search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    • மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.

    பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஒரு காட்டுயானை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும், இங்குமாக நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். பஸ் மற்றும் காரில் சென்ற பயணிகள் சிலர் காட்டுயானையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் இருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்கு ப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்ப திவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.

    இந்தப் பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராஜ கோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் டோல்ப்ரீ எண் மூலம் 21 புகாரும், சி-விஜில் செயலி மூலம் 10 புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.93 லட்சத்து 23 ஆயிரத்து 78 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இது தேர்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களின் பணியை செய்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேலே ரொக்கம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். நாடாளு மன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவல ர்களுக்கான முதல் பயிற்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

    10 ஆயிரத்து 970 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சியில் அவர்களுக்கு அஞ்சல் வாக்குப்படிவம் வழங்கப்படும். அதற்குப் பின்னர் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். சத்தியமங்கலத்தில் குன்றி, கடம்பூர், குத்தியாலத்தூர், தாளவாடி மற்றும் பர்கூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் உள்ள வாக்குச்சாவடி களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணிய மர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஈரோடு நாடா ளுமன்ற தொகுதிகளில் பதற்றமான தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இன்று தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோபி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 656 பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி (59) என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபி அருகே உள்ள சிறுவலூர் மணியக்காரன் புதூர் என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.64,000 பணம் இருந்தது.

    சிவகிரியில் இருந்து வந்த விவசாயி துரைசாமி என்பவர் கவுந்தப்பாடியில் டிராக்டர் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலை குழுவினர் கோவில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபி அருகே உள்ள கோவை பிரிவில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் ரூ.98 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தவிட்டுபரம்பில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பதும், ஈரோட்டில் இருந்து வாழைத்தார் வாங்கி செல்வதற்காக பணத்துடன் வந்திருப்பதும் தெரிய வந்தது.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • தொகை அதிகம் என்பதால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரேபாளையம் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

    அரசு பஸ்சில் இருந்த ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது பின்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பேக் அணிந்திருந்தார். அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.35 லட்சம் இருந்தது.

    இது குறித்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் தாவணி கரையைச் சேர்ந்த ஹரிஷ் (வயது 32) என்பதும், கோவையில் தான் நிலம் வாங்கி உள்ளதாகவும் இடம் விற்பனை செய்த நபருக்கு இந்த பணத்தை எடுத்து செல்வதாகவும் அவர் கூறினார்.

    எனினும் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    தொகை அதிகம் என்பதால் இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்று பணத்தை பெற்றுக்கொண்டனர்.

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. அதிவேகம் காரணமாக சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களை தாண்டி, கோவை நோக்கி செல்லும் சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரும், இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கேரளா மாநிலம் கோத்தப்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சு மனியப்பன் (26) மற்றும் ஹனிசேவியர் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    தூக்க கலக்கத்தில் எதிர்திசையில் உள்ள சாலையின் நடுவே சென்றதால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் முழுவிபரங்கள் குறித்தும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சுயேட்சையாக போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை சுவற்றில் ஒட்டும் பணி நடந்தது.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,

    வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ வந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்படும் என்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் நாளை முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
    • கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம் பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (38). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கருப்புசாமி நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும் உங்கள் கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்ததால் உங்கள் கடையை சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அந்த வாலிர் உங்கள் மீது வழக்கு போடாமலும், மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

    இதனால் பயந்து போன கருப்புசாமி கடையில் இருந்த பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என கருப்புசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் காட்ட முடியாது எனக்கூறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கருப்புசாமி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து கருப்புசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலராக நடித்து பணத்தை பறித்து சென்றவர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் நவீன்குமார் (29) என தெரிய வந்தது. பின்னர் நவீன்குமாரை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழு வதும் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது.


    ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வியாபாரி சசிகுமார் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு வெட்டுக்காடு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 3 லட்சம் பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் இன்று காலை பறக்கும் படையினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார்.


    அவரை நிறுத்தி சோதனை செய்தபோது 89 பட்டு புடவைகள், 6 சுடிதார், ஒரு நைட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.

    அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கஜேந்திர ராவ் என்பதும், திருமண வீட்டிற்க்காக ஈரோட்டிற்கு வந்து புடவைகள் வாங்கி சென்று மீண்டும் கர்நாடகா செல்வதற்காக ரெயிலில் ஏற வந்ததாக கூறினார்.

    ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரது புடவைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், புடவைகளை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் உதவி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    ×