search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்: நடிகை குஷ்பு புறக்கணிப்பு
    X

    உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்: நடிகை குஷ்பு புறக்கணிப்பு

    தமிழக காங்கிரசின் நட்சத்திர பேச்சாளரான நடிகை குஷ்பு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17, 19-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளனர்.

    வேட்பு மனுக்கள் நாளை (செவ்வாய்கிழமை) ஆய்வு செய்யப்படும். தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 6-ந்தேதி மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இதையடுத்து 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 9 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெறும். அடுத்த வாரம் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும். அ.தி.மு.க., தி.மு.க. கட்சி வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்ட் வேட்பாளர்களும் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். ஆனால் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் மட்டும் பிரசாரத்தை தொடங்குவதில் இழுபறி நிலவுகிறது. மிக, மிக குறைந்த இடங்களிலேயே போட்டியிடுவதால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தயங்குகிறார்கள்.

    மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 90 சதவீதம் இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாததால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்ந்து போய் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ளும் சுறுசுறுப்பு அவர்களிடம் சுத்தமாக இல்லை. இந்த நிலையில் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளரான குஷ்பு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளரான நடிகை குஷ்பு, கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். ஆனால் இந்த தடவை அவர் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார். ஏற்கனவே தி.மு.க.விடம் இருந்து கூடுதல் வார்டுகளை பெற முடியாத காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இது தொடர்பாக குஷ்பு கூறி இருப்பதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடும் முன்பே, கடந்த மாதம் 9-ந்தேதி நான் சிங்கப்பூருக்கு வந்து விட்டேன். தற்போது நான் எனது பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். வரும் 16 அல்லது 17-ந்தேதிதான் நான் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளேன்.

    உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை திட்டமிட்டு நான் புறக்கணித்து விட்டேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. எனது வெளிநாட்டு பயணம் பற்றி ஒரு மாதத்துக்கு முன்பே நான் தமிழக காங்கிரசுக்கும், அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்துக்கும் முறைப்படி தகவல் தெரிவித்து விட்டேன். காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்புதலும் பெற்றுள்ளேன்.

    இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
    Next Story
    ×