள். குடிசை தொழில் மாதிரி அதிகரித்து கொண்டிருந்த உறுப்பு மாற்று சிகிச்சைக்கு கடிவாளம் போட வேண்டும் என்ற கருத்து மூத்த மருத்துவர்கள் மற்றும் மனசாட்சி உள்ள மருத்துவர்கள் மத்தியில் வலுப்பெற்றது.

    இந்தியாவில் பெரும்பாலான ஏழைகளிடம் கிட்னியை விற்க ஆசை காட்டப்பட்டது. வறுமையால் கிட்னியை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டவர்கள் பலர். தமிழ் நாட்டில் பணம் கொடுத்து கிட்னி வாங்கலாம் என்று சர்வதேச அளவில் பேசப்பட்டதும் உண்டு. நிலைமை இப்படியே போனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் ஒற்றை சிறுநீரகத்தோடுதான் வாழ வேண்டிய நிலை வரும் என்று பலரும் எச்சரித்தார்கள்.

    இதையடுத்து உடல் உறுப்புதான கட்டுப்பாட்டு சட்டம் கொண்டுவர விவாதிக்கப்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகளாக அது சட்டமாகாமல் கிடப்பிலேயே கிடந்தது.

    அப்போது எனது மாமனார் குமரிஅனந்தன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். மத்தியில் சங்கரானந்த் சுகாதார மந்திரியாக இருந்தார்.

    மூத்த மருத்துவர்களான சக மருத்துவர்கள் சிலர் என்னிடம் ‘கிடப்பில் கிடக்கும் சட்டத்தை நிறைவேற்ற உன்னால் முடிந்த முயற்சியை எடு’ என்றார்கள்.

    நானும் எனது மாமனாரிடம் இந்த விவகாரத்தின் மோசமான பின் விளைவுகளை விளக்கி நேரடியாகவே மத்திய சுகாதார மந்திரியை சந்தித்து பேசினோம்.

    அதை தொடர்ந்து அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. 1994ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அன்று எனது மாமனாருடன் பாராளுமன்ற பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டம் நிறைவேற்றியதை பார்த்து சந்தோசப்பட்டேன்.

    உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படியே சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்டவரின் உடல் உறுப்புகள் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டே எடுக்கப்பட வேண்டும்.

    உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவே பாதிக்கப்பட்டவரின் மரணம் நிகழவில்லை என்பதற்கு மருத்துவ குழு சான்றளிக்க வேண்டும்.

    பணத்துக்காக உடல் உறுப்புகள் எடுக்கப்படவில்லை மற்றும் பெறப்படவில்லை என்று தகுந்த சான்றிதழ் அதற்காக அமைக்கப்பட்ட குழுக்களிடம் இருந்து பெறப்பட வேண்டும்.

    வயதுக்கு வராத மைனர்களின் உடல் உறுப்புகள் எக்காரணத்துக்காகவும் உறுப்பு தானத்துக்காக எடுக்கப்பட கூடாது என்பது உள்பட பல அம்சங்கள் அந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இதை மீறினால் டாக்டர்களுக்கு லைசென்சு ரத்து, ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனாலும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தவறுகள் நிகழ்த்தப்படுவது தெரியவரும் போது சட்டத்தில் திருத்தங்களும் செய்யப்படுகிறது. சென்னையில் நான் ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய போது துறைமுக ஊழியர் ஒருவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்தோம். அவருக்கு அவரது மனைவியாக வந்தவர் சிறுநீரக தானம் செய்ய முன் வந்தார்.

    அதை தொடர்ந்து இருவருக்கும் பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் 2 குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர் தான்தான் அவரது முதல் மனைவி என்று ரகளையில் ஈடுபட்டார். அந்த சக்களத்தி சண்டையால் எங்களுக்கு தர்ம சங்கடமாகி விட்டது.

    இதேபோல் பல சம்பவங்கள் நாடுமுழுவதும் நடந்தது. பண பலன், சொத்தில் பங்கு போன்ற எதிர்பார்ப்புகளுக்காக இந்த மாதிரி சொந்தங்களை உருவாக்கி கொண்டார்கள்.

    இதை தவிர்க்க மனைவியாக இருப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்டவருடன் வாழ்ந்து இருக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    சட்டத்தின் கிடுக்கிப்பிடியால் உடல் உறுப்பு விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மிகச்சிறந்த உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

    உடல் உறுப்பு தேவைப்படுபவர்கள் அதற்காக பதிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் தேவை என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு உறவினர்களின் சிறுநீரகம் பொருந்தாத பட்சத்தில் தானம் கிடைப்பதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பதிவு செய்யும் போது நோயாளியின் உடல் நிலை எல்லாமே பதிவு செய்யப்படும். தொடர்பு கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட போன் எண்களையும் கொடுக்க வேண்டும். ஏதாவது உடல் உறுப்புகள் தானம் வந்தால் உடனடியாக போனில் தொடர்பு கொள்வார்கள். உடனே பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் உடல் உறுப்புகள் கிடைப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியது வரலாம்.

