search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவாமிமலை
    X
    சுவாமிமலை

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம்- சுகமான வாழ்வருளும் சுவாமிமலை

    இறைவனின் அருளைப் பெற விரும்புகிறவர்கள் முதலில் குருவின் அருளைப் பெற வேண்டும். சூரியனுடைய கதிர்கள் உலகத்திற்கே உயிர் அளிப்பது போல் நம் ஆன்மாவைக் கடைத்தேற்ற குருவே சூரியனாக ஜொலிக்கிறார்.


    மாதா, பிதாவிற்கு அடுத்தபடியாக குருவே குறிப்பிடப்படுகிறார்.

    குரு இல்லாமல் எந்தக் காரியமும் கை கூடாது. குருவே நம்மை இறைவனிடத்தில் அழைத்துச் செல்கிறவர். கல்வியைக் கற்பிப்பவர் வித்யா குரு. ஞானத்தை அருள்கிறவர் ஞானகுரு.

    இறைவனின் அருளைப் பெற விரும்புகிறவர்கள் முதலில் குருவின் அருளைப் பெற வேண்டும். சூரியனுடைய கதிர்கள் உலகத்திற்கே உயிர் அளிப்பது போல் நம் ஆன்மாவைக் கடைத்தேற்ற குருவே சூரியனாக ஜொலிக்கிறார்.

    வாழ்வில் நிறைய அனுபவங்கள் பெற்று, கல்வி நிரம்பப் பெற்றவர்களே ஆசானாக இருக்கிறார்கள். பல காலங்கள் கல்வி கற்று, ஞான அனுபவத்தைப் பெற்று, அதன் பிறகே மற்றவர்களுக்கு போதிக்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள். எனவே குருமார்கள் மாணாக்கர்களை விட வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    உள்ளத்து நோயைத் தீர்த்து, ஞான உபதேசம் செய்வதற்கான தெளிவும் அறிவும் பெற பல காலம் ஆகும். ஆனால் தெய்வீக குருமார்களுக்கு இது ஒத்து வராது. அவர்கள் இயல்பாகவே ஞான அறிவு பெற்று, மக்களை வழி நடத்தவே அவதாரம் எடுக்கிறார்கள். குரு என்றால் அது தட்சினாமூர்த்தியைக் குறிக்கும். ஆனால் குருநாதன் என்றால் அது மேலான தெய்வம் முருகனையே குறிக்கும்.

    வயதில் சிறியவன். அறிவில் பெரியவன். சின்னஞ் சிறு வடிவுடன் தந்தைக்கே உபதேசம் செய்த மெய்ஞான மூர்த்தி. எனவே அவனைக் குருபரன் என்கிறார்கள். அந்தக் குமரனே அருணகிரியாருக்கு உபதேசம் செய்தான். குழந்தைக் குருவாகிய முருகன் அவருள்ளத்தில் கருணையோடு வந்து குதித்தான் என்கிறார் அருணகிரியார்.

    “குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதி கொண்டானே” என்கிறார். அவனே சுவாமிமலையில் தந்தைக்குக் குருவாக இருக்கிறான். தந்தையை மாணாக்கனாக வைத்து தான் குருவாக நின்று உபதேசம் செய்கிறான் சுவாமிமலையில். சுவாமிக்கே உபதேசம் செய்த சுவாமிமலை. நான்காவது படைவீடான சுவாமிமலையில் குருவாக நின்று தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்த்துகிறான் முருகன்.

    தானே படைக்கும் கடவுள் என்று ஆணவம் முற்றிய பிரம்மா, ஒருமுறை ஈசனைச் சந்திக்க கைலாயம் வந்தபோது முருகனை மதிக்காமல், குழந்தைதானே என்ற அலட்சியத்துடன் கடந்து செல்கிறார். அப்போது கார்த்திகேயன், “உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?’ என்று கேட்கிறான்.

    பிரம்மாவுக்கு சரியான பொருள் விளக்கம் சொல்லத் தெரியவில்லை. “சிறியவன் என்று யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது” என்ற முருகன் அவரின் நான்கு தலையிலும் குட்டி சிறையில் அடைத்துவிட்டு படைப்புத் தொழிலை தானே நடத்துகிறான்.


    ஜிஏ பிரபா

     

    பிரம்மா சிறையில் இருப்பதை அறிந்து அவரை விடுதலை செய்யக் கூறி ஈசனிடம் முறையிடுகிறார்கள், தேவர்களும், மகாவிஷ்ணுவும். ஈசன் முருகனிடம் பிரம்மாவை விடுதலை செய்யச் சொல்லி கேட்கிறார். தந்தை சொல் கேட்க வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று உலகுக்கு உணர்த்த, முருகன் பிரம்மாவை விடுதலை செய்கிறான். உலகம் மகிழ்கிறது.

    மகிழ்ந்த ஈசன் முருகனின் பெருமையை உலகறியச் செய்ய, கந்தனிடம் கேட்கிறார். “உனக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று.

    “உபதேசம் செய்யும்போது நான் குருவாகவும், நீங்கள் சீடனாகவும் இருந்தால் நான் அதன் பொருள் கூறுவேன்” என்கிறான் குகன். எந்தக் கல்வி முறையும் கற்கும்போது உரிய முறையில் குருவுக்கு மரியாதை செலுத்த வேண்டும். எனவே ஈசன் சிஷ்ய பாவனையில் மண்டியிட்டு, வலது கையால் வாய் பொத்தி கேட்க, முருகன் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உரைக்கிறான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் சுவாமிமலை.

