search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழைப்பூ
    X
    வாழைப்பூ

    இயற்கைத் தரும் இனிய வாழ்வு - பெண்களுக்கு உகந்த வாழைப்பூ

    கல்யாண வீட்டு விசேசத்தில் இருந்து புதுமனைப்புகு விழா வரை வாழை இடம்பெறாத சிறப்பு நிகழ்ச்சிகளே இல்லை.
    வாழையின் அனைத்துப் பாகங்களும் பயன்பாட்டிற்குரியன என்பதை தொடக்கத்திலேயேப் பார்த்தோம். நமது கலாச்சாரத்தில் இன்றளவும் வாழை அப்படியே பயன்பட்டு வருவது பெருமளவு மனநிறைவு தருவதாகும். கல்யாண வீட்டு விசேசத்தில் இருந்து புதுமனைப்புகு விழா வரை வாழை இடம்பெறாத சிறப்பு நிகழ்ச்சிகளே இல்லை. இறப்புச் சடங்குகளிலும் வாழைப்பழத்திற்கு இடம் உண்டு. இறுதி ஊர்வலத்திற்கு உரிய பாடை அலங்காரத்திலும், பூமாலைகளிலும் வாழைநார், வாழைப்பட்டை என்றவகையில் வாழையின் பயன்பாடு முக்கிய இடம் பிடிக்கிறது.

    வாழைப் பூப் பயன்பாடு இன்று அதிகரித்து வருகிறது. வாழைப்பூவானது நுண் சத்துக்களும், நார்ச்சத்துக்களும் மிகுதியாக உடையது. வாழைப்பூவின் துவர்ப்புச் சுவை ரத்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மண்ணீரலுக்கு பலம் சேர்க்கிறது. தற்காலத்தில் பூப்பெய்திய காலம் தொடங்கி உதிரப்போக்கு நிற்கும்  வரை பெண்களுக்கு மாதாந்திரத் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக பெண்கள் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளும், கருவுறாமையும் அதிகரித்து வருகிறது. வாழைப்பூ பெண்களுக்கானத் தனித்துவமான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைத் தரவல்லது. மாதாந்திர உதிரப்போக்கு சீராக இல்லையெனில் அதனை வரவைப்பதற்காக மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போக்கும், கோயில் விசேசங்களுக்கு, வீட்டு விசேசங்களுக்கு, தேர்வு, ஆடிட்டிங் போன்றவை நடக்கும் நேரங்களில் உதிரப் போக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று தடுப்பதற்காக மாத்திரை எடுத்துக் கொள்ளும் போக்கு பெண்களிடம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற உடலின் இயல்பான நடவடிக்கைகளில் குறுக்கிடுவதால் உதிரப் போக்கின் வழியாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலினுள் தேங்க நேரிடுகிறது. இந்தத் தேக்கம் கட்டி வடிவில் உருப்பெறத் தொடங்குகிறது. கட்டித் தேங்குவதற்குப் பொருத்தமான இடம் பெண்ணுடலில் கர்ப்பப் பையாக இருக்கிறது.
    பெண் கருவுறப் பொருத்தமான 21 வயதில் இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் அரிதாகவே சாத்தியப்படுகிறது. பெண் படித்து முடிக்கவே 21 வயதிற்கு மேலாகி விடுகிறது. அதற்குப் பின் வேலையில் அமர்ந்து திருமணத்திற்குரிய ஏற்பாடுகள் நடக்க மேலும் சில ஆண்டுகள். 25 இல் மணம் முடித்தாலும் வாழ்க்கையை அனுபவிப்பது, வீடு வாங்கி செட்டில் ஆவது, வேலையில் ப்ரமோசன் இப்படிப் பல காரணங்களை முன்னிட்டு குழந்தைப் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடுவது இன்றைய பெண்களிடம் சர்வ இயல்பான ஒன்றாகி விட்டது. பூப்பெய்திய அய்ந்தாறு ஆண்டுகளில் கர்ப்பப்பை குழந்தைப் பேற்றுக்குத் தயாராகி விடுகிறது.

    ஆனால் அந்தக் கருவறையைத் தன்னில் கொண்டுள்ள பெண், குழந்தையைச் சுமக்கத் தயாராவதில்லை. கட்டிய வீட்டில் உரியவர்கள் குடியேறவில்லை என்றால் பாம்பு முதல் எந்த வாய்ப்புள்ள நச்சு உயிரினங்களும் அதில் குடியேறச் சாத்தியமுண்டு தானே.

