search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முப்பெரும் தேவியரின் மறுவடிவம் பெண்கள்
    X
    முப்பெரும் தேவியரின் மறுவடிவம் பெண்கள்

    முப்பெரும் தேவியரின் மறுவடிவம் பெண்கள்

    ‘பெண்கள்’என்கிறபோதே, அது ஏதோ ஆண்களோடு பகை கொள்கிற வர்க்கம் என்றோ, ஆண்களை வீழ்த்தத் தலைப்படுகிற வர்க்கம் என்றோ எண்ண வேண்டிய அவசியமில்லை.
    ‘மகளிர் தினம்’ இந்தச்சொற்றொடரைச் செவி மடுக்கும்போதே, ஏதொவொரு வகையான உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்கிறது.

    மகளிருக்கான கொண்டாட்டங்கள், மகளிரைப்பெருமைப்படுத்துகிற நிகழ்வுகள், மகளிராய்ப் பிறந்ததற்கும் செயல் படு வதற்குமான பெருமிதங்கள் இவை நிறைந்த நாள்.

    இவற்றுக்காக மகிழ்ந்தாலும், இவற்றைத் தாண்டியும் இவற்றுக்கு அப்பாற்பட்டும் மகளிர் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிற நாளும்கூட!

    ‘பெண்கள்’என்கிறபோதே, அது ஏதோ ஆண்களோடு பகை கொள்கிற வர்க்கம் என்றோ, ஆண்களை வீழ்த்தத் தலைப்படுகிற வர்க்கம் என்றோ எண்ண வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக, ‘சமத்துவம்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

    குறைந்தபட்சம் இரண்டு குழுக்கள் அல்லது கூட்டங்கள் அல்லது பிரிவுகள் இருந்தால் மட்டுமே, ஒன்றுக்கொன்று சமத்துவம் என்று கூறமுடியும். எனவே, ஆண்களும் பெண்களும் அடித்துக்கொள்ள வேண்டும், ஒருவரையொருவர் புரட்டி வீழ்த்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணலாகாது.

    இரு பிரிவுகளுக்கிடையிலும், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்;முரண்பாடுகள் இருக்கலாம்;வேற்றுமைகள் இருக்கலாம்; ஆனால், இருவரும் ஒருவரையொருவர் மதித்து,எங்கெங்கு சேர்ந்து செயல்பட வேண்டுமோ அங்கங்கு சேர்ந்து செயல்பட்டு, எங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அங்கே பகிர்ந்து,சமுதாயத்தின் நன்மைக்கும்முன்னேற்றத்திற்கும் இருவருமாகப் பங்களிப்பது என்பதுதான் சரி நிகர் சமானமாக இருக்கும்.

    பெண்களிடம்,பெண் களுக்கென்றே பிரத்தியேகமான தன்மைகள் சில உண்டு. இவற்றை அடையாளம் கண்டு, மேலும் வலுப்படுத்திக் கொள்ளுதல் பெண்ணியத்தின் அடிப்படை. இவை உடலியல், மரபியல், உயிரியல் ரீதியிலானவை. இத்தகைய தன்மைகளை நவீனம் என்ற போர்வையில்,மறுதலிக்க வேண்டியதோ தூக்கி வீசவேண்டியதோ இல்லை.

    ஒவ்வொருவருடைய புத்திசாலித்தனம் அல்லது அறிவாளித்தனத்தை அளப்பதற்கு, ‘நுண்ணறிவு ஈவு’ (intelligence quotient) என்னும் அளவுகோலைப் பயன்படுத்துவதுண்டு. இதை நாம் அனைவரும் அறிவோம். சொல்லப்போனால், புத்திசாலித்தனம், நுண்ணறிவு (intelligence) என்றெல்லாம் நாம் குறிப்பிடுவதைப் பயிற்சியின் மூலமாகக் கூட்டவும் அதிகப்படுத்தவும் முடியும்.

    ஆனால், இப்போதைய அறிவியல் உலகம், ‘இன்டெலி ஜென்ஸ்’என்பதைக் காட்டிலும் ‘இமோ‌ஷனல் கோ‌ஷன்ட்’(உணர்நிலை ஈவு) என்பதைப்பற்றியே அதிக கவனம் செலுத்துகிறது. அவரவர் உணர்ச்சிகளை நேர்மறையாகப் புரிந்து கொள்ளுதலும், பயன்படுத்துதலுமே உணர்நிலை ஈவு அல்லது உணர்நிலை நுண்ணறிவு என்பதாகும்.

