
நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரியுமா?
முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது? நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான பிணையாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக்கடன் பெற முடியாது. மாதாந்திரத் தவணையை தவறாது செலுத்த முடியும் என்றால் மட்டுமே தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.
ஓர் அவசரநிலை, அதற்காக உடனடியாக பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேலைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இக்கடனுக்கு குறைவான ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். ‘பிராசசிங்’ நேரமும் குறைவு. உடனடியாக முடிக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தனிநபர் கடனை நாடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் கடைசி வழியாக மட்டுமே இது இருக்க வேண்டும். ஆனால் ‘கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுப்பதற்கு முன்னால் தனிநபர் கடனைப் பற்றி யோசிக்கலாம். சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்கு தனிநபர் கடன் பெறுவது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும்.
தனிநபர் கடன் என்றதும் எல்லோருக்கும் இயல்பாகவே அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் பல கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்ததுதான் தனிநபர் கடன். எனவே, பிற கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் நன்றாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பின்னர், இவை பற்றியெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை? என்று வங்கி ஊழியருடன் மல்லுக்கு நிற்காதீர்கள்.