search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்திர பாக்கியம் தோ‌ஷம்
    X
    புத்திர பாக்கியம் தோ‌ஷம்

    புத்திர பாக்கியம் தோ‌ஷம் சோகம்

    பூர்வ புண்ணிய ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் வலிமை பெற்ற பெரும்பாக்கியவான்களுக்கு மட்டுமே நல்ல புத்திரர்கள் கிடைக்க பெறும்.


    உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரும் பிறவிப்பயனை அடையவும் தங்களது வம்சம் தழைக்கவும் தமது வாரிசுகளை விருத்தி செய்ய வேண்டும்.

    பிரபஞ்ச நியதி இவ்வாறு இருக்க திருமணமான தம்பதிகளில் அறுபது சதவிகிதத்தினருக்கு உடனே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது. எஞ்சிய நாற்பது சதவிகிதத்தினர் குழந்தை பாக்கியமின்மையால் சங்கடத்துடன் வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் எண்பது சதவிகிதமாக இருந்த குழந்தை பிறப்பு தரமற்ற உணவு பழக்கம், சுகந்திரமான முற்போக்கு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களால் அறுபது சதவிகிதமாக குறைந்து விட்டது வருத்தப்பட வேண்டிய செயல் என்றே கூற வேண்டும்.

    குழந்தைபேறு என்பது பாக்கியம். இதை புத்திர சோகம், புத்திர தோ‌ஷம், புத்திர பாக்கியம் என மூன்றாக வகைப்படுத்தலாம். புத்திர தோ‌ஷம் என்பது குழந்தை பிறப்பிற்கு முன் அல்லது குழந்தை பிறப்பதில் உள்ள பிரச்சினையை குறிக்கும். புத்திர சோகம் என்பது குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், மனவேதனையே புத்திர சோகம்.

    புத்திர சோகம் என்பது திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியமே ஏற்படாத நிலை, ஆண்வாரிசு இல்லாமை, குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோ‌ஷம் இல்லாமை அல்லது பெற்றோர்களை பிரிந்து வாழ்வது. இளவயதில் குழந்தைகள் நோயினால் கஷ்டப்படுவது, ஊனமுற்றவர்களாக பிறப்பது, பெற்றோர்களை காப்பாற்றாமல் விடுவது, குழந்தைகள் நல்லபடியாக இருந்தும் பெற்றோர்கள் சாபத்தை வாங்குவது, பெற்றோரை கொடுமைபடுத்துவது.

    சொத்துக்காகவும் வேறு சில வி‌ஷயங்களுக்காகவும் கொல்லப்படுவது. ஆசையோடு வளர்த்துவரும் பிள்ளைகள் நோயின் காரணமாகவும், விபத்தின் காரணமாகவும், நடுவயதில் அகாலமாக உயிர் துறப்பது, என்று ஒன்பது வகையான புத்திர தோ‌ஷங்கள் உண்டு. இவற்றில் சில தோ‌ஷங்கள், சில காலம் வரை நீடிக்கும். பல தோ‌ஷங்கள், பல வரு‌ஷங்களுக்கு நீடிக்கும். மேலும் சில தொடர்ந்து கடைசிவரை வந்து கொண்டே இருக்கும்.

    இத்தனை தோ‌ஷங்களையும் தாண்டி குழந்தைகள் பிறப்பது, நல்லபடியாக பிறப்பது, நல்லபடியாக படிப்பது, பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அனுகூலமாக இருப்பது, ஒழுக்கத்துடன் இருப்பது, குலப் பெருமையை கட்டிக் காப்பது போன்ற நல்லகுணத்தோடு உள்ள குழந்தைகளும் பிறக்கிறார்கள்.

    ஜோதிடர் ஐ.ஆனந்தி

     

    இது பெற்றோர்கள் செய்த புண்ணியம். இவர்களுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சுப வலிமை பெற்று இருக்கும். எந்த தோ‌ஷமும் இருக்காது. இது புத்திர பாக்கியம். ஈன்ற பொழுதிற் பெரிது வக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள். இந்த புண்ணிய புத்திரனைப் பெற்றவர்கள் அவனுடைய பெற்றோர்கள் என சமுதாயத்தால் போற்றி புகழப்படுவது புத்திர பாக்கியம்.

    பாக்கிய ஸ்தானமான 9-ம் பாவகம் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே நல்ல புத்திரர்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஆண் குழந்தை , பெண் குழந்தை இரண்டும் இருப்பதே புத்திர பாக்கியம் பெற்றவர். ஆண் அல்லது பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் புத்திர தோ‌ஷமே.

