search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கம்பு
    X
    கம்பு

    கம்பு... எப்படி சாப்பிட வேண்டும்... என்னென்ன பலன்கள்?

    அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
    அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. கன்னடத்தில் `பஜ்ரா’ என்று அழைக்கப்படும் கம்பு, கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.

    அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

    * அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.

    * கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

    * கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், காலை / மதிய உணவில் இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது.

    * அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள `அமைலோஸ் அமைலோபெக்டின்’ (Amylose Amylopectin) அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.

    * சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.

    * டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். இது தேவை இல்லை. சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

    * கம்பு, செல்கள் பாதுகாப்புக்கு உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

    கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
    Next Story
    ×