search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா: சண்முகர்-வள்ளி-தெய்வானைக்கு குடம் குடமாக பாலாபிஷேகம்
    X

    சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடந்த காட்சி.

    திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா: சண்முகர்-வள்ளி-தெய்வானைக்கு குடம் குடமாக பாலாபிஷேகம்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் பால் காவடி, பறவைக் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனும் பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் விசாகத் திருவிழா உள்திரு விழாவாக நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் இன்று நடைபெற்ற வைகாசி விசாக திருவிழாவில் வழக்கம் போல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்புக்கட்டுல் நடைபெற்றது. தினமும் இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சண்முகர் சன்னதியில் காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கட்டளைதாரர் பாலாபிஷேகமும் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் விசாக கொறடு மண்டபத்தில் காலை 6 மணிக்கு எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கொண்டுவந்த நூற்றுக்கணக்கான பால்குடங்கள் மூலம் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, சிவகங்கை, விருதுநகர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி, பறவைக் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.


    விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, பெரியரத வீதி எங்கும் பால்காவடி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். கோவில் 16 கால்மண்டபம், சன்னதி தெரு, பெரியரத வீதி மற்றும் கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் கேமிராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலுக்குள் ஆங்காங்கே மின் விசிறிகள், ஏர்கூலர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாலாபிஷேகம் செய்யும் பால் கோவில் சஷ்டி மண்டபம் வழியாக வெளியே பைப் லைன் அமைக்கப்பட்டு அங்கு பக்தர்கள் பால் பிடித்து செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது.

    விசாக திருவிழாயை முன்னிட்டு மதுரை மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக திருப்பரங்குனறம் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    மதுரை மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.சுகாதாரத்துறையினர் முதலுதவி மையங்களை அமைத்து பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்தனர்.விழாவை முன்னிட்டு சில ஆன்மீக அமைப்பினர் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×