    குழந்தை பெற்றவர்கள் எல்லாம் பாக்யவான் கிடையாது. குழந்தை பேறு இல்லாதவர்கள் பாக்ய மற்றவர்களும் கிடையாது. புத்திரபேறின் மூலம் ஒருவர் பெறும் நன்மை தீமைகளே புத்திர தோ‌ஷம், புத்திர சோகம், புத்திர பாக்கியத்தை தீர்மானிக்கிறது .

    இதில் இருந்து 9-ம் பாவகமான பாக்யஸ்தானம் எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். தனக்கு பிறகு குலதர்மத்தை தொடர்ந்து கடைபிடிக்க புத்திர பாக்கியம் அவசியம் ஏற்பட வேண்டும். புத்திர பாக்கியம் ஏற்படுவது பூர்வ புண்ணியத்தால் மட்டுமே. பூர்வ புண்ணியத்தையும் பெற உதவுவது 5-ம் பாவம். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 5, 9-ம் பாவகத்தை கொண்டே புத்திர பாக்கியத்தை தீர்மானிக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் வலிமை பெற்ற பெரும்பாக்கியவான்களுக்கு மட்டுமே நல்ல புத்திரர்கள் கிடைக்க பெறும்.

    ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும்முக்கியம். புத்திர காரகராகிய குருவிற்கு புத்திர பாக்கியம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. செவ்வாய் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர். சுக்கிரன் உயிரணுவிற்கும் , கரு முட்டைக்கும் காரகர் ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்து, ஒன்பதாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம், வேறு கெட்ட கிரகங்களோடு சேர்ந்து அசுப பார்வை பார்க்கும் பொழுதும், அவற்றில் தசா, புக்தி, அந்தரம் நடைபெரும் பொழுதும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, அஷ்டம குரு, காலங்களில் குழந்தைகளால் மன சஞ்சலமும், வெறுப்பும், விரக்தியும், நஷ்டமும், வருத்தமும், இழப்பும், ஏற்படும்.

    பலருக்கு ஜனன ஜாதகத்தில் 5-ம் வீட்டில் பிரச்சினை, தோ‌ஷம் இல்லாவிட்டாலும் 5ம் வீட்டிற்கு அசுப கோட்ச்சார கிரகங்கள் வரும் போதும், தசா புத்தியாலும் ஐந்தாம் வீட்டில் தோ‌ஷம் இல்லாவிட்டாலும், பலருக்கு குழந்தைகளால் மனக்கஷ்டம் இருக்கும். பெற்ற பிள்ளைகளால் வரும் மன வேதனை தவிர்த்து நான்காவது பிரிவு ஒன்று உள்ளது. தத்து எடுத்த குழந்தைகளால் படும் வேதனை.

    தங்களின் தியாக மனப்பான்மையால் பிறந்தவுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட எத்தனையோ குழந்தைகள் தங்களை தத்து எடுத்தவர்களை படுத்தும் பாடு மிகக் கொடூரமாக உள்ளது. தாங்கள் தத்து குழந்தை என்று தெரியாதவரை பிரச்சினை செய்யாத குழந்தைகள் தத்து குழந்தை என்று தெரிந்தவுடன் அவர்கள் வளர்த்தவர்களிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறார்கள் அல்லது தங்கள் தேவைக்கு மட்டும் வளர்த்தவர்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையில்லாத நிலை வந்தவுடன் தவிக்க விடுகிறார்கள்.

    எத்தனையே தத்து குழந்தைகள் நன்றியுடன் வளர்த்தவர்களை கவனித்து வருவதையும் பார்க்கிறோம். இன்றைய காலகட்டத்தில் தத்து குழந்தைகளுக்கு பிறந்த நேரம் சரியாக கணக்கிட முடியாது. பிறக்கும் போதே 8-ம் பாவகம் வேலை செய்யும் குழந்தைகளே பெற்றோரை விட்டு பிரிகிறார்கள்.

    30 வருடத்திற்கு முன்பு வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நல்ல இனம், குலத்தில் பிறந்த தெரிந்த குழந்தைகளை தத்து எடுத்து குழந்தை பாக்கிய பலன் பெற்றார்கள். தெரிந்த குலத்தில் பிறந்த குழந்தைகளின் பிறந்த குறிப்பு துல்லியமாக இருந்தால் அவர்கள் மூலம் தத்து எடுப்பவர்கள், குழந்தைகள் நற்பலன்கள் பெற்றார்கள்.

    தகவல் தொடர்பு வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கெல்ப்லைன் மூலம் குழந்தையை தத்து எடுக்கும் போது பிறந்த குறிப்பு துல்லியமாக இருக்கும் வாய்ப்பு குறைவு. தம்பதியினரின் ஜனன ஜாதகமும் 5, 9-ம் இடத்தில் அல்லது 5, 9-ம் அதிபதியுடன் தத்து குழந்தையின் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இல்லாமல் இருந்தால் தம்பதியினருக்கு வலிமை கூட்டுவதாக இருக்கும்.

