search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு காணும் கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி கோவில்

    • அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன.
    • அங்காள பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தன்னை நாடி வரும் பக்தா்களுக்கு நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியான வாழ்வையும் அருளும் அங்காளபரமேஸ்வரி அம்மன் இப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஷ்ட தெய்வமாக விளங்குகிறார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9.25 முதல் 10.25 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6-ம் கால யாகபூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. குடமுழுக்கையொட்டி நேற்று காலை 4-ம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதியும் நடந்தது.

    மாலை 5-ம் கால யாக பூஜை தொடங்கியது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக யாக சாலைக்கு வந்தனர். தொடர்ந்து வேள்வி பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் துர்க்கா ஸ்டாலின் கலந்து கொண்டு வழிபட்டார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பூண்டி கலைவாணன், ஒன்றியக்குழு தலைவர்கள் சீர்காழி கமல ஜோதி தேவேந்திரன், நந்தினி ஸ்ரீதர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கையொட்டி கீழப்பெரும்பள்ளம் அங்காளபரமேஸ்வரி கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கையொட்டி பொது சுகாதாரத் துறையினர் நேற்று மருத்துவ முகாம் நடத்தினர். இதில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் சிகிச்சை பெற்றனர். குடமுழுக்கில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக நெடுஞ்சாலை துறையினர் சீர்காழி முதல் பூம்புகார் வரை தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழப்பெரும்பள்ளம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(திங்கட்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளதால் கீழப்பெரும்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காள பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் உள்ளது.

    குடும்பத்தில் குழப்பம், நோய், இருந்தால் அங்காளபரமேஸ்வரியை மனதில் நினைத்து வழிபட்டால் அவர் வந்து பக்தர்களின் துன்பத்தைத் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் அவர்களின் துன்பம் நீ்ங்கும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×