search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இதயம் காக்கும் வாழைப்பழம்
    X
    இதயம் காக்கும் வாழைப்பழம்

    இயற்கைத் தரும் இனிய வாழ்வு - இதயம் காக்கும் வாழைப்பழம்

    தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பழம் என்ற வகையில் அதிகப் பயன்பாட்டில் இருப்பது வாழைப்பழம் தான்.
    பழம் என்றாலே வாழைப்பழம் தான் என்றளவிற்கு நம்மிடம் மதிப்பும், பரவலாக்கமும் பெற்றிருப்பது வாழைப்பழந்தான். யார் கைக்கும் எட்டும் உயரத்திலும் இருப்பதோடு பொருளாதார ரீதியாகவும் பதம் பார்க்காத பழம் வாழைப்பழம். நம்முடைய சடங்குகள் அனைத்திலும் முதன்மை இடம் பிடிப்பது வாழைப்பழம் தான். தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பழம் என்ற வகையில் அதிகப் பயன்பாட்டில் இருப்பது வாழைப்பழம் தான்.    

    உலகிலேயே அதிக வாழைப்பழம் விளைவிக்கும் நிலப்பகுதி என்ற பெருமையைப் பெற்றிருப்பது தமிழகமே. உலகில் வாழை அதிகம் விளைவிக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிகம் விளைவிக்கும் மாநிலம் தமிழகம். அடுத்தடுத்த இடங்களில் குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்திரா என வருகின்றன. இங்கிருந்து தான் கர்நாடகத்தின் பெரும் பகுதிக்கும், ஆந்திராவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கும் வாழை ஏற்றுமதியாகிறது. பிற பழங்களின் விலை சமீப ஆண்டுகளில் சடசடவென்று பல மடங்காக உயர்ந்து விட வாழைப்பழம் மட்டுமே இன்றும் ஏழைகளுக்கும் எட்டும் கனியாக இருக்கிறது. உழைப்பாளி மக்களுக்கு உடலுழைப்புக்கு ஏற்ற எரிசத்தாகிய கார்போஹைட்டிரேட்டும் பிற நுண் சத்துக்களையும் வழங்குவது வாழைப்பழமே.  

    பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, மங்னீசியம், காப்பர், மேக்னீஸ், எரிசத்து, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்களைக் கொண்டுள்ளன.  எளிதில் கிடைக்கும் பழங்களில் இவ்வளவு சத்துக்கள் மற்றெந்தப் பழங்களிலும் இல்லை. எத்தனை வகையான வாழைப் பழங்களை எடுத்துக் கொண்டாலும் அத்தனையும் கிட்டத்தட்ட ஒரே விதமான சத்துக்களையேக் கொண்டுள்ளன. மற்ற பழங்களை விட வாழையின் சிறப்பம்சம் இதிலுள்ள நார்ச்சத்து.

    கிட்டத்தட்ட ஏழு சதவீத்ததிற்கும் மேலான நார்ச்சத்தினைக் கொண்டுள்ளது வாழைப்பழம். இதன் நார்ச்சத்தானது வெள்ளையாக உள்ள மாவுப் பகுதிக்கு சிறந்த பாதுகாவலான இருப்பதுடன் அதனை உண்பவருக்கு செரிமானத்தை எளிமைப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த நார்த் தன்மையானது வாழையின் மிதமான இனிப்பையும் மட்டுப்படுத்தும் துவர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இந்தத் துவர்ப்பு வாழைப் பழத்தின் சர்க்கரையை ரத்தத்தில் ஏறும் வேகத்தைத் தணித்து விடுகிறது.

    ஆகையால் அதன் நுண்சத்துக்கள் ரத்தத்தில் விரைவாகக் கலக்க ஏதுவாகிறது. எனவே நாம் வழக்கமாக உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மூளைச் சோர்வும், உடல் களைப்பும் ஏற்படும் பொழுது பிற சூடான பானங்களை அருந்துவதையும், சிற்றுணவு என்று கருதும் நொறுவிகளைத் தவிர்த்து விட்டு வாழைப் பழம் ஒன்றை தோலை மேலிருந்து கீழாக நீக்காமல்  இரண்டு புறமும் கனத்தக் காம்புகளை மட்டும் நீக்கி விட்டு  அப்படியே தோலுடன் சிறு சிறு வட்டத் துண்டுகளாக குறுக்காக வெட்டி துவர்ப்பின் கடுமையைத் தணித்து உண்ணலாம். அவ்வாறு உண்ணும் போது மூளைக்குச் செல்லும் ரத்தவோட்டம் சீராகவும், சத்துக்கள் மிகுந்ததாகவும் இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜனை உடனே ஏற்றுவதால் மூளை விரைவிலேயே  சுறுசுறுப்பு அடையும்.

