search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
    X
    விசாகத்திருவிழாவையொட்டி கோவில் முன்பு குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

    • திருச்செந்தூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் காட்சியளித்தனர்.
    • இன்று இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் வைகாசி திருவிழாவும் ஒன்று.

    விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாகத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    கொரோனா கட்டுப்பாடுகள் பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகாசி திருவிழா வழக்கம் போல் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் நேற்று முதலே குவியத்தொடங்கினர்.

    திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூரில் திரண்டனர்.

    திருச்செந்தூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் காட்சியளித்தனர்.

    இதனால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டது. பெரும்பாலான பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.


    அலங்கரிக்கப்பட்ட மினிலாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருகப்பெருமானின் உருவ படத்தை வைத்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்தனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கடலில் பாதுகாப்பு வளையம் அமைத்து கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்நது சுவாமி ஜெயந்தி நாதர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபராதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×