    அப்படித் தான் கருவுக்காகக் காத்திருக்கும் கருப்பையில் சிசு உருவாகும் காலம் தள்ளிப் போவதால் உடலில் மிகுந்து விடும் கழிவுகள் கட்டிகளாகக் கருப்பையில் திரளத் தொடங்கி விடுகிறது. இந்தக் கட்டிகள் உருவாகும் தொடக்க நிலையெனில் கருப்பையில் சிசு கருக் கொள்வதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது. ஆனால் அக்கட்டி கருவைச் சுமப்பதில் சிக்கல் என்று கருதி அதனை அகற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளே கர்ப்பப்பையின் உட்சுவரைப் பலவீனப்படுத்தி விடுகிறது. பிற்காலத்தில்  இதுவே கருவுறுதலில் பெரும் சிக்கலாகி விடுகிறது.

    ஆக மாதாந்திர உதிரப்போக்கு சீராக நடைபெறுவதற்கு ஏற்ற நிலையில் பெண்கள் தம் உடலைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் உதிரப் போக்கை சீராக வைத்திருப்பதற்கும், கருவறையின் உட்புற, வெளிப்புறச் சுவர்வளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் வாழைப்பூ பெரிதும் துணைபுரிகிறது.

    வாழைப்பூவின் பத்து இதழ்களை எடுத்து சுமார் 200 மில்லி நீரில் இரவில் ஊறப் போட்டு விட வேண்டும். காலைவரை பூ இதழ்கள் நீரில் இருப்பதால் பூவின் துவர்ப்பு நீரில் இறங்கி இருக்கும். இப்பொழுது பூவை வெளியில் எடுத்துப் போட்டு விட்டு  நீரைச் சிறிது சிறிதாக அதாவது ஒரு மிடறுக்கும், இன்னொரு மிடறுக்கும் நீண்ட இடைவெளி இருக்குமாறு நிதானமாகக் குடிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறான எந்தப் புதிய சுவை கொண்டதையும் நிதானமாக எடுப்பதே உடலுக்கு ஏற்றது. அப்படி ஏற்கும் போதுதான் உடலால் அதனை ஈர்த்துக் கொள்ளவும் நற்பலனைக் கொடுக்கவும் முடியும்.

    மருந்தானாலும், உணவானாலும் அதனை அனைவருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. ”ஒருவருக்கு அமிர்தமாக இருக்கும் ஒன்று  மற்றொருவருக்கு நஞ்சாகவும் இருக்கக் கூடும்” என்பது புகழ்பெற்ற ஆங்கிலச் சொற்றொடர். நாம் மேலே சொன்ன வாழைப்பூ நீரின் துவர்ச்சுவை, சிலரது உடலுக்கு பொருத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்கள் மேற்சொன்னபடி நிதானமாகப் பருகினால் ஆபத்து நேராது. ஒன்றிரண்டு மிடறிலேயே வெளித்தள்ளி வாந்தி எடுக்க வைத்து விடும். அப்படி வாந்தி வருமானால் அவர்கள் மீண்டும் வல்லடியாக எடுக்கக் கூடாது.

    அதேபோல வாழைப்பூவின் துவர்ப்புச் சுவையை குளிர்ந்த தன்மையில் எடுப்பதில் தயக்கம் இருந்தால் அதே பத்து இதழ்களை சுமார் 250 மில்லி நீரில் போட்டு இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், இரண்டு சிட்டிகை உப்புப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு சூப்பாக வடித்து முன் சொன்னது போலவே தேக்கரண்டியில் எடுத்துக் குடிக்க வேண்டும்.

    நாம் உணவாக எடுக்கும் மருத்துவப் பண்புள்ள பொருட்களை அவற்றின் மூலச் சுவை குறையாமல் எடுக்க வேண்டும். அதையும் முடிந்தளவு நீர்க்க எடுக்கிற பொழுது உடலால் அதனை எளிதில் ஈர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு எடுப்பதால் மருத்துவப் பலன் முழுமையாகக் கிடைக்கும்.

