search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...என்னையே நினைவில் கொள்

    தன்னை வழிபடும் பக்தர்கள் அகங்காரம் இல்லாமல், மனதில் கர்வம் இல்லாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சாய்பாபா பல்வேறு சமயங்களில் சூசகமாக மற்றும் பரிபாஷைகள் மூலம் அற்புதமான பொன்மொழிகளை வெளியிட்டு உள்ளார்.
    சாய் பாபா தனது பக்தர்களிடம் எதிர்பார்த்தது அன்பான மனதை மட்டுமே.  “என் உதவியை வேண்டுபவர்கள் மனதில் அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும். அதுதான் என் வடிவம். அதுதான் என் தத்துவம்” என்று சாய்பாபாவே கூறி உள்ளார்.

    சாய்பாபாவை பொறுத்தவரை மனதில் துளியளவு கர்வம் இருந்தாலும் அருகில் சேர்த்துக்கொள்ள மாட்டார். அன்பும், பக்தியும் மேலோங்கி இருக்கும் மனநிலையில் வெறும் தண்ணீரை கொடுத்தால் கூட அவர் ஏற்றுக்கொள்வார். எந்த பக்தராவது தட்சணையோ, தானமோ கொடுக்கும்போது கர்வத்துடன் நடந்து கொண்டால் அவர்கள் பக்கமே திரும்பி பார்க்க மாட்டார் என்பது ஐதீகமாகவே உள்ளது.

    தன்னை வழிபடும் பக்தர்கள் அகங்காரம் இல்லாமல், மனதில் கர்வம் இல்லாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சாய்பாபா பல்வேறு சமயங்களில் சூசகமாக மற்றும் பரிபாஷைகள் மூலம் அற்புதமான பொன்மொழிகளை வெளியிட்டு உள்ளார். அந்த அற்புதமான பொன்மொழிகளை காணலாம்.

    நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவை அனைத்தும் எனக்கு முழுமையாகத் தெரிந்து விடும். எனக்குத்தெரியாது என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்.

    இந்த உலகில் உள்ள அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் மற்றும் அனைத்து உயிரினங்களையும் நான் மனதார நேசிக்கிறேன். அவை அனைத்தையும் நானே அரவணைத்து பாதுகாத்து வருகிறேன். இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவன் நான்தான் என்பதை ஒவ்வொரு பக்தனும் புரிந்து கொள்ளுங்கள்.

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்துமாக நானே இருக்கிறேன். ஒவ்வொருவரது மனதிலும் உணர்ச்சி கள் உள்பட முக் குணங்களையும் ஏற்படுத்துபவன் நான்தான். எனவே என்னிடம் கவனத்தை செலுத்துங்கள். யார் ஒருவர் தினமும் என்னை மனதால் நினைக்கிறாரோ அவருக்கு கடுகளவு கூட துன்பம் வராது.

    நீங்கள் இந்த உலகில் எந்த மூலை யில் வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை தேடி சீரடிக்கு வர வேண்டும் என்று அவசியம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.

    என்னைப்பார்க்க வேண்டுமானால் ஒவ்வொரு ஜீவராசியிடமும் அன்பை கடைபிடியுங்கள். ஒவ்வொரு ஜீவ ராசிகளிலும் நான் இருக்கிறேன். இதை உணர்ந்து கொண்டு எல்லா ஜீவ ராசிகளிடமும் என்னை பாருங்கள். உங்களுக்குள்ளும் நானே இடம் பெற்றிருக்கிறேன். இதை நீங்கள் பயிற்சியாக மேற்கொண்டால் நாளடைவில் என்னுடன் ஒன்றிணையும் ஒரு மகத்தான நிலையை பெறுவீர்கள்.

    உங்கள் மனதை என் மீது எப்போதும் செலுத்துங்கள். உங்களது கவனம் வேறு எந்த பக்கமும் திரும்ப வேண்டாம். அதில் உறுதியாக இருங்கள். என்னையே முழுமையாக நம்பி வழிபடுங்கள். அப்படி என்னை முழுமையாக நம்பும் பக்தனின் வீட்டில் உணவுக்கோ, உடைகளுக்கோ பஞ்சம் என்ற நிலை ஒரு போதும் ஏற்படவே ஏற்படாது.

