search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரைப்பை புற்றுநோய்
    X
    இரைப்பை புற்றுநோய்

    இரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி?

    இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப காலங்களில் எந்தவிதமான அறிகுறியும் இருக்காது புற்றுநோய் முற்றிய நிலைக்கு வந்த பிறகுதான் வயிற்றுவலி பசியின்மை வாந்தி மற்றும் எடைகுறைவு ஆகியவை ஏற்படும்.
    உலக அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கின்றனர். புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் புற்றுநோய்க்கான சிகிச்சைமுறைகளை பரப்புவதற்காகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ந்தேதி உலகம் முழுவதும் புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

    புற்று நோய்களில் இரைப்பை புற்றுநோய் முக்கியமானது. .உலக அளவில் இரைப்பை புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம். வளர்ந்த நாடுகளில் கடந்த 70 ஆண்டுகளில் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து இருக்கிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இதற்கு நேர்மாறாக உள்ளது. பாதுகாப்பற்ற குடிநீரை அருந்துவதாலும், சிறிய வீட்டில் அதிக நபர்கள் வசிப்பதாலும், கழிவறையை சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும், கைகளை சோப்பு போட்டு கழுவாததாலும், குளிர்சாதன பெட்டிகளில் உணவு வகைகளை வைத்துவிட்டு பின்னர் அதை பயன்படுத்துவதாலும் புற்று நோயை உருவாக்கும் பாக்டீரியாக்கள் உடலில் ஊடுருவ காரணமாகி விடுகிறது.

    எச்.பைலோரி தொற்று இரைப்பை புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்தக் கிருமியை கிளாஸ் ஒன் கார்சினோசன் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருக்கிறது இந்த பாக்டீரியா ஒருவரின் உடலில் புகுந்து அவரின் இரைப்பையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அது நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்கு மட்டும் அல்லாமல் குடல் புண்களுக்கும் எச்.பைலோரிதான் முதல் காரணம்.

    புகைப்பிடிப்பவர்களுக்கு இரைப்பை புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் மரபு வழியாக குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் நோய் வரலாம். இவைகளைத்தவிர அதிகம் உப்பு உள்ள உணவுகளை பயன் படுத்துவதாலும் இந்நோய் வர ஏதுவாகிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் இந்நோய் வரசாத்தியக்கூறுகள்இருக்கிறது, கேஸ்ட்டிரிக் பாலிப் ஆடினோ மேட்டஸ் பாலிப்புக்கள் என்றல் இரைப்பையில் காளான்கள் பூமியிலிருந்து கிளம்பி வருவதுபோல சின்ன வளர்ச்சிகள் தென்படும். இவைகள் வளர்ந்து புற்று நோயாக மாறலாம். சாதாரண இரைப்பைப் புண்கள் புற்று நோய்களாக மாறுவதில்லை.

    இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப காலங்களில் எந்தவிதமான அறிகுறியும் இருக்காது புற்றுநோய் முற்றிய நிலைக்கு வந்த பிறகுதான் வயிற்றுவலி பசியின்மை வாந்தி மற்றும் எடைகுறைவு ஆகியவை ஏற்படும்.

    இந்த நோய் இருக்கிறதா என்பதை எண்டாஸ் கோப்பியை உபயோகித்து இரைப்பையின் உள்பகுதியை கண்கூடாக ஆராய்ந்து துல்லியமாக கண்டு பிடிக்கமுடியும். எண்டாஸ் கோப்பி கருவியின் மூலமாக இரைப்பையில் சந்தேகமாக தெரியும் இடத்திலிருந்து பலமுறை திசுக்களை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தினால் புற்று நோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது தெரிய வரும் மேலும் சி.டி. ஸ்கேன் உதவியினாலும், எண்டாஸ்கோப்பி அல்ட்ரா சவுண்டு மூலமாகவும் புற்றுநோய் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    இந்தநோய்க்கு அறுவை சிகிச்சை தான் பலன் தரும். புற்றுநோய்க்கு என்று உபயோகப்படுத்தும் சிறப்பு மருந்துகளையும் பயன்படுத்துவர். சில சமயங்களில் ரேடியோதிரபிக்கும் இடம் உண்டு. இரைப்பை புற்று நோய்க்கு இரண்டு முறையில் சிகிச்சை அளிக்கலாம் :இந்த நோயை ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைமேற்கொண்டு புற்றுநோயை முழுதும் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும் பாலான சமயங்களில் இது நிகழ்வதில்லை. அடுத்த வகை நோய் உள்ளவரின் அறிகுறிகளை மட்டும் குறைக்க செய்யும் முறை.

    இந்த வகை சிகிச்சை பேலியேட்டிவ் கேர் என்று சொல்லப்படும். உதாரணமாக இரைப்பைப் புற்று நோய் உள்ளவர்களுக்கு அடைப்பு ஏற்பட்டு வாந்தி அடிக்கடி ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாக நிவராணம் கொடுக்க முடியும். இந்தப் புற்று நோய் ஜப்பான் நாட்டில் அதிக அளவில் காணப்படுவதால் அங்கு உள்ளவர்களுக்கு தீவிரமாக எண்டாஸ்கோப்பி கருவி மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்கின்றனர் இதனால் அவர்கள் நல்லபலன்களை பெறுகிறார்கள்.