    மருந்துக்காக எடுக்கும் உணவுப் பொருளை, உடலில் உபாதை இல்லாத பொழுது மருந்து உதவி தேவைப்படாத பொழுது மிதமான சுவை கூட்டி நேரடியாக உணவாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும் பொழுது ஒரே நேரத்தில் நல்லது என்று அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் குறைவாக எடுப்பதே நல்ல பலனைக் கொடுக்கும். உணவே மருந்து என்ற கருத்தாக்கம் பரவலடைந்துள்ள தற்காலத்தில் வாழைப்பூப் பயன்பாடு அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்கு உரியதே. ஆனால் அதன் மூலச் சுவை கெடாத வண்ணம் எடுக்கும் போதுதான் அதன் நற்பலன்களை உடல் பெற முடியும்.

    எடுத்துக்காட்டாக வாழைப்பூ வடை அங்கங்கே வணிக ரீதியாகப் பெருகி வருகிறது. கடலைப்பருப்பு செரிக்கக் கனமான உணவுப் பொருள். அதையும் கெட்டியாகத் தட்டி எண்ணையில் போட்டு பொறிக்கிற பொழுது மேலும் இறுகல் தன்மையை அடைகிறது. நிறைய சத்தான வாழைப்பூவை இறுகலான வடிவில் எடுக்கிற பொழுது செரிக்கக் கடினமாவதுடன் அதன் தனித்துவமான துவர்ப்புச் சுவையும் மறைந்து போகிறது. எனவே வாழைப்பூவை அதன் துவர்ப்புச் சுவைக் கெடாத வண்ணம் எடுப்பதே சிறந்தது.

    வாழைப்பூ கூட்டு, பொரியல், குழம்பு வடிவத்தில் எடுப்பது நம்முடைய மரபில் காலங்காலமாக இருந்து வருவது தான். ஆனால் சமையலுக்குப் போதிய நேரம் ஒதுக்க பொறுமையற்ற இன்றைய தலைமுறையினர் அவற்றைச் செய்வதே இல்லை. வெறும் வெங்காயம், தக்காளி, அரைத்தத் தேங்காய் விழுது போன்றவற்றைச் சேர்த்து அதன் துவர்ப்புச் சுவைக் குன்றாமல் குழம்பு வைத்தால் அது வழக்கத்திற்கு மாறான சுவையில் இருக்கும் என்பது உண்மையே. ஆனால் அதுதான் நமது உடலுக்கு நன்மை தரும். நாம் எப்போதும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதிலும் குறிப்பாக உணவு விசயத்ததில் வழக்கத்திற்கு மாறான எந்த சுவையையும் தென்னிந்திய நாக்கு ஒப்புக் கொள்வதே இல்லை.

    சமைக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விகிதாச்சாரத்தில் சேர்மானத்தைக் கூட்டி சமைப்பது இயல்பு தான். ஆனால் முன்னர் உண்டு சுவைத்த உணவின் சுவை மறுமுறை உண்ணும் போது கிடைக்கவில்லை எனில் அதனை நம்முடைய நா ஏற்றுக் கொள்வதில்லை. நிராகரித்து விடுகிறோம். சுவை என்பது நாக்குடன் முடிந்து போகிற விசயமல்ல. மாறுபட்ட சுவைகள் தாம் மாறுபட்ட நுணுக்கமான சுவை வேறுபாடுகள் தாம் நம்முடைய உடலின் வெவ்வேறு பாகங்களுக்கு வேண்டிய பலன்களைக் கொடுக்க முடியும். குறிப்பாக நம்முடைய உடலின் தலைமைச் செயலகம் என்று அழைக்கப்படும் மூளையின் நியூரான்களுக்கு வெவ்வேறு விதமான சுவை தேவைப்படுகிறது என்பதை அழுத்தமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

    உணவில் உள்ள கார்போ ஹைடிரேட் என்ற எரிமச் சத்து உடலின் இயக்கத்திற்கு உரிய சத்தினையும், புரொட்டீன் எனும் புரதச் சத்து உடலின் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டிற்கு உரிய சத்தினையும், தாதுச்சத்துக்கள் எலும்புகளுக்கு வலிமையையும் வழங்குகிறது. கொழுப்பு சேமிக்கப்பட்ட சத்தாக இருந்து நாம் உண்கிற போதும் உண்ணாத போதும் உடலைச் சீராக இயக்கச் செய்வதற்கு உரியதாகவும் இருக்கிறது. இவற்றில் அவ்வப்போது சின்னச் சின்ன மாறுபாடுகள் ஏற்படுமானால் உடலியக்கம் தன்னைக் கிடைக்கிற சத்துக்களின் வழியாகச் சமன் செய்து கொள்ளும். வைட்டமின் எனும் உயிர்ச் சத்துதான் மூளைக்கும், அட்ரீனலுக்கும் ஆற்றலை வழங்குகிறது. மூளைக்கும் அட்ரீனலுக்கும் போதிய சத்து வழங்கப்பட்டால் தான் நம்முடைய உடலின் பரபரப்பான இயக்கத்திற்கு உரிய ஆற்றலை ஈடுசெய்ய முடியும்.

