search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம மக்கள் மீது மோடி அரசு தொடுத்த போர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    கிராம மக்கள் மீது மோடி அரசு தொடுத்த போர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ரூ.500, ரூ. 1000 ரூபாய் நோட்டு தடை தொடர்பாக கிராம மக்கள் மீது மோடி அரசு தொடுத்த போர் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னை:

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மத்திய அரசு கொண்டு வந்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இந்தியா முழுவதுமே எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றன.

    அந்த வகையில் இன்று தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

    இது எதிர்க்கட்சிகள் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. ஒட்டு மொத்த இந்திய மக்களும் நடத்தும் போராட்டம் ஆகும்.

    கருப்பு பண ஒழிப்பை தி.மு.க. எதிர்க்கவில்லை. அதனை ஆதரிப்பதாகவே தலைவர் கலைஞரும் கூறி இருக்கிறார். இது தொடர்பாக ஏழை மக்கள், விவசாய பெருமக்கள் பாதிக்கப்படாமல் முன்னேற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்க வேண்டும் என்றும் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது உத்தரவின் பேரிலேயே எழுச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 8-ந் தேதி கருப்பு பண ஒழிப்பு தொடர்பாக 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா முழுக்க சுனாமி ஏற்பட்ட நாளாகவே அது பார்க்கப்படுகிறது.

    ரூபாய் நோட்டுக்கு தடை அறிவிப்பை வெளியிட்டவுடன் பிரதமர் மோடியும், மத்திய மந்திரிகளும் 3 நாட்களுக்குள் நிலைமை சீராகி விடும் என்றார்கள். பின்னர் 1 வாரத்தில் சரியாகி விடும் என்றார்கள்.

    சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி 50 நாட்கள் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் மக்கள் கடும் துயரங்களையே சந்தித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகளும், ஏழை மக்களும் வங்கி வாசல்களில் வரிசையில் நிற்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.

    தேர்தல் நேரத்தில் மக்கள் என் பக்கம் என்று மோடி கூறினார். இன்று மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்களோ இல்லையோ வங்கிகளின் பக்கம் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 13 லட்சம் தமிழக அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கான சம்பள பணத்தை வங்கியில் போட்டாலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2500 ரூபாயே எடுக்க முடியும் என்கிற நிலை உள்ளது. வீட்டு வாடகைக்கு காசோலை கொடுக்க முடியுமா? காய்கறி வாங்க காசோலை கொடுக்க முடியுமா?

    தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறினார். அப்படி மீட்கப்படும் பணத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றார்கள். அது போன்று செய்ய முடிந்ததா? 15 ஆயிரம் இல்லை. 15 ரூபாயாவது அவர்களால் வங்கியில் போட முடிந்ததா?

    ரூபாய் நோட்டு அறிவிப்பால் கிராமப்புற மக்களே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 85 கோடி மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். அவர்களுக்கு காசோலை என்றால் என்னவென்று தெரியாது. டெபிட் கார்டு என்றால் என்னவென்று தெரியாது. வளர்ச்சி என்கிற கோ‌ஷத்தை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் முடக்கி போட்டிருக்கிறார்கள்.

    கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டு மோடி அரசு கிராமப்புற மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. இனிமேலாவது மத்திய அரசு இந்த பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் நிலைமை சீரடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த போராட்டம் இத்தோடு நின்றுவிடாது. தொடர்ந்து போராடுவோம்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், மா.சுப்பரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன், ரங்கநாதன், தாயகம் கவி, கே.பி.பி.சாமி மற்றும் டாக்டர் கனிமொழி, சிம்லாமுத்துச்சோழன், காசிமுத்துமாணிக்கம், ஏ.டி.மணி, வர்த்தக பாண்டிச் செல்வம், மேட்டுக்குப்பம் கமலகண்ணன், முத்துராமன், தணிகாசலம், பிரசன்னா, டி.கே.எம்.காலனி சித்திக், கென்னடி, ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மதன் மோகன், பகுதி துணைச் செயலாளர்கள் சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர்கள் சிற்றரசு, ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, அம்பத்தூர் ஆஸ்டின், பாண்டிபஜார் பாபா சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனும் கலந்து கொண்டார். அந்த கட்சியின் நிர்வாகிகள் கல்பாக்கம் மோகன், பாலாஜி, சிவகுமார், நாகராஜ், சந்தானம் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம், சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் எம்.எல்.ஏக்கள், எஸ்.ஆர்.ராஜா,இ. கருணா நிதி, வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய செயலாளர்கள் ரவி, படப்பை மனோகரன், பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவர் சேகர், தாம்பரம் முன்னாள் துணைத்தலைவர் காமராஜ், பம்பல் முன்னாள் தலைவர் வே. கருணாநிதி, புகழேந்தி, செல்வக்குமார், இந்திரன், ஜோதிக்குமார் வைப்பூர் ஊராட்சி செயலாளர் அரிமுத்து உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×