என் மலர்


ரன் பேபி ரன்
அடைக்கலம் தேடி வந்த பெண், மர்மமாக இறந்ததால், அந்த கொலையின் பின்னணியை தேடும் சாமானிய மனிதனின் கதை.
ரன் பேபி ரன்
நாயகன் ஆர்.ஜே.பாலாஜி, வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷை மர்ம நபர்கள் துறத்துவதால், ஆர்.ஜே.பாலாஜியின் காரில் அவருக்கு தெரியாமல் பின் புறம் ஏறிச் செல்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் வீடு வரை செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரிடம் தான் ஆபத்தில் இருப்பதாக கூறி அடைக்கலம் கேட்கிறார்.

முதலில் மறுக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தன் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் இடம் கொடுக்கிறார். காலையில் எழுந்து பார்க்கும் பொழுது, ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். போலீஸ் நண்பன் விவேக் பிரசன்னாவின் அறிவுரைபடி, ஐஸ்வர்யா ராஜேஷ் சடலத்தை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் சடலத்தை செஞ்சிக்கு டிரிப் அடிக்கும் கபாலி விஸ்வாந்த் காரில் வைத்து விட்டு செல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. வீட்டிற்கு சென்ற பிறகு காரில் சடலத்தை பார்க்கும் கபாலி விஸ்வாந்த் அதிர்ச்சியடைகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கபாலி விஸ்வாந்த், அருகில் இருக்கும் சுடுகாட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் சடலத்தை எரித்து விடுகிறார்.

இந்த விஷயம் போலீசுக்கு தெரியவர, கபாலி விஸ்வாந்த் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்கிறார். இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டுகிறார்.

இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்தது யார்? கபாலி விஸ்வாந்த் தற்கொலை செய்ய காரணம் என்ன? ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு திருமணம் செய்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, இந்த படத்தில் அமைதி, அப்பாவி, பதட்டம் கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், அது ஆர்.ஜே.பாலாஜிக்கு அதிகம் பொருந்தவில்லை. சில இடங்களில் செயற்கை தனமாக இருந்தது.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கபாலி விஸ்வாந்த்தின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார். சடலத்தை கண்டவுடன் பதட்டம் அடைந்து, சாமானிய மனிதனின் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார். விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை போகபோக வேகம் குறைந்து விடுகிறது. லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். யார் அந்த மர்ம நபர் என்று காத்திருக்கும் நிலையில், வில்லன் இவர்தான் என்று தெரிந்தவுடன், இவர்தானா என்று எண்ணம் தோன்றுகிறது. வில்லன் கதாபாத்திரம் வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனம். அதுபோல் மெடிக்கல் மாணவர்கள் கொலை, தற்கொலை, என்று நாம் கடந்து வந்த செய்தியை கதையாக வைத்து சம்மந்தம் இல்லாமல் கிரைம் திரில்லர் திரைக்கதை அமைத்தது போல் திரைப்படம் இருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பின்னணி படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. சில இடங்களில் தேவையில்லாமல் அதிக சத்தத்தையும் கொடுத்து இருக்கிறது. யுவாவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ரன் பேபி ரன்’ ஓட்டம் குறைவு.