    சுவாமிக்கே குருவாக இருந்ததால் முருகன் சுவாமிநாதன் என்றும், இத்தலம் சுவாமிமலை என்றும் அழைக்கப்படுகிறது. பரமகுரு, தகப்பன் சுவாமி, என்று போற்றப்படுகிறார். திருமுருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்கிறது சுவாமிமலை. திருவேரகம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கும்பகோணத்திலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுவாமிமலை. ஞானகுருவான முருகன் ஆறு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான். வலக்கரத்தில் தண்டாயுதமும், இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும், ருத்திராட்சமும் விளங்க, கருணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறான். இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகளும், ஒருங்கே அமைந்த வஜ்ராவேலைத் தாங்கி நிற்கிறான்.

    முகத்தில் அறிவின் சுடரும், ஞானமும் மிளிர்வதைக் கண்குளிரக் காண முடியும். மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதில் இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் உள்ளது. அழகன் முருகனின் அழகுக்கு அணி சேர்க்க, தங்கக் கவசம், வைரமாலை, வைரவேல், ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்கள் விசே‌ஷ நாட்களில் அணிவிக்கப்படுகிறது.

    சுவாமிமலையின் தலவிருட்சம் நெல்லி என்பதால் இத்தலம் தாத்ரிகிரி என்றும் அழைக்கப்படுகிறது. பூமாதேவி பார்வதியின் சாபத்தால் இங்கு வந்து முருகனை வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றாள். அதன்பின் இத்தலத்தை விட்டுப்போக மனமில்லாமல் நெல்லி மரமாக இங்கேயே தங்கி விட்டாள்.

    இயற்கையான மலைக் கோயில் அல்ல சுவாமிமலை. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மாடக்கோயில். சோழர்களால் அமைக்கப்பட்ட இக்கோயிலின் தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. மலைக்கோயில் அடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதிகளும், விநாயகரும் உள்ளனர். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும், படிகளை ஏறிச் சென்றால் முதலில் கண் கொடுத்த கணபதியின் தரிசனம்.

    செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு கண்பார்வையை அருளியதால் இவருக்கு இப்பெயர். முருகனின் கையில் உள்ள வேல்தான் இங்குள்ள வஜ்ர தீர்த்தத்தை உண்டாக்கியது. தமிழ் வருடங்களின் தேவதைகளே முருகனைப் பூஜித்து இங்கு படிகளாக உள்ளதாக ஐதீகம். எனவே தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் இந்தப் படிகளுக்கு வஸ்திரம் சாற்றி, பாடல்கள் பாடி பூஜை செய்கிறார்கள் பக்தர்கள்.

    இங்கு முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர். விபூதி அபிஷேகத்தின் போது ஞானியாகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால சுப்ரமணியனாகவும் காட்சி அளிக்கிறார். இங்கு முருகன் நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது கருவறையைக் கூர்ந்து பார்த்தால் தெரியும். இதிலிருந்து ஈஸ்வரனும், முருகனும் வேறு, வேறு அல்ல என்பது விளங்கும்.

    இங்கு வைகாசி, கார்த்திகை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனின் அனைத்து விசே‌ஷங்களும், தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறுகிறது.

    சுவாமிமலை முருகனைப் போற்றி முப்பத்தெட்டு திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரியார்.

    எரகத்தமர்ந்த பெருமாளே” என்கிறார்.

    முருகா, உலகப் பொருள்களில் ஆசை ஏற்படாமல், யம தூதர்களின் கையில் சிக்கி அல்லல் படாமல் என்னைக் காத்து அருள்வாய். பொன்மலையைப் போலச் சிவந்த சுவாமிமலையில் அமர்ந்த பெருமாளே! நீயே என்னைக் காக்க வேண்டும் என்கிறார்.

    இந்த உலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. உடலோ, சேர்க்கும் செல்வங்களோ மின்னலைப் போல் தோன்றி மறையும். ஆனால் இதை நிலை என்று எண்ணி, பசியால் வாடுபவர்களுக்கு அன்னம் இட முடியாது என்று மறுப்பவர்கள் முருகனின் அன்பைப் பெறுவது எப்படி? அவர்களின் ஞானம் போலித்தனமானது என்கிறார் அருணகிரியார்.

    முருகனை வணங்குபவர்கள் அனைவரிடமும், கருணை, அன்புடன், ஈகை உணர்வுடன் நடக்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் எத்தனை கல்வி, அறிவு, பொருட் செல்வம் பெற்றிருந்தாலும் அது விட்டில் பூச்சி போல் மறைந்து விடும் என்கிறார் கந்தரலங்காரத்தில்.

    “ஆறு எழுத்து அடங்கிய அருமறைக் கேள்வி

    நா இயல் மருங்கில் நவிலப்பாடி

    விரையுறு நறுமலர் ஏந்தி பெரிதுவந்து

    ஏரகத்து உறைதலும் உரியன அதான்று என்கிறது திருமுருகாற்றுப்படை.

    ஆறெழுத்து மந்திரமான சரவணபவ, என்றோ அல்லது குமாராய நம என்றோ உச்சரித்து, மனமொன்றிப் பாடி, நறுமண மலர்களைத் தூவி முருகனை வணங்கும் பக்தர்கள் நிறைந்த ஏரகம் என்ற சுவாமிமலையில் திரு முருகப் பெருமான் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறான் என்கிறார்.

    சுவாமிமலை முருகனை வேண்டி நின்றால் திருமணம், குழந்தை வரம், வேலை, என்பதுடன் ஞானம், கல்வியும் அருள்கிறான்.

    gaprabha1963@gmail.com -தொடரும்

    Next Story
    ×