search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது: வீரமணி பேட்டி
    X

    காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது: வீரமணி பேட்டி

    காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் கர்நாடகா ஆரம்பத்தில் இருந்தே தவறான அணுகுமுறையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட மறுத்த கர்நாடகாவில், விவசாய நிலங்கள் 3 மடங்கு அதிகரித்து உள்ளது. புதிதாக அணைகளையும் கட்டி உள்ளனர். இதனை பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    1956-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 262-ல், இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதி நீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்துக்கு செல்லாமல் அதனை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு அரசிதழில் வெளியாகி உள்ளது. காவிரி நடுவர் மன்றமே அமைக்க கூடாது என்று கர்நாடகா ஒத்துழைக்க மறுத்தது. கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் சேர்ந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் எதை எடுத்தாலும் அரசியல் செய்கிறார்கள். பா.ஜனதா எப்போதும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருந்தது இல்லை. ஒரு சார்பாக கர்நாடகாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

    2002-ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி மத்திய அரசிதழில் ஒரு முடிவு வெளியிடப்பட்டு விட்டால் அது உச்சநீதிமன்றத்தின் ஆணையாக மாறி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வாதிட்டு இருப்பது சட்டவிரோதம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு சட்டப்படி செயல்படுத்தியே ஆக வேண்டும். அதனை அவர்கள் மறுக்க முடியாது. மத்திய அரசின் வாதம் தவறானது.

    மத்திய அரசின் இந்த முடிவு சட்டத்தின்படி எடுக்கப்பட்டது அல்ல. அரசியல் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சியை பிடிப்பது கடினம். அதே நேரத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். தேர்தல், வாக்குவங்கி, அரசியல் நோக்கத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள். மத்திய அரசால் தமிழ்நாடு பாலைவனமாக மாறி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள இரு கட்சிகளின் இடையே ஒற்றுமை இல்லாததும் காரணம் ஆகும்.

    தமிழக முதல்-அமைச்சர் விரைவில் குணமாக வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர்கள் இணைந்து தினம் தோறும் முதல்-அமைச்சரின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிப்பார்கள். அதே போன்ற நிலை தற்போது பின்பற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×