search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா
    X

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா

    • இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.
    • வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

    5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.10 மணிக்கு சுவாமி சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.35 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை வந்தடைகிறார்.

    பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார். இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    10-ம் திருநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×