    வாழைப்பழத் துண்டுகளில் நார்ச்சத்து இருப்பதால் பழத்தின் மாவுத் தன்மை வயிறு எனும் இரைப்பையிலும், சிறுகுடலிலும்  தங்காமல் மிக விரைவாக பெருங்குடலுக்குச் சென்று விடும். எனவே அடுத்த வேளைக்கு மந்தத் தன்மையில்லாமல் பசியுணர்வு தோன்றும். பெருங்குடல் தங்கிய நார்ச் சத்து மிகுந்த வாழையின் கூறுகள் நொதிக்கும் பொழுது உருவாகும் நல்ல பாக்டீரியாக்கள் பெருங்குடலில் நீண்ட நாட்களாகத் தேங்கி இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து விடும். மலச் சிக்கல் உள்ளவர்களுக்கும் வெகு விரைவில் நீங்கி விடும்.

    வாழைப்பழம் தின்றால் மலச் சிக்கல் நீங்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அது அத்தனை பேருக்கும் பொருந்தாது. உணவைப் பொருத்த அளவில் அனைவருக்கும் பொருந்தக் கூடிய கருத்து இல்லவே இல்லை. வயது, சூழல், மரபுக் கூறுகள் உடலில் நிலைபெற்றுள்ள பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டுதான் உணவின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. உண்ணும் முறையும் உணவு உடலில் ஏற்படுத்தும் விளைவுகளில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    வாழைப் பழம் தோலுடன் இருக்கும் பொழுது நீர்ச் சத்துக்கள் கூடுதலாகவும் நுண் சத்துக்கள் சிதையாமலும் இருக்கும். ஆனால் மேல்தோலை உரித்ததும் வாழையின் சிறப்புப் பலன்கள் உடனடியாகவே சிதையத் தொடங்கி விடுகிறது. அதனால் தான் அதனை உரிக்காமல் உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

    நீரிழிவு உள்ளவர்கள் வாழைப்பழம் உண்ணக் கூடாது என்பது பரவலான நம்பிக்கை. ஆனால் தோலுடன் உண்ணும்போது நீரிழிவு நோய்க்கு மருந்தாகவே எடுத்துக் கொள்ளலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு. ஆனால் அதனை எடுத்துக் கொள்ளும் முறையில் மிகுந்த கவனம் தேவை. மேலே சொன்னது போல தோலை நீக்காமல் குறுக்காக வெட்டி நேரடியாகச் சிற்றுணவாகவோ அல்லது சப்பாத்தி ரொட்டி போன்றவற்றுடன் இணைத்து ஒருவேளை முழு உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் ரத்தச் சர்க்கரையின் அளவு திடீரென்று குறையும் பிரச்சனை ஏற்படாது.

    ரத்த அழுத்தத்திற்கும், இதய நோய்ப் பிரச்சனைகளுக்கும் சிறந்த உணவாக இருக்கும். வாழைப்பழத்தைத் தோலுடன் தொடர்ந்து எடுத்து வந்தால் மேற்சொன்ன நோய்களுக்குச் சிறந்த மருந்தாக இருக்கும்.

    மலச் சிக்கலுக்கும் சரி, நீரிழிவுக்கும் சரி வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளும் முறைப்படி எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் உடல் நலப் பலன்கள் கிடைக்கும். அல்லாது வழக்கமான முறையில் எடுத்தால் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

    நாம் இங்கே பேசுவது அனைத்தும் வாழையை அதன் இயல்பு கெடாமல் விளைவிக்கப்பட்டதில் இருந்தும் கிடைக்கும் பலன்களே ஆகும். மரபு மாற்றம் செய்யப்பட்டு, அதிக உரம் போட்டு விளைவிக்கப்படும் வாழைப் பழத்தை அது எந்த வகையாக இருந்தாலும் வெறும் மையப் பகுதியை மட்டுமே எடுத்துக் கொள்வோமானால் அதன் நற்பலன்கள் நமக்குக் கிடைப்பதில்லை.

