search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாங்கல்ய தோஷம் நீங்க தீர்வுகள்
    X
    மாங்கல்ய தோஷம் நீங்க தீர்வுகள்

    மாங்கல்ய தோஷம் நீங்க தீர்வுகள் - பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும்.இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.
    உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கைத் துணை மிக அவசியம்.வாலிபப் பருவத்தை எட்டிய அனைவரும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பது  உலக இயல்பு. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்குப் பின் அமையும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.இதற்குச் ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    குறிப்பாக  மாங்கல்ய தோஷம் என்ற குறைபாடு பல பெண்களுக்கு திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்த தவறுகிறது. அல்லது திருமணத்திற்குப் பிறகு மிகுதியான சங்கடங்களைத் தருகிறது. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்  மாங்கல்ய தோஷம் என்பது உண்மையா? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

    ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின்  ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும்.இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.

    2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.

    அதன் படி 2,8-ம் இடத்தில்  ஆட்சி, உச்சம், நீச கிரகம் நின்றாலும் செவ்வாய், சனி சம்பந்தமாக இருந்தாலும்  சனி, செவ்வாயுடன் ராகு,கேது இணைந்து இருந்தாலும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சேர்ந்து இருப்பது சூரியன்,ராகு,கேது, சனி, செவ்வாய் போன்ற  அசுப கிரகங்கள் நிற்பதும்,  நீச, அஸ்தங்கம்,வக்ரம் பெற்ற கிரகம் அமர்வதும்  மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி உண்டாகும். 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

    தோஷத்தின் விளைவுகள்

     இந்த தோஷத்தால் தம்பதி களுக்குள் வாக்குவாதம் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் பயனற்ற நிலை உண்டாகும். சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாத ஆண், குடும்பத்தை முறையாக வழிநடத்தத் தெரியாத, சம்பாதிக்காத, சோம்பேறியாக, ஊதாரியாக வாழும் கணவர் அமைவார். இல்லையேல் சில குடும்பத் தலைவர்கள் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன் விருப்பப்படியே மனைவி வாழ வேண்டும் என்று விரும்புவார். கைப்பாவையாக நடத்துவது, அடிமை போல் வேலை வாங்குவதும் 8-ம் மிடக் குறைபாட்டில் அடங்கும். வாழ்க்கைத் துணைக்கு தீராத , தீர்க்க முடியாத அதிகப்படியான கடன் அல்லது நோய் இருக்கும்.

    தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது. அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

    ஜோதிட ரீதியான தீர்வுகள்

    ஜாதகப் பொருத்தம் பொதுவாக தம்பதிகளின் ஜனன கால ஜாதகத்தில் 7, 8-ம் இடங்கள் இருவருக்கும் சுத்தமாக அமைவது மிகவும் உத்தமம். லக்னம் ,8-ம் இடம் பலம் குறைந்து பாவ கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டால் ஆயுள் கேள்விக்குரியதாகும்.பெண்ணின் ஜாதகத்தில் 7, 8-ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் சம்பந்தம் பெற்றால் ஆணின் ஆயுள் நீடிக்கும்.அதே போல் ஆணின் ஜாதகத்தில்  2, 7-ம் இடம் வலுவாக இருந்தால் பெண் நூறு ஆண்டு வாழ்வாள்.

    இவ்வாறு வலுவாக உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைத்தால் பாதிப்பைத் தடுக்கலாம். 8-ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன் கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்களுக்கு சகிப்புத் தன்மை நிறைந்த சுபக்கிரக ஆளுமை யும், வசியமும் கூடிய ஜாதகத்தை  இணைத்தால் மண வாழ்க்கை பாதிக்காது.
    2, 8-ம் இட ராகு-கேதுக்கள்  பிரச்சினையான மணவாழ்க்கை , குடும்ப  சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கை துணையின் பேச்சும் செயலும் மன வருத்தம் தரும்படியாகவும் அமையும்.  2, 8-ல்  ராகு,கேது அமர்ந்த வாழ்க்கைத் துணையை இணைத்தால் சுமூகமான மணவாழ்க்கை உண்டாகும்.

    8&ல் செவ்வாய் இருப்பவர்களுக்கு  2, 7, 8-ம் இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. 8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால்  மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.இவர்கள் தீர்க்கமான ஆயுள் நிரம்பிய ஒருவரை மணந்தால் திருமண பந்தம் நூறு ஆண்டுகள் நீடிக்கும்.