    பிறந்த குறிப்பு இல்லாத போது சந்திரன் இருக்கும் இடம் மாறுமே தவிர்த்து வருட , மாத கிரகங்கள் மாறும் வாய்ப்பு குறைவு .இது மிக சூட்சமமான வி‌ஷயம். இவ்வாறு ஆழ்ந்து சீர்தூக்கி தத்து எடுக்கும் போது சிரமம் குறையும். தத்து குழந்தைக்கும் தத்து எடுப்பவர்களின் உறவும் சுமூகமாக இருக்கும்.

    ஜோதிட ரீதியாக ஒருவரின் புத்திர பாக்கியத்தை புத்திரக்காரகரான குருவும் ஐந்தாமிடமெனும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒன்பதாமிடமெனும் பாக்கிய ஸ்தானமுமே தீர்வு செய்கிறது. குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்கான கிரக அமைப்புகளை காணலாம்.

    லக்னத்திற்கு ஐந்தாமதிபதி நீசம்,வக்ரம்,அஸ்தமனம் அடைதல். ஐந்தாமதிபதிக்கு லக்ன ரீதியான பாதகாதிபதி சம்பந்தம் இருப்பது.

    ஐந்தாமதிபதி 6, 8, 12-ல் மறைதல் ஐந்தாமதிபதி நின்ற வீட்டின் அதிபதி நீசம் பெறுவது அல்லது 6, 8, 12-ல் மறைவது. ஐந்தாம் அதிபதிக்கு சனி, ராகு/கேதுவின் சம்பந்தம் இருப்பது.

    ஐந்தாமிடத்திற்கு செவ்வாய்,சனி ,புதன்,ராகு/ கேது போன்ற கிரகங்கள் சம்பந்தம். ஐந்தாமிடத்தில் தனித்த குரு நிற்பது. புத்திரகாரகன் குருவிற்கு செவ்வாய், புதன், சனி, ராகு-கேதுவின் சம்பந்தம் குரு லக்ன பாதகாதிபதி சம்பந்தம் பெறுவது குரு வக்ரம், அஸ்தங்கம் அடைதல் குரு மற்றும் ஐந்தாம் அதிபதிக்கு திதி சூன்ய பாதிப்பு.

    செவ்வாய் தோ‌ஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் தோ‌ஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது. ராகு-கேது தோ‌ஷம் உள்ள ஜாதகத்தை ராகு/கேது தோ‌ஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது.

    ஆண், பெண் ராசி சஷ்டாஷ்டகமாக அமைவது குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பாதிப்பது ஜன்ம லக்னம், ராசி மற்றும் 5-ம் இடத்தை சனி பார்ப்பது.

    7-ல் சனி, 8-ல் செவ்வாய், 5-ல் கேது நிற்பது 1, 5, 8, 12-ல் சனி, செவ்வாய் இணைவு பெறுவது புத்திர தோ‌ஷம். ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் கேதுவுடன் சம்பந்தம் பெறுவது.

    ஆண், பெண்ணின் 5, 9-ம் அதிபதிகளுக்குள் சம்பந்தமின்மை குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் உண்டாகும்.

    கிரகச் சேர்க்கையில் சூரியன்+ ராகு, சூரியன்+ சனி, சந்திரன் + ராகு, சனி + ராகு, செவ்வாய் +ராகு, செவ்வாய் + கேது போன்ற கிரகச் சேர்க்கை சிலருக்கு குழந்தை பிறப்பில் பிரச்சினையையும் ஒரு சிலருக்கு பிறந்த குழந்தைகளால் பிரச்சினைகளையும் தரும். இது போன்ற பல்வேறு ஜோதிட ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பு தடைபடுகிறது.

    திருமண பொருத்தத்தின் போது புத்திர தோ‌ஷ ஜாதகத்திற்கு புத்திர தோ‌ஷம் இல்லாத ஜாதகத்தை பொருத்த வேண்டும். ஆண் ஜாதகத்தில் புத்திர தோ‌ஷம் இருந்து பெண் ஜாதகத்தில் புத்திர தோ‌ஷம் இல்லாமல் இருந்தால் குழந்தை பேறு அமைவது கடினம். ஆண் ஜாதகத்தில் புத்திர தோ‌ஷம் இல்லாமல் பெண் ஜாதகத்தில் புத்திர தோ‌ஷம் இருந்தால் காலம் தாழ்த்திய புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை தீர்மானம் செய்யும் மகேந் திரப் பொருத்தமும் , ரஜ்ஜு பொருத்தமும் மிக மிக முக்கியம்.

    Next Story
    ×