    பிறரோடு தக்க வகையில் தொடர்பு கொள்ளல், பிறரின்உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளல், அநாவசியமான மன அழுத்தத்தை முறையாகக் கையாளல், சவால்களை எதிர்கொள்ளல், சிக்கல்களைவெற்றிகொள்ளல் என்னும் யாவுமேஉணர்நிலை நுண்ணறிவில் அடங்கும். இத்தகைய இமோ‌ஷனல் திறமை, பெண்களுக்கு அதிகம் என்பதுதான், இயற்கையாக நமக்களித்திருக்கும் ப்ளஸ்பாயிண்ட்.

    பழங்காலம் பழங்காலம்என்கிறோமே, அந்தப் பழங்காலத்தில், இளம் வயதிலேயே கணவனை இழந்த அல்லது கணவனால்கைவிடப்பட்ட எத்தனை பெண்கள், தன்னந்தனியாக நின்று குடும்பத்தைப் பேணிப் பராமரித்திருக்கிறார்கள்! அவர்களின் பலம், அவர்களின் இமோ ‌ஷனல் வல்லமை. நம்மிடத்திருக்கும் இந்த நேர்மறைத் தன்மையை, மேலும் அதிகப்படுத்திக் கொள்வதும், தக்க வகையில் பயன்கொள்வதும் நமக்குப் பெருமிதம் தரும்.

    ஒப்பீட்டுச் சிந்தனை கள், நுணுக்கநுட்பத் தொடர்புபடுத்தல் போன்றவையும் பெண்களுக்கு அதிகம்.

    உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் வேறுபாடு கிடையாது, இது காலம் காலமாக நம்மை அடக்கி ஆண்டவர்கள் சொல்லிக் கொடுத்துவிட்ட ‘கன்ஸ்ட்ரக்ட்’என்று பலரும் சொல்லுவார்கள்.

    உண்மையில், புறப்பார்வைக்குப் புலப்படாவிடினும், ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. அளவு, எடை, புறத்தோற்றம் போன்றவற்றில், இரு சாராரின் மூளைகளும் அநேகமாக ஒன்றேபோல் தாம் உள்ளன. ஆனால், பெருமூளையின் பக்கக்கதுப்புப் பகுதியானது, ஆண்களில் சற்று பெரியதாகவும் விரிந்தும் காணப்படுகிறது. கணிதக் கணிப்புகள், நேர மற்றும் வேகக் கணிப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய பகுதி இது.

    மாறாக, அடிமூளையிலிருக்கும், ஞாபக சக்தியோடு தொடர்புடைய ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதியின் வேறுபாடுகள், பெண்களுக்குக் கூடுதல் ஞாபகசக்தி இருப்பதைக்காட்டுகின்றன.

    மூளையில் சாம்பல் பொருள், வெண் பொருள் என்று இரண்டு வகைப் பொருள்கள் உண்டு. சாம்பல் பொருளில்தான், நரம்பணுக்கள் உள்ளன. தசைகளின் செயல்பாடுகள், ஒருங்கிணைப்பு, பலவகை உணர்வுகளை உணர்தல் போன்றவற்றுக்கு நரம்பணுக்களே பொறுப்பு.

    பெண்களில், சாம்பல் பொருள் சற்றே கூடுதல். இன்னொரு பக்கம், ஆண்களைக் காட்டிலும் பெண்களே, வெண்பொருளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    இதனால், மொழித் திறன், வண்ணங்களையும் வடிவங்களையும் ஒன்றுக்கொன்று பொருத்துதல் (மேட்சிங்), பல செயல்களை ஒரே சமயத்தில் செய்தல் (மல்டிடாஸ்கிங்) போன்றவற்றில் பெண்களால் சிறப்பாகச் செயல்படமுடிகிறது.

