search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி
    X

    அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி

    • அம்மன் வீதியுலா நடைபெற்றது.
    • உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் கார்த்திக்கை தீபத் விழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் போன்றவை முக்கியமானதாகும்.

    இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்தார். இதையடுத்து சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாலையில் அம்மன் வளைகாப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வளைகாப்பு உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×