search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தொகுதியில் தேர்தல்: அரசியல் கட்சியினர் தீவிர ஓட்டு வேட்டை
    X

    3 தொகுதியில் தேர்தல்: அரசியல் கட்சியினர் தீவிர ஓட்டு வேட்டை

    அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
    கரூர்:

    தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

    அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் தே.மு.தி.க, பா.ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 59 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் தொகுதியில் 36 வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில், 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் 44 பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    தள்ளுபடி நடவடிக்கைக்கு பின், அரவக்குறிச்சி தொகுதியில் 46 பேர், திருப்பரங்குன்றம் தொகுதியில் 30 பேர், தஞ்சாவூர் தொகுதியில் 15 பேர் என மொத்தம் 91 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகே வேட்பாளர்கள் எண்ணிக்கை இறுதி நிலவரம் தெரியவரும்.

    3 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் 5 முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. இந்த 5 கட்சிகளில் தி.மு.க. மட்டுமே பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அவர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் அஞ்சுகம் ஆவார். கட்சி சார்பில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    19-ந்தேதி தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் களை கட்டியதையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கட்சிகளின் நிர்வாகிகள் முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பஞ்சாயத்து வாரியாக தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள 11 அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    தி.மு.க. சார்பில் பிரசாரம் செய்ய முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் தேர் தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 5 மத்திய அமைச்சர்கள், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் அரவக்குறிச்சி தேர் தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாளை இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, நாளை மறுநாள் 6-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும்.

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி இன்று காலை 7 மணிக்கு பவித்திரம் பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் விஸ்வநாதபுரம் ஊராட்சி, காருடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் தென்னிலை தெற்கு, கோடாந்தூர், ஊராட்சிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிசாமி இன்று மாலையில் நஞ்சை புகளூர், தவிட்டுப்பாளையம், ஆலமரத்துமேடு, கோப்புபாளையம், வெள்ளக்கல்மேடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    பா.ஜ.க. வேட்பாளர் பிரபு இன்று முதல் தனது பிரசாரத்தை தொடங்கினார். காலை 7 மணிக்கு சாந்த பாடி கோவிலூரில் இருந்து தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரம் செய்கிறார்.

    பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அரவிந்த் குருசாமி தோட்டக்குறிச்சி பகுதியில் மாலை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். தே.மு.தி.க. வேட்பாளர் அரவை முத்து நாளை முதல் பிரசாரம் தொடங்குகிறார்.

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் இன்று காலை வில்லாபுரம் பகுதியில் பிரசாரம் தொடங்கினார். தொடர்ந்து அவர் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சென்றனர்.

    தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் காலை முதலே கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். பா.ஜ.க. வேட்பாளர் சீனிவாசன், பா.ம.க. வேட்பாளர் செல்வம், தே.மு.தி.க. வேட்பாளர் தன பாண்டியன் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    தஞ்சை தொகுதியிலும் பிரசாரம் களை கட்டியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி மாரியம்மன் கோவில் பகுதியில் காலை பிரசாரம் தொடங்கினார். தொடர்ந்து அவர் கோட்டை, 7-வது வார்டு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி 40-வது வார்டு கூட்டுறவு காலனி, பாலாஜி நகர், நடராஜபுரம், திரிபுரசுந்தரி நகர் உள்ளிட்ட இடங்களில் ஓட்டு வேட்டையாடினார்.

    பா.ஜ.க. வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம் இன்று சிவகங்கை பூங்கா பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். இதேபோல் பா.ம.க. வேட்பாளர் குஞ்சிதபாதம், தே.மு.தி.க. வேட்பாளர் அப்துல்லா சேட் ஆகியோரும் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×