    எச்.பைலோரி கிருமி தொற்று மக்களிடையே பெரும்பாலோருக்கு இருப்பதால் 50 வயதிற்கு மேல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுடன் வந்தால் எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்து சந்தேகப்பட்டால் பயாப்சி எடுத்து பரிசோதனை மூலம் எச்.பைலோரி தொற்றையும் மற்றும் புற்று நோய் மாற்றத்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதா என்பதறிந்து சிகிச்சை செய்ய முடியும். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்று பிரச்சினை ஏற்பட்டால் செரிமானத்துறை சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.உணவில் பழங்கள் காய்கறிகளை போதுமான அளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் (உதாரணம்;ஊறுகாய், கருவாடு). அதிக அளவில் மது அருந்துதல் கூடது. உடல் பருமன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெருங்கியஉறவினர்களை திருமணம் செய்யக்கூடாது.நெருங்கிய உறவினர்களில் புற்றுநோய் இருந்தால் மற்றவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். மேற்கண்ட முறைகளைக் கையாண்டால் இரைப்பை புற்றுநோய் ஏற்படுவதை பெருமளவில் தவிர்க்க முடியும் என்பது உறுதி. 50 வயதிற்கு மேல் வயிற்றுவலி செரிமானக்கோளாறுகள் இருப்பின் காலம்கடத்தாமல் சிறப்பு மருத்துவரை அணுகுவது அவசியம்.

    குடலில் புண் ஏற்பட்டால் பெரும்பாலும் வயிற்றுவலி ஒரு முக்கிய அறிகுறியாகும். ஆனால் வயிற்றுவலி உள்ளவர்களுக்கு எல்லாம் குடலில் புண் இருக்க வேண்டும் என்பதில்லை. வயிற்றில் முக்கியமாக இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல்,கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம், சிறுநீரகங்கள் மற்றும் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ளன. வயிறு என்ற வார்த்தைக்கும் இரைப்பை என்கின்ற வார்த்தைக்கும் பொருள் ஒன்று அல்ல. இரைப்பையை தீனிப்பை என்றும் குறிப்பிடலாம். மேலே குறிப்பிட்ட பல உறுப்புகள் நோயால் பாதிக்கப்பட்டால் வயிற்று வலி வரக்கூடும். வயிற்றுவலிக்கு மருத்துவர்களை அணுகுபவர்களில் குடல்புண் ஒருகாரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

    உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய இடங்களில் புண்கள் ஏற்பட்டாலும் சிறுகுடலின் முன்பகுதியில் உண்டாகும் புண் கவனிக்கத்தக்கது. சிறுகுடலின் முன்பகுதிக்கு டியோடினம் என்று பெயர். இவ்விடத்தில் புண் இருந்தால் அதை டியோடினால் அல்சர் என்று கூறப்படும். இப்புண் தனித்தன்மை வாய்ந்தது. இதை பெப்டிக் அல்சர் என்று கூறலாம். பெப்டிக் அல்சர் இரைப்பையில் காணப்பட்டால் அதற்குப் பெயர் கேஸ்ட்லீஜீக் அல்சர். இவ்வகையான புண்கள் ஆரம்பகாலங்களிலிருந்து இரைப்பையில் சுரக்கும் அமிலம் கலந்த நீர் மேலும் பெப்சின் என்கின்ற என்சைம்களோடு தொடர்பு உள்ளதாக கருதிவந்தால் மேலே குறிப்பிட்ட பெயர்கள் பெற்றன.

    உணவுக்குழாய்க்கும் டியோடினத்திற்கும் இடையில் உள்ள பெரிய உறுப்பு தான் இரைப்பை நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் நன்றாக கூழ்மாதிரி அரைக்கப்படும். பிறகு சிறிது சிறிதாக டியோடினத்திற்குள் செலுத்தப்படும். உணவு சுமார் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை இரைப்பையில் இருக்கக்கூடும் சிறுகுடல் நீளமான (பல அடிகள்) உறுப்பு.

    டியோடினால் அல்சரின் அறிகுறிகள் முக்கியமாக வயிற்றுவலி, மிதமான வலி வயிற்றின் உள்ளே மெல்லுவது போல் இருக்கும். குறிப்பாக வயிற்றில் உணவு இல்லாத சமயத்தில் தெரியும். வலி இருக்கும்போது உணவு எடுத்துக்கொண்டால் வலி குறைந்து விடும். சிலருக்கு நடுநிசியில் வலியினால் தூக்கம் கலைந்துவிடும். அந்த சமயத்தில் பிஸ்கெட் போன்ற உணவு எடுத்துக்கொண்டால் வலி குறைந்துவிடும். உரிய மருந்துகள் எடுக்கவில்லையென்றால் வலி வாரக்கணக்கில் நீடிக்கும். சிலருக்கு முறையான சிகிச்சை பெறாததால் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஒன்று வாந்தியில் முன்நாள் உண்ட உணவு வெளிப்படும். சிலருக்கு ரத்தவாந்தியும் நேரிடலாம். ரத்தவாந்தி ஏற்பட்டால் அவசர சிகிச்சை தேவைப்படும்.

    டாக்டர். கோ. ராமர் முன்னாள் பேராசிரியர் செரிமானத்துறை தலைவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னை.
    Next Story
    ×