    ஒருவர் சிறுநீரகத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுவரை தொடர்ந்து டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டியது வரும்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வதில் மற்ற மாநிலங்களை விட இங்கு விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. என்றாலும் இன்னும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு யாரை அணுக வேண்டும், எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

    உடல் உறுப்பை தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். இணைய தளத்திலும் சென்று பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

    விண்ணப்பத்தில் பெயர், ரத்த பிரிவு, சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல் என என்ன உறுப்பை தானம் செய்ய வேண்டும் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பி பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக தங்கள் குடும்பத்தினரிடமும் அவர்களது விருப்பத்தை தெரிவித்து அவர்களின் சம்மதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    ஏனெனில் குடும்பத்தினரின் சம்மதம் இருந்தால்தான் இறந்த பிறகு உறுப்புகளை பெறுவதில் ஏற்படும் சிக்கல் மற்றும் தாமதத்தை தவிர்க்க முடியும்.

    சிறுநீரக தானம் பெற விரும்புபவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனைகளில் பதிவு செய்ய வேண்டும்.

    மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை எடுக்கும் போது இதயம் 6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம் 72 மணி நேரம் வரையிலும், கல்லீரல் 24 மணி நேரம் வரையிலும், நுரையீரல் 4 மணி முதல் 6 மணி நேரம் வரையிலும், கணையம் 24 மணி நேரம் வரையிலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். அதேநேரம் உரிய நேரத்தில் உடல் உறுப்புகளை பெற்றுக்கொண்டு எவ்வளவு விரைவாக இன்னொரு உடலில் பொருத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு பயனாளிக்கு பலன் அளிக்கும். இதுதொடர்பான விழிப்புணர்வுகள் இன்னும் அதிகம் தேவை.

    ஆண்களுக்கு ‘புராஸ்டேட் சுரப்பி’ என்ற சுரப்பி இருக்கிறது. சுமார் 50 வயது வரையிலும் ஆணின் விந்தணுக்களை மிதக்க செய்யும் ஒரு வகை திர வத்தை சுரப்பது தான் இந்த சுரப்பியின் வேலை.

    50 வயதுக்கு பிறகு சுரப்பதை குறைத்தாலும் உபத் திரவத்தை கொடுக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் வருகிற வயதில் ஆண்களுக்கு இந்த சுரப்பியின் வளர்ச்சி தொடங்குவதால் இதை ஆண் மெனோபாஸ் என்போம். இருபது வயதில் எலுமிச்சை சைசில் இருக்கும் இந்த சுரப்பி வயதாக ஆக மாங்காய் அளவுக்கு பருத்துவிடும். ஒரு கட்டத்தில் சிறுநீர் வெளியேறும் குழாயின் இருபக்கமும் வீங்கி அழுத்துவதால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறும்.

    அடிக்கடி சிறுநீர் போதல், திடீரென்று வருவது போல அவசரப்படுத்தும். ஆனால் வராது. நீர்குத்தல், நீர்கடுப்பு இதெல்லாம் இதன் அறிகுறிகள். அதுமட்டுமல்ல எப்போதும் சிறுநீர் வருவது போல் தோன்றும். பாத்ரூமுக்குள் சென்றால் வெளியேறாமல் கண்ணாமூச்சி காட்டும். பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தின் அளவைப் பொறுத்து, அதற்கு ஒன்று முதல் நான்கு கிரேடு வரை கொடுக்கிறார்கள். முப்பதில் இருந்து நாற்பது கிராமுக்குள் இருந்தால் கிரேடு ஒன்று, நாற்பது முதல் ஐம்பது எனில் கிரேடு இரண்டு, ஐம்பது முதல் அறுபதுக்குள் என்றால் கிரேடு மூன்று அதற்கு மேல் போனால் கிரேடு நான்கு.

    பெரும்பாலான ஆண்களுக்கு வருவது முதல் மற்றும் இரண்டாவது கிரேடு வீக்கம்தான். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும், ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், மூன்றாவது மற்றும் நான்காவது கிரேடுக்குப் போகாமலும் பெரும் பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

    பொதுவாக நாற்பத்தைந்து வயதாகி விட்டாலே ஆண்கள் பிராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டிஜன் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வருவது மாதிரி, ஆண்களுக்கும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படும் கட்டி புற்று நோயாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

    Next Story
    ×