search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா இன்று முதல் பிரசாரம்
    X

    தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா இன்று முதல் பிரசாரம்

    அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    அரவக்குறிச்சி:

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி 2-ந்தேதி முடிந்தது. 3-ந்தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நேற்று (5-ந்தேதி) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு. தி.க. மற்றும் சுயேட்சை கள் உள்பட 39 வேட்பாளர் கள் களத்தில் உள்ளனர்.

    தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. தற்போது பெரிய தலைவர்கள் தவிர்த்து தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி முழுவதும் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    விரைவில் கட்சி தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் 3 தொகுதிகளிலும் ஆதரவு திரட்ட உள்ளனர்.

    இதற்கிடையே தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் தே.மு. தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட பிரசாரத்தை அரவக்குறிச்சி தொகுதியில் இன்று மாலை தொடங்குகிறார்.

    அரவக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து இன்று அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஈச்சநத்தம் கிராமத்தில் தனது பிரசாரம் செய்யும் அவர் தொடர்ந்து ஆண்டிப்பட்டிகோட்டை, அண்ணாநகர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சீத்தப்பட்டி காலனி ஆகிய கிராமங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். 9 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    நாளை வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் இரண்டு நாள் பிரசாரத்தை முடித்துவிட்டு 8 மற்றும் 9-ந்தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 10, 11-ந் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளும் பிரேமலதா விஜயகாந்த் அதன்பிறகு தஞ்சை தொகுதியில் ஆதரவு திரட்டுகிறார்.

    வருகிற 17-ந்தேதி வரை அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திட்ட உள்ளார். பிரேமலதா வருகையையொட்டி 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×