    பொதுவாகவே பழங்களை முழு உணவாகக் கருதுவதில்லை. சமைத்த உணவை இரப்பையில் நிரப்பினால் தான் உண்ட நிறைவு நமக்கு ஏற்படுகிறது. இது பழக்கமாகவும் மன அமைப்பாகவும் மாறி விட்டிருக்கிறது. எனவே சமைத்த உணவை வயிறு நிரம்ப உண்டு விட்டு மேல்த் தீனியாக மட்டுமே பழங்களைக் குறிப்பாக வாழைப் பழத்தை எடுத்துக் கொள்கிறோம். அப்படி எடுத்துக் கொள்வதால் தான் பல நேரங்களில் வாழைப் பழமும் எதிர்விளைவை உருவாக்குகிறது.

    நாம் உண்ணும் முறையை மாற்றி விட்டு பழங்களின் மீது பழி போட்டுக் கொண்டுள்ளோம். வாழை இன்றும் யார் வீட்டிலும் உரம் போடாமல் பெரிய பராமரிப்பு வேலைகள் வாங்காமல் விளையும் மரமாகத் தான் இருக்கிறது. எனவே வாழை என்றதும் உரம் போட்டு விளைய வைத்து மேற்பூச்சு இரசாயனத்தால் பழுத்தது போன்று நிறம் மாற்றப்பட்ட பழங்களை உண்ண வேண்டும் என்பதில்லை. முடிந்தளவு நாமே விளைவித்துப் பாதுகாப்பாக உண்ணலாம். இல்லையேல் புற நகர்ப் பகுதிகளில் எளிய மக்கள் பழுக்கும் நிலையில் உள்ள காய்களை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். அவற்றை வாங்கி வைத்து ஓரிரு நாட்களில் பழுக்க வைத்து உண்டால் உடலுக்கு ஒவ்வாத எதிர் விளைவுகள் ஏற்படாது.

    உரம் போடாத அரிசிக்கும், செக்கு எண்ணைக்கும் இன்று எப்படி புதிய சந்தை உருவாகி உள்ளதோ அதேபோல உரம் போடாமல் விளைவிக்கப்பட்ட வாழைப் பழத்திற்கும் நாம் புதிய சந்தையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு முன்னர் வாழைப் பழத்தின் நற்கூறுகளை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

    வாழைப் பழத்தை இரவில் வயிறார உண்ட பிறகு காலைக் கடன் தீர்ப்பதற்குரிய எளிய தந்திரமாகக் கையாளுதல் கூடாது. இன்னும் சொல்வதானால் வாயுத் தொல்லை உடையவர்கள், அமிலத் தேக்கம் உடையவர்கள் உணவுக் குழலிலும், தொண்டைப் பகுதியிலும் எரிச்சல் உணர்வு உடையவர்களுக்கு தன்னியல்பாகவே மலச் சிக்கல் ஏற்பட்டு விடும். அல்லது சரியாகச் செரிமானம் ஆகாமல் மலம் திப்பி திப்பியாக நுரைத்துச் செல்லும். இத்தகையவர்கள் உணவுக்குப் பிறகு மேலுணவாக வாழைப் பழத்தை எடுத்தால் மலச் சிக்கல் ஏற்படவே வழி வகுக்கும்.

    பொதுவாக எந்த வயதினரும் காலை உணவாக வாழைப் பழத்தைத் தோலுடன் மேலே சொன்னவாறு எடுத்துக் கொள்ளலாம். அல்லது தென் தமிழகத்திலும் கேரளாவிலும் எடுத்துக் கொள்வது போல புட்டு போன்றவற்றிற்குத் துணை உணவாக வாழைப் பழத்தை எடுத்து கொள்ளலாம். நாற்பது வயதிற்கு உட்பட்டவர்கள் ஓரளவு உடற்பயிற்சி உள்ளவர்கள் தேங்காய்ப் பாலுடன் நாட்டுச் சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்து மிக்ஸியில் அடித்து வாழைப்பழ மில்க் சேக்காகத் தயாரித்து அருந்தலாம். அதனைக் காலை உணவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையுடன் இரண்டு மூன்று பேரிச்சம் பழங்களையும் சேர்த்துக் கொண்டால் முற்றிலும் முழுமையான உணவாக இருக்கும்.

