search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தக்கலை பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா தொடங்கியது
    X

    கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.


    தக்கலை பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா தொடங்கியது

    • பிப்ரவரி 5-ந்தேதி வரை தினமும் மவுலீது ஓதுதல் நடக்கிறது.
    • 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை தினமும் மார்க்க பேருரையாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழாவானது நேற்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நேற்று தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வரை தினமும் இரவு மவுலீது ஓதுதல், வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு மார்க்க பேருரையாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மதுரை தலைமை இமாம் முகமது ரபீக் மிஸ்பாகி, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி, செயலாளர் அப்துல் ரஹ்மான் பாகவி, காயல்பட்டிணம் செய்யிது அப்துற்றஹ்மான், தக்கலை தலைமை இமாம் முகம்மது சலீம், மேலப்பாளையம் ஹைதர் அலி உஸ்மானி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பீர்முகமது சாகிபு ஒலியுல்லா இறைவனை போற்றி எழுதி பாடிய ஞானப்புகழ்ச்சி பாடலை அவரது சமாதியின் அருகில் அமர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒருசேர பாடும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ந்தேதி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. நிகழ்ச்சியானது மறுநாள் அதிகாலை வரை தொடர்ச்சியாக நடக்கிறது. அதைதொடர்ந்து அன்று மாலை 4.30 மணிக்கு பொது நேர்ச்சை, 8-ந்தேதி இரவு 8 மணிக்கு மூன்றாம் சியாரத் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லீம் அசோசியேஷன் தலைவர் வக்கீல் அப்துல் ஜப்பார் தலைமையில் துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் முகமது ரபீக், முகமது ரஷீத், விழாக்குழு கன்வீனர் மாகீன் அபுபக்கர், செயலாளார் ஷாகுல் ஹமீது, பொருளாளர் காஜாமைதீன், இணைச்செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×