    என்னை தினமும் தியானிக்கும் பக்தர்களின் உள்ளங்களில் நான் குடியேறுகிறேன். அவர்களது நலனை பாதுகாப்பதுதான் எனது முக்கிய பணி. இதை நான் ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    பக்தனுக்கு நான் சொல்வது சாதாரணமாக தெரியக்கூடாது. நான் சொல்லும் அகங்காரமற்ற அன்பில் கவனம் செலுத்துங்கள். அதில் உறுதியோடு இருங்கள். யார் ஒருவர் இதில் எப்போதும் உறுதியான மனநிலையுடன் இருக்கிறாரோ அவர்களோடு நான் சர்வ காலமும் நீடித்து இருப்பேன்.

    சில பக்தர்கள் தனது மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார், உறவினர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பார்கள். அத்தகைய பாசத்தை என் மீதும் திருப்ப வேண்டும். அந்த பக்தன்தான் என்னுடைய உண்மையான நண்பனாக இருக்க முடியும். அந்த நண்பன் கடலில் கலக்கும் நதிகள் போல என்னுள் வந்து கலந்து விடுவான்.

    உண்மையான பக்தர்கள் என்னிடம் எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தைரியமாக என்னிடம் வேண்டுதல்களை வைக்கலாம். அதற்காகவே நான் காத்திருக்கிறேன். என் மீது சுமைகளை சுமத்தினால் அதைத்தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

    எந்த ஒரு காலக்கட்டத்திலும் என் பக்தர்கள் என்னிடம் தங்களது ஆசைகள், லட்சியங்கள், வேண்டுகோள்களை சொல்லிவிட வேண்டும். அப்படி சொல்லி என்னை மனதார ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு நிச்சயம் நான் காட்சிக்கொடுப்பேன். எந்த ஒரு பக்தன் என்னிடம் முழு மனதையும் தருகிறானோ அவனது உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் எந்த ஆபத்தும் நேராது. தைரியமாக இருக்கலாம்.

    பட்டினி கிடந்து என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அது அவசியம் இல்லாதது. ஆனால் பசியையும், தாகத்தையும் பொறுத்துக்கொண்டு என்னை தவிர வேறு எதுவுமே முக்கியமானது அல்ல என்று எந்த ஒரு பக்தன் நினைக்கிறானோ அவனுக்கு நான் அடிமையாக இருப்பேன்.

    என்னை தினமும் நினைக்கும் பக்தன், என்னை மலர்களால் அலங்கரித்து என்னையே நினைத்து தொழுது வரும் பக்தன் மிக எளிதாக கடவுளை நெருங்க முடியும்.

    என்னை எந்த வடிவத்திலும் பக்தர்கள் நினைத்துக்கொண்டு நெருங்கலாம். புத்தராகவும் மற்ற கடவுள் உருவங்களாகவும் என்னை நினைத்துக்கொண்டாலும் கவலை இல்லை. என்னை நினைத்து என் நாமத்தை போற்ற வேண்டும் என்பதே கடமையாகும்.

    ஒவ்வொரு பக்தனும் எனக்கு ஒரு குழந்தை மாதிரிதான். நான் உங்கள் பிதா. என்னிடம் இருந்தே நீங்கள் ஒவ்வொன்றையும் பெற வேண்டும். உங்களுக்கு ஆசீர்வாதம் செய்வதே என்னுடைய முக்கிய பணியாகும்.

    தவறு செய்யும் எந்த குழந்தையையும் தாய் வெறுப்பதில்லை. நானும் என் பக்தனிடம் கோபம் கொள்வதில்லை. நதியில் இருந்து வரும் தண்ணீரை எந்த கடலாவது திருப்பி அனுப்புமா? நானும் அப்படித்தான். என்னை நாடி வரும் எந்த ஒரு பக்தனும் வெறும் கையுடன் திரும்பிச்செல்லமாட்டான்.

    நான் என் பக்தனிடம் அன்பையும், பக்தியையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன். அதை தரும் பக்தனுக்கு நான் அடிமையாகவும், கடவுளாகவும் இருக்கிறேன். என் பக்தன் 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அவன் என் பக்தன்தான். அவனை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். என்னை நினைக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் அவனை நினைத்துக்கொண்டேதான் இருப்பேன். அவனுக்கு தேவையானதை செய்து கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன்.

    எந்த பக்தன் என்னை உள்ளன்போடு நினைத்து மனதுக்குள் உருகுகிறானோ அவனுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயமாக காட்சி கொடுப்பேன். அந்த பக்தன் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கவலை இல்லை. பிராயணம் செய்ய எனக்கு எந்த ஒரு வாகனமும் தேவையில்லை.

    நினைத்தவுடன் என் பக்தன் முன் போய் நிற்பேன். பாபா சீரடியில்தானே இருக்கிறார். இங்கு எப்படி வருவார் என்று பக்தன் நினைத்தால் அவன் முற்றிலும் என்னை அறியாதவனாகத்தான் இருக்க முடியும்.

    இந்த பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன். பூகோளத்தில் ஒவ்வொரு அனுவிலும் என்னை காணலாம். எல்லா பிரபஞ்சங்களும் எனக்குள்தான் இருக்கிறது. என்னை தினமும் தியானிப் பவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரிய வரும்.

    கடவுள் எல்லா இடத்திலும் தனது பிரதிநிதிகளை வைத்திருக்கிறார். அவர்கள் அளவற்ற சக்தி படைத்தவர்கள். அந்த வகையில் எனக்கு அபார சக்தி உண்டு. நான் உருவம் இல்லாதவன். நான் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்தும் இருக்கிறேன்.

    ஒவ்வொரு உயிரினத்திலும் நான் இருக்கிறேன் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். அரசன் முதல் ஆண்டி வரை கொசு முதல் பெரிய உயிரினங்கள் வரை அனைத்திலும் நான் வியாபித்து இருக்கிறேன். சர்வமும் நானே.

    என்னை நினைக்காமல் ஒரு பக்தன் ஒரு பொழுதை கழித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்காக அவனை நான் கைவிடவும் மாட்டேன். என்னிடம் தன்னை ஒப்படைத்தவர்களை நான் கடைசி வரை காத்துக்கொள்வேன். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் என் பக்தன் ஒருவன் இறக்க நேரிட்டாலும் அவன் உயிர் பிரிந்த அடுத்த வினாடியே அவனை என்னுடன் சேர்த்துக்கொள்வேன்.

    என்னை அறிய வேண்டுமானால் தினமும் என்னை சிந்திக்க வேண்டும். பாபா யார்? நாம் யார்? நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் யோசித்துப்பார்க்க வேண்டும். அப்படி யோசித்தால்தான் ஆத்மாவின் உண்மை நிலையை ஒவ்வொரு பக்தனும் உணர முடியும்.

    நான்தான் நீ.... நீதான் நான்.... உனக்கும், எனக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எதனால் நீ ஆக்கப்பட்டிருக்கிறாயோ, அதனால்தான் நான் ஆக்கப்பட்டிருக்கிறேன். உன்னையும், என்னையும் பிரித்திருப்பது சிறிய சுவர்தான். அந்த வேற்றுமையை அகற்றி விட்டால் என்னை தெளிவாக பார்க்க முடியும். அதற்கு ஒவ்வொரு நாளும் இடைவிடாது நீ என்னை சிந்திக்க வேண்டும்.

    வேத சாஸ்திரங்களை நன்றாக ஆராய்ந்து ஆத்மா பற்றி உணர்ந்து கொள். சம்சார வாழ்க்கை மனதிற்கும், தேகத்திற்கும் உரியது. அதில் இருந்து யாரும் தப்பி விட முடியாது. காட்டுக்குள் ஓடி விடுவதால் சம்சார வாழ்க்கையில் இருந்து விடுபடவே முடியாது. கர்மாவின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். அதற்காகவே தேகம் ஏற்படுகிறது.

    இத்தகைய நிலைகளில் இருந்து மேம்பட வேண்டுமானால் என்னையே நினைத்துக்கொள். புயல் காற்று அடிக்கும்போது கடலில் இருக்கும் தண்ணீர் பெரிய அலைகளாக எழும்பி கரையில் வந்து மோதும். அப்படி மோதும்போது தண்ணீர் பல நீர்த்திவலைகளாக மாறும். அந்த நீர்த்திவலைகள் அனைத்தும் தண்ணீரின் பல் வேறு உருவங்கள். காற்று தணிந்து விட்டால் அந்த நீர்த்திவலைகள் மறைந்து விடும்.

    உலக சிருஷ்டிகளின் இயக்கங்கள் இப்படித் தான் நடக்கின்றன. எனவே நசித்து போகக்கூடிய எதன்மீதும் நாட்டம் கொள்ளாதீர் கள். என்னிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு சாய் பாபா கூறி உள்ளார்.

    இப்படி தன்னையே நினைக்க சொல்லி இருக்கும் பாபா அனைத்து உயிர்களிலும் வாழ்வதை பல தடவை ஆதாரமாக காட்டி உள்ளார். அதுபற்றி அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×