search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தர்ப்பூசணி சாம்பார்
    X
    தர்ப்பூசணி சாம்பார்

    தர்ப்பூசணியில் ஜூஸ் இல்ல சூப்பரான சாம்பாரும் செய்யலாம்

    தர்ப்பூசணியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பது நிறையபேருக்கு தெரியாது. அதன் மூலம் சாம்பார் தயாரித்து புதுமையான சுவையை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.
    கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அனைவரும் தர்ப்பூசணிபழத்தை விரும்பி உண்பதுண்டு. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய இந்தப்பழம் உடலின் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பழத்தின் உட்பகுதியில் உள்ள சிவப்பான பகுதியை சாப்பிட்டு விட்டு மேற்புற பசுமையான தோல் பகுதியை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் பல்வேறு சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பது நிறையபேருக்கு தெரியாது. அதன் மூலம் சாம்பார் தயாரித்து புதுமையான சுவையை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

    நாவில் நீர் ஊற வைக்கும் தர்ப்பூசணி சாம்பாரை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்
    மாங்காய் துண்டுகள் - 6
    தர்ப்பூசணியின் தோல் பகுதி - 1 பழத்தின் துண்டுகள்
    வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
    தக்காளி -  பொடியாக நறுக்கியது
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    எலுமிச்சை சாறு - அரை மூடி
    எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    துவரம் பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும்.

    தர்ப்பூசணியின் தோல் பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்று வதக்கி விட்டு மாங்காய், தர்ப்பூசணி துண்டுகள், தக்காளியை போட்டு வதக்கி மூடி வைக்க வேண்டும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். அதில் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப சிறிது நீர் விட வேண்டும்.

    அனைத்தும் ஒன்றாக கலந்து சாம்பார் பதம் கிடைக்கும் நிலையில் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக துருவிய தேங்காய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை தூவி இறக்கி வைத்தால் சூடான சாதத்துக்கு சுவையான சாம்பார் ரெடி.
    Next Story
    ×