    ரஜ்ஜுப் பொருத்தம்

    நட்சத்திரப் பொருத்தங்களிலேயே மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டுகள் வாழ மாங்கல்யப் பொருத்தம் எனும் திருமண கயிறுப் பொருத்தம் மிக அவசியம்.இது ஆயுளைப்பற்றிக் கூறும் பொருத்தமாகும்.தசவிதப் பொருத்தங்களில் அனைத்துப் பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை யெனில் திருமணம் செய்யக் கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்ற இந்தப் பொருத் தம் இல்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

    ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாதவர்களும் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டுமே அசுப பலன்களை சந்திக்கி றார்கள். மற்ற காலங்களில் சிறு சிறு மனஸ்தாபத்தை மட்டுமே தருகிறது.

    தசாபுத்தி

    ஜோதிட ரீதியாக இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய  விஷயம் என்னவென்றால் தசாபுத்தி மட்டுமே மாங்கல்ய தோஷத்தின் வீரியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது தெளிவாகிறது.

    பொதுவாக ஒருவருக்கு 8-ம்  அதிபதியின் தசை புத்தி நடப்பில் இருக்கும் போதும் திருமணமான குறுகிய காலத்தில் 8&ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி செயல்பட்டாலும் திருமணம் நடத்தி வைத்தால் கண்டிப்பாக கோர்ட், கேஸ், பிரச்சினை, விவாகரத்து ஏற்பட்டுவிடுகிறது அல்லது அவர்களது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாகவே அமைந்து விடுகிறது. 

    திருமணமாகி குறைந்தது 10 வருடங்களுக்கு மேல் இப்படியான அமைப்பில் தசாபுத்தி பெண்ணுக்கு இருந்தால் அந்தப்பெண் கணவனுக்காக சம்பாதித்துப் போட்டு கணவனின் சுமைகளை இவளே ஏற்றுக் கொண்டு குடும்ப பாரத்தை சுமக்கிறாள்.இப்படியான நிலை ஒரு ஆணுக்கு இருந்தால்  தன் மனைவியின் சகோதர, சகோதரிகளையும், மாமனார், மாமியாரையும் தூக்கிச் சுமக்கும் நிலை உருவாகிறது.

    இது சுகமான சுமைதானே. கணவனின் சுமையை தன் மேல் ஏற்றிக் கொண்டு குடும்ப பாரத்தை தாங்கும் இல்லாள் தெய்வப் பிறவி. அவளின் சேவைகள் காலத்தின் பதிவேட்டில் புண்ணிய பலனாக பதிவேற்றம் செய்யப்படும்.

    தன் மனைவியின் குடும்ப பாரத்தைச் சுமக்கும் ஒரு ஆண் காவியத் தலைவன்.அவனுடைய தியாகங்கள் மனைவியின் மனதில் ராஜ கோபுரமாக உயர்ந்து நிற்கும். கால கணக்கில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்த பலனாக எழுதப்படும். இது தம்பதிகளின் அன்யோன்யத்தையும் நெருக்கத்தையும் தானே வெளிப்படுத்துகிறது. இது எப்படி மாங்கல்ய தோஷமாகும்?

    பொருளாதாரம் என்ற விசயத்தை முன்னிலைப் படுத்தி திருமணம் என்ற வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் ஆண்-பெண்  இருவருமே சம்பாதித்து குடும்பம் நடத்த வேண்டிய கால சூழல் உலகில் நிலவி வருகிறது. தற்காலத்தில் அனைத்துப் பெண்களும் சுயமாக சம்பாதித்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறார்கள்.

    ஆண்களை முழுமையாக நம்பி வாழும் பெண்கள் குறைவு.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,வாழாவெட்டி, மாங்கல்ய தோஷம் அது,  இது என்று பெண்கள் மேல் வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை குறைந்து பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று பேசும் காலம் வந்துவிட்டது.  அதே நேரத்தில் சம்பாதிக்காத ஆண்களை  பெண்கள் துச்சமாக எண்ணி உதறி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கத்  துணிந்து விட்டார்கள் என்பதால் மனைவியை மிரட்டி அடிபணிய வைத்த காலம் மறைந்து விட்டது. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு வரும் இந்த காலத்தில் மாங்கல்ய தோஷம் பற்றிப் பேசுபவர்கள் அறியாமைவாதிகள்.