    இனிப்புச் சுவைப் பிடித்தவர்கள் மீண்டும் மீண்டும் இனிப்புச் சுவையையே விரும்புவதும், புளிப்பு பிடித்தவர்கள் புளிப்பையே நாடுவதும், காரச் சுவையைப் பிடித்தவர்கள் மீண்டும் மீண்டும் காரத்திற்கே அடிமையாக இருப்பதும் உடலின் ஒட்டுமொத்தமான இயக்கத்திற்கு நற்பலனைத் தராது. எல்லா விதமான சுவையையும் ஏற்கும் பக்குவத்துடனும், அவ்வப்போது சுவையில் மாறுபாட்டினை உருவாக்கிக் கொள்வதுமே திறனை மேம்படுத்திக் கொள்ள துணை செய்யும். ஒரே விதமான சுவைக்கு அடிமையாக இருப்பதற்கும், மதுவிற்கு அடிமையாக இருப்பதற்கும் உடலியல் அளவில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை.

    அந்தவகையில் வாழைப்பூவைச் சமைக்கிற பொழுது அதன் தனித்துவமான துவர்ப்புச் சுவை முன்னிற்க வேண்டும். வாழைப்பூவில் செய்த உணவு முற்ற முழுக்கத் துவர்ப்பாக இருக்க வேண்டும் என்பதல்ல நாம் சொல்வது. துவர்ப்பு முற்றாக மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது. அந்தப் பண்டத்தின் முதன்மைச் சுவையாக முன்னிற்க வேண்டும் என்பதே நாம் வலியுறுத்துவது.

    வாழைப்பூ கூட்டு சமைக்கிற பொழுது பாசிப் பருப்பு அல்லது தேங்காய் விழுது சேர்த்து துவர்ப்பின் ஆதிக்கத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தனித்துவமான சுவையுள்ள உணவுப் பண்டத்தை எடுக்கிற பொழுது பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அந்த ஒன்றோடு நிறுத்திக் கொள்ளுவது நல்லது. வாழைப்பூ கூட்டு செய்கிற பொழுது சோற்றுடன் வாழைப்பூக் கூட்டு மட்டுமே போட்டு பிசைந்து உண்பது துணையாக பொட்டுக்கடலைச் சட்னி அல்லது அப்பளம் போன்றவற்றை எடுப்பது செரிமானத்திற்கு உகந்ததாக இருக்கும். வாழைப்பூவின் நற்பலனை உடல் முழுமையாக ஏற்க ஏதுவாக இருக்கும்.

    வாழைப்பூ இதழின் நடுவில் உள்ள நாரினை அகற்றுவது தான் நமக்கு சலிப்பூட்டும் வேலையாக இருக்கிறது. அந்த நடு நரம்பு மென்று உண்ணக் கடினமாக இருக்கும் என்பதற்கு மேலாகக் கெடுதல் ஏதும் இல்லை. எனவே கூட்டுப் பொரியலுக்கு வாழைப்பூவை அரிகையில் பொடியாக அரிந்து போட்டால் உண்ணும் போது வாயில் கிடைக்கும் நரம்பை நீக்கினால் போதுமாக இருக்கும். அல்லது உள்ளே விழுங்கினாலும் அது மலம் வழியாக வெளியேறி விடும்.

    வாழைப்பூவில் துவர்ப்புச் சுவையுடன் நார்ச் சத்தும் மிகுந்திருப்பதால் மலச்சிக்கல் உடையவர்கள் உண்பதற்கும் பொருத்தமான உணவாகும். நுண் சத்துக்கள் மிகுந்திருப்பதால் செரிக்கச் சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே வாழைப்பூப் பண்டத்தை நல்ல பசியோடு உண்பதே நல்லது.
    Next Story
    ×