search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    40 வயதில் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளும்... அவசியமான பரிசோதனைகளும்...
    X

    40 வயதில் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளும்... அவசியமான பரிசோதனைகளும்...

    • 40 வயதை நெருங்க தொடங்கியதும், பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
    • கால்சியம் குறைபாடுகளால் எலும்புகளின் வலிமை குறைந்து உடல் பலவீனமாகிவிடும்.

    40 வயதை நெருங்கும் பெண்கள் ஒரு சில உடல் நல பரிசோதனைகளை அவசியம் செய்து கொள்ள வேண்டும். அவை ஆபத்தை விளைவிக்கும் நோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு உதவும். நோய் பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் துணை புரியும்.

    'பேப் ஸ்மியர்' பரிசோதனை:

    கர்ப்பப்பை வாய் பகுதியில் வைரஸ் தொற்று காரணமாக புற்றுநோய் ஏற்படக்கூடும். அத்தகைய கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய உதவும் பரிசோதனை இது. யோனி, கருப்பை, கருப்பை வாய், கரு முட்டையை கருப்பையில் கொண்டு செல்லும் பலோபியன் குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உறுப்புகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அப்போது புற்றுநோய் உண்டாவதற்கு காரணமான செல்களின் தன்மையை அடையாளம் காண முடியும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 21 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'பேப் ஸ்மியர்' பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. அதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து விட முடியும்.

    எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை:

    40 வயதை நெருங்க தொடங்கியதும், பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும். மாதவிடாய் காலங்களில் பாதிப்பு அதிகரிக்கும். கால்சியம் குறைபாடுகளால் எலும்புகளின் வலிமை குறைந்து உடல் பலவீனமாகிவிடும். ஆதலால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.

    லிப்பிட் பரிசோதனை: உடலில் இருக்கும் நல்ல கொழுப்புகளை மற்றும் கெட்ட கொழுப்புகளை கண்டறியும் பரிசோதனை இது. உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது இதயம், மூளை போன்ற முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

    தைராய்டு பரிசோதனை:

    கழுத்தின் முன் பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பியான தைராய்டு சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்யப்பட்டு அதன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு, உடல் சோர்வு, சருமம் மற்றும் முடி உலர்வடைதல், முடி உதிர்தல், உடல் எடை அதிகரித்தல் போன்றவை தைராய்டு பிரச்சினைக்கான அறிகுறிகளாகும்.

    நீரிழிவு சோதனை:

    ரத்தத்தில் சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள உதவும் இந்த பரிசோதனையை 40 வயதை நெருங்கும் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது. அதிலும் அதிக பசி, தாகம், உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோய் வயது வித்தியாசமின்றி பலரையும் பாதித்து வருவதால் நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ளும் விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

    Next Story
    ×