search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு ஆதரவு: சசிகலாவிடம் எடப்பாடி அனுமதி பெற்றாரா?- தங்கதமிழ்செல்வன்- வெற்றிவேல் கேள்வி
    X

    பா.ஜனதாவுக்கு ஆதரவு: சசிகலாவிடம் எடப்பாடி அனுமதி பெற்றாரா?- தங்கதமிழ்செல்வன்- வெற்றிவேல் கேள்வி

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்றாரா? என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அ.தி. மு.க. (அம்மா) அணி ஆதரிக்கும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்து உள்ளார்.

    இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு யாருக்கு என்பதை கட்சியின் பொதுச்செயலாளர்தான் (சசிகலா)அறிவிக்க வேண்டும். அல்லது கட்சியின் துணை பொதுச்செயலாளர் (டி.டி.வி.தினகரன்) அறிவிக்க முடியும்.

    ஆனால் நேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.

    முக்கியமான முடிவுகளை அறிவிக்கும் அவர், இதுபற்றி கட்சியின் பொதுச்செயலாளரிடம் அனுமதி பெற்று அறிவித்தாரா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனவே இதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பெங்களூர் சென்று சின்னம்மாவை (சசிகலா) பார்த்து விட்டு நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து கொண்டுள்ளார்.


    அவரிடம் சின்னம்மா ஏதும் தகவல் சொன்னார்களா? என்று தெரியவில்லை. எனவே தம்பித்துரையும் இதை தெளிவுபடுத்த வேண்டும். சின்னம்மாவிடம் இவர்கள் அனுமதி பெற்றிருந்தால் அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    எங்களைப் பொறுத்த வரை கட்சி எல்லாமே சின்னம்மா தான். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சின்னம்மா அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அவரது ஆதரவு கடிதம் வெளியிடப்பட வேண்டும். இப்போதைக்கு அவரால் முடியவில்லை என்றால் துணை பொதுச்செயலாளரிடம் இருந்து அதற்கான அறிவிப்பு வரவேண்டும்.

    ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை அறிவிக்கிறார் என்றால் அவர் சின்னம்மாவிடம் இதற்கான அனுமதியை பெற்றாரா? என்பதை விளக்க வேண்டும். அனுமதி பெற்றிருந்தால் ஏற்றுக் கொள்வோம்.

    நான் இன்னும் சில நாட்களில் பெங்களூர் சென்று சின்னம்மாவை சந்திக்க உள்ளேன். துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தின கரனையும் சந்தித்து இது குறித்து ஆலோசனைகளை கேட்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×