    அரிசி உண்டால் தான் நிறைவாக இருக்கும் என்று கருதுகிறவர்கள் சுமார் 100 கிராம் அவலை குறைவான அளவு நீர் சேர்த்து ஊறவிட்டு அதனோடு வாழைப் பழத் துண்டுகளையும், ஓரிருப் பேரீச்சம் பழங்களையும், தேங்காயப் பூத் துறுவலையும் சேர்த்துக் கலவையாக்கி உண்ணலாம். இதுவும் ஒருவேளை முழு உணவாக இருக்கும். குறிப்பாக வாயுத் தொல்லை உள்ளவர்கள், காலையில் உணவு உண்டதும் மயக்குவது போன்ற உணர்வைப் பெறுகிறவர்கள் வாழைப் பழம் அவல் கலவையை காலை உணவாக எடுத்துக் கொண்டால் நண்பகல் உணவு வரை எவ்வித சோர்வும் தலைகாட்டாது. சுறுசுறுப்பாக இயங்கலாம். இந்த உணர்வுடன் பகல் உணவு உண்ணும் போது அது முழுமையாகச் செரிமானம் ஆகும். வயிறும், சிறு, பெருங்குடல்கள் சுத்தமாவதால் வாயுத் தொல்லையும் விரைவில் நீங்கும்.

    வாழைப் பழத்தில் உள்ள மாவுச் சத்தும் எரிமச் சத்தும் சதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்யக்கூடியது. எனவே மெலிந்த உடல் வாகினர் அடிக்கடி வாழைப் பழத்தை ஒருவேளை உணவாகத் தொடர்ந்து எடுத்து வருவது நல்லது. காய்ச்சல் போன்ற தொடர் நோயில் விழுந்து மீண்டவர்களுக்கு இழந்த ஆற்றலை உடனடியாக மீட்க தேவை ஏற்படும். அத்தகையவர்கள் வாழைப் பழத்தை உணவின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

    பூவன் போன்ற புளிப்புத் தன்மையுள்ள வாழைப் பழத்தைப் பெரியவர்கள் தவிர்ப்பதே நல்லது. ஆனால் நல்ல பசியோடு எத்தகைய பழத்தையும் எடுப்பதால் எதிர் விளைவுகள் ஏற்படாது. குழந்தைகள் இரண்டு  வயதை நெருக்கும் பொழுது சளி இல்லாத நேரத்தில் வாழைப் பழம் கொடுப்பது சதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்யும். மலச் சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு வாழைப் பழத்தின் சதைப் பகுதியோடு தோலுக்கும் சதைக்கும் நடுவில் உள்ள நார் வரிகளையும் சேர்த்து சிறிதளவு நாட்டுச் சர்க்கரையும், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையும் போட்டுப் பிசைந்து உண்ணக் கொடுத்தால் மலச் சிக்கல் விரைவிலேயே நீங்கும்.

    இதனை இரவு நேரங்களிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மெலிந்த உடல் வாகுடைய குழந்தைகளுக்கு நாட்டுச் சர்க்கரையுடன் மாவுத் தன்மை குறைவாக உள்ள வாழைப் பழ வகையை அடிக்கடிக் கொடுத்து வந்தால் நல்ல சதைப்பற்று பெறுவார்கள்.

    சாப்பாட்டுடன் எடுக்கிறவர்கள் வாழைப்பழத்தை முதலில் நன்றாக அசை போட்டு மென்று உண்ட பிறகு சமைத்த உணவை எடுக்கலாம். முதலில் பழத்தை எடுப்பதால் நாவின் சுவை மொட்டுக்களில் படித்துள்ள படிவம் நீங்கப் பெற்று உணவின் பலவிதமான சுவையை முழுமையாக அறியப் பெறலாம். கெட்டித் தன்மையுடன் கூடிய நேந்திரம் பழம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தருவதானால் இட்டிலிக் கொப்பரையில் வைத்துஆவியில் வேகவிட்டுக் கொடுக்கலாம். ஆவியில் வேகுவதால் அதன் சத்துக்கள் பெரும்பகுதி சிதைக்கப்படாமலே கிடைக்கும்.


    Next Story
    ×