    இளைய மகளுக்குத் தலை பின்னிவிட்டுக் கொண்டே, மூத்த மகளின் பாடத்தில் வரும் சந்தேகத்தைத் தெளிவித்து, வாணலியிலிருந்து வரும் சத்தத்தை கவனித்து அடுப்பை அணைத்து, கணவருடைய காணாமல் போன சாக்ஸ் இருக்கு மிடத்தைக் கையசைப்பாலேயே உணர்த்தி, வாசலில் வரும் காய்கறிக்காரரிடம் அளவைச் சொல்லி காயும் வாங்கி, போகிற போக்கில் தொலைபேசி அழைப்புக்கும் பதில் கூறிவிட்டுப் போகிற அந்தக் காலத்து அம்மாவை நினைவிருக்கிறதா? அதுதான் மல்டிடாஸ்கிங்.

    நரம்பணு க்களுக் கிடையேயான தொடர்புகளும் பெண்களில் அதிகம். முன்னர் நிகழ்ந்த ஆய்வுகள், வலப்பக்கஇடப்பக்கத் தொடர்புகள் அதிகம் என்று காட்டின. இதனால், வி‌ஷயங்களை ஆராய்தல்,தீர்மானத்திற்கு வருதல் ஆகிய வற்றோடு உள்ளுணர்வுத் திறனும் பெண்களுக்குக் கொஞ்சம் தூக்கல் என்பது தெரியவந்தது.

    சமீபகாலஆய்வுகளில், ஒரேபக்கத் தொடர்புகளும் (எ.கா: வலப்பக்க மூளையில், முன் பின் தொடர்பு) சற்று கூடுதல் என்பது தெரியவந்துள்ளது.

    இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா? புரியவில்லை..? பெண் என்பதாலேயே இயற்கையான, இயல்பான, உயிரியல் ரீதியான சில வல்லமைகள் நமக்கு உள்ளன. அவற்றைப் பயன்கொண்டு, நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்ளலாம்.

    ப்ளஸ்பாயிண்ட்கள் ஒருபக்கம் என்றால், ஒரு சில மைனஸ்களும் உண்டு. பதறாதீர்கள்! உலகில் யாருமே ‘மிகச் சரியானவர்’கிடையாது. ஒரு ப்ளஸ் இருந்தால், ஒரு மைனஸ் இருக்கும். ப்ளஸை அடையாளம் கண்டு வலுப்படுத்திக் கொள்வதைப் போல், மைனஸ் எது என்பதை அடையாளம் கண்டு குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் பழகிக்கொண்டால், வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான்!

    நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய சிக்கல், யாராவது நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு! இதனாலேயே முகஸ்துதிகளையும் போலிப் பாராட்டுகளையும் நம்பி ஏமாந்து போகும் அபாயம் உண்டு. எத்தனையோ பேர் அப்படி ஏமாந்ததைப் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்தானே?

    அவசியமில்லை. செய்ய வேண்டியதைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வகையில் மனசாட்சிக்கு ஒப்பச்செய்தோம் என்றால், எதற்காக அங்கீகாரங்களையும் எதிர்பார்த்து ஏங்கவோ ஏமாறவோ வேண்டும்? நம்மால் முடியும் என்று நம்பிக்கை வையுங்கள்; கண்டிப்பாக முடியும்.

    ஆற்றலுக்கும் செயலுக்கும் நம்முடைய முன்னோர்கள் பெண் வடிவத்தைக் கொடுத்தார் கள். உள்ளுணர்வு, சிக்கல் ஏற்பட்டால் கணநேரம் பதறினாலும் பின்னர் தெளிந்து எதிர்கொள்ளும் துணிச்சல், எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் யதார்த்தம், செயல்படுத்த வேண்டியதை வேகமாக முன்னெடுக்கும் விவேகம் இவையெல்லாம் பெண்களிடம் பொதிந்து கிடக்கின்றன.

    ஒவ்வொருபெண்ணும் முப்பெருந் தேவியரின் மறுவடிவமே ஆவாள்.

    நம்மிடம் ஏதேனும் மைனஸ் இருந்தால், குறை இருந்தால், மலைமகளாக எழுந்து அவற்றைக்களைவோம்.

    குறைகள் களையப்பட்ட பின்னர், அலைமகளாக ஓங்கி, செல்வம் சேர்ப்போம்.

    செல்வமும் உழைப்பும் மென்மையும் மேன்மையும் ஒன்றுகலக்கும் நிலையில், கலைமகளாக ஞானப் பெருமிதம் கொள்வோம்.

    அனைவருக்கும்அன்பார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.
    Next Story
    ×