    ஆயுள் குற்றம்

    ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பை மட்டும் வைத்து திருமணம் முடிப்பவர்களும் பெற் றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்பவர்களுக்கும் 8&ம் இடத்துடன் சம்பந்தம் பெறும்  தசா புத்திகள் வலுவாக இயங் கினால் மட்டுமே ஆயுள் குற்றம் உருவாகிறது.

    ஒருவரின் ஜனனம் ஏற்பட்ட நாளில் ஆயுளும் தீர்மானிக்கப்பட்டு விடும். ஒரு பெண்ணின் மாங்கல்ய தோஷத்தால் ஆயுள் குறைவுபடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஆயுள் பலம் நிறைந்த ஒருவர் பெண்ணின் ஜாதகத்தில் 8ம் இடம் பலம் குறைந்திருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை நிச்சயம் வாழ்வார்.

    ஜனன கால ரீதியாக ஆயுள் பலம் குறைந்த ஒருவரின்  மறைவிற்கு மனைவி எப்படி காரண மாக முடியும்.கோடான கோடி மக்கள் தொகை யில் ஆண்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும், பெண்களின் விகிதாச்சாரம் குறைவாகவும் உள்ளது. திருமணத்திற்குப் பெண் கிடைப்பதே அரிதான இந்த  கலியுகத்தில் மாங்கல்ய தோஷம் என்ற பெயரில் கிடைக்கும் நல்ல வரனையும் இழக்கும் ஆண்கள் தான் அதிகம்.

    உலவியல் ரீதியாக ஆயுள் குற்றம்  என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றால் ஒரு மனிதனுக்கு  மரணம் நோய்,விபத்து, தற்கொலை போன்ற காரணங் களால் ஏற்படலாம். 25 வருடங்களுக்கு முன்பு வரை  போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் தீராத நோய் என்ற ஒன்று இருந்தது.மருந்துவ வசதி பெருகிய இந்த காலத்தில் எல்லா நோய்க்கும் தீர்வு உண்டு என்பதால் இதை தோஷமாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன்  6, 8, 12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புத்திகளில் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்வது அல்லது வீட்டில் பெரியவர்களிடம் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்பவர்கள் கடன் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.

    வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை எதிர்த்துப் போராட தைரியம் இல்லாதவர்கள் கல்யாணம் செய்து கொண்டு மாங்கல்ய தோஷத் தின் மேல் பழிபோடுவது நியாயமா?விபத்து என்பது மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயல். ஆயுள் குற்றம் என்பது ஆயிரத்தில் ஒரு ஜாதகத்திற்கு மட்டுமே உண்டாகும் பிரச்சினை.இதை அனைத்து ஜாதகத்திலும் பொருத்தி பல பெண்களின் வாழ்க்கை யில் திருமணம் என்ற அத்தியாயம் இல்லாமல் செய்வது மிகவும் வருந்தத்தக்க செயல்.

    ஒரு சதவிகிதப் பிரச்சினையான மாங்கல்ய தோஷத்தை நூறு சதவிதப் பிரச்சினையாக உருவகப்படுத்துவதால் மாங்கல்ய தோஷம் என்ற கருத்து உண்மையாகி விடாது. துக்கம், சந்தோஷம், சண்டை, சமாதானம், ஏற்றம், இறக்கம், வெறுப்பு, ஆதரவு இவற்றின் கலவைதான் திருமண வாழ்க்கை.

    பொறுமை, சகிப்புத்தன்மை இன்மையால் பலர் கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பதே மாங்கல்ய தோஷத்திற்கு முழுமையான காரணம்.ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும்  பிறரின் கோபத்தாலும், சாபத்தாலும் உருவாகுபவை.

    எந்த தோஷமும் தானாக வருவதில்லை. கோபத்தாலும் சாபத்தாலும்  தோஷமாக வரவழைக்கப்படுகிறது.  ஒருவரின்  நடத்தை யாரையும் பாதிக்காத வகையில்  வாழப் பழகிக் கொள்ளும் போது கோபமும், சாபமும் நீங்கி மாங்கல்ய தோஷம் என்ற கூற்று செயலற்றுப் போகும்.  ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் பொறுத்த வரை எப்படியான தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் இணைக்கும் ஜாதகமே  நிரந்தர தீர்வு தரக்கூடியதாக இருக்க முடியும்.  பெண்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்கவும் திருமண வாழ்க்கை தித்திக்கவும், திருமணத் தடை அகலவும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்கிர ஹோரையில் திருவானைக்காவல்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் அருள்மிகு ஜம்புகேஸ்வரையும் வழிபட சுப பலன் உண்